Skip to main content

மாடுகள் மலைகள் ஏரிகள்

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 1





 நியூ சிலாந்து செல்வதற்கான முன்னேற்பாடுகள் ஆறு மாதங்களுக்கு முன்னாலேயே தொடங்கிவிட்டது. டிசம்பர் 12 தொடங்கி 24 வரையிலான சுற்றுலா. ஆனால் இரண்டு நாட்கள் பயணத்திலேயே கழிந்துவிடும். விமானப் பயணம் பதினொரு மணிநேரம். கெடாவிலிருந்து காரில் கே.எல் .ஐ ஏ விமான நிலையம் செல்வதற்கு ஐந்து மணிநேரம் , விமான நிலையத்தில் சுங்கச் சாவடிக்காக காத்து நின்று எல்லா பரிசோதனையும் முடிய மூன்று மணி நேரம்,  விமானப் பயணம் பதினோரு மணி நேரம், ஆக்லாந்து விமான நிலையத்தில் குறைந்தது முக்கால் மணி நேரம் என களைத்துப்போய் விடுதி கட்டிலில் சாய  கிட்டதட்ட  ஒருநாளை விழுங்கிவிடும்.

ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செல்லும் போது இந்தியா தென்கிழக்காசிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளொம்போது உண்டாகும் பதற்றம் ஏற்படுவதில்லை. இந்தியாவில் திருச்சி, டில்லி, சென்னை விமான நிலையங்களில் சுங்கச் சாவடி பரிசோதனைகள் நம்மை சாகடித்துவிடும். அதனால்தான் அதற்குப் பெயெர் சாவடி. திருச்சி விமான நிலையத்துக்குள் நுழைவாயிலில் நீங்கள் முதலில் வரிசை பிடித்து நிற்க வேண்டும். கோடை காலக்  கொடுமைமைகள் ஒரு பக்கம், ஏகே 47 ஏந்தி உங்கள் ஸ்கேன் செய்யும் உக்கிரப்பார்வை ஒருபுறம். டில்லியிலும் அப்படித்தான். ஏதாவது தாஸ்தாவேஜ் கோளாறு இருந்தால் நமக்கும் பதற்றம் மேலிட்டுவிடும். திருச்சயில்  ஒருமுறை என்னோடு வந்த நண்பர் நுழைந்துவிட்டார், சிறு பிரச்னை காரணமாக என்னை நுழைய விடவில்லை. வெளியே கொளுத்தும் வெயில். வரிசை நீண்டுகொண்டிருந்தது. பறக்கும் நேரம் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளே நண்பர் என் பெயர் பயணப் பட்டியில் இருப்பதை உறுதி செய்துவிட்டு விமான அதிகாரியை அனுப்பினார். அவர் ஆதாரம் காட்டியவுடந்தான் உள்ளே நுழைய விட்டார்கள்.  என்னால் விமானக் கடத்தலோ, வெடி குண்டு அபாயமோ இருக்காது என்று உறுதியாக நம்பிய பின்னரே என்னை அனுமதித்தார்கள்.  நான் பதற்றத்தில் முகம் வெளிறி இருந்தது வேறு விமானக் கடத்தல் பேர்விழி அடையாளத்தை நிறுவியது ஒரு புறம்!
 ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இந்தக் கெடுபிடி இல்லை. ஐரோப்பாவில் ஐந்தாறு நாடுகளுக்கு   பயணம் மேற்கொண்ட பிறகும் சமீபத்தில் நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட போதும் இந்தக் கழுத்தை நெறிக்கும் கெடுபிடி இல்லை.  இந்தியா போன்ற மத அடிப்படைவாதம்  மிகுதியாகிவிட்ட  நாடுகளில்  இதுபோன்ற  நெருக்கடிளைச் சந்திக்க வேண்டியுள்ளது.  

பயண நாள் நெருங்க நெருங்க எனக்கு கால் வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது. பி கம்ப்லெக்ஸ்  வைட்டமின் மாத்திரைகள் , நீண்ட நேரம் நின்றால் .நடந்தால் உண்டாகும் வலிக்கு நிவாரணியாகிவிடும் என்று ஒரு டாகடர் மருந்தெழுதிக் கொடுத்தார். ஆனால் அது மூன்று மாதங்களுக்கு மட்டுமே கேட்டது. டாக்டர் சண்முக சிவாவை அழைத்து விபரம் சொன்னேன். இது இனிப்பு நீர் வியாதி உள்ளவர்களைத் தாக்கும் நோய் என்றார்.  இன்ன நோய்தான் என்றில்லாமல் சகலவித  தாக்குதல்களை, எல்லா முனையிலிருந்து கட்டவிழ்க்கும் நோய்க்கூறுகளை உள்ளடக்கியது  நீரிழிவு. நியுரோ பயோன், நியுரோட்டில் இரண்டு நரம்பு சம்பத்தப்பட்ட வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடச் சொல்லிவிட்டு எதற்கும் எலும்பு நரம்பு சம்பந்தப்பட்ட  நிபுண மருத்துவரைப் பார்க்கச் சொன்னார். சரி போய்ப் பார்க்கலாம் என்றால் பயண ஏற்பாடுகளும் பிற வேலை பலுவும் டாக்டரைப் பார்க்கும் சந்தர்ப்பத்துக்கு  எதிராகவே இருந்தது. வேலைகள் ஒருபுறமிருக்க , பயணத்துக்கு முதல் நாள் போய்ப்பார்த்தேன். அவர் முதுகெலும்புத் தண்டில் உள்ள நரம்பு மண்டலம் சுருங்கிக் கொண்டதால் கால்களுக்கும் போகும் ரத்தம் போதுமளவுக்கு பட்டுவாடா ஆகவில்லை. வலியின் காரணம் அதுதான் என்றார். நான் எதற்கும் எம் ஆர் ஐ எடுத்துக் கொள்ளலாமா என்றேன். இப்போது வேண்டாம், எம் ஆர் ஐ எதாவது வில்லங்கமாகக் காட்டினால் உங்கள் பயண மகிழ்ச்சி கெட்டுவிடும் , பயணத்தை முடித்துவிட்டு வாருங்கள் என்றார்.
இந்த பயணத்துக்குக் குறுக்கே நின்றது எனக்கு உவப்பான இலக்கிய நிகழ்ச்சி ஒன்று .
ஜெயமோகன் நண்பர்கள் நடத்தும் விஷ்ணுபுரம் விருதுவிழாவில் கலந்துகொள்ள விருப்பம் கொண்டிருந்தேன். குத்துமதிப்பாக டிசம்பர் தேதிகளில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வார்கள். நான் ஜெவுக்கு கடிதம் எழுதி 12 ம் தேதிக்கு முன்னரோ அல்லது 25ம் தேதிக்கு பின்னரோ விழாவை ஏற்பாடு செய்தால் நான் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றேன். ஆனால் என் துரதிர்ஸ்டம் 16/17 தேதிகளில் நிகழ்ச்சி உறுதியானது. மற்ற தேதிகளில் மண்டபம் கிடைப்பதில் சிக்கல் என்றார்கள். என் சிறுகதைத் தொகுதி தமிழ் நாட்டில் விஷ்ணுபுரம் விழாவில் வெளியிடும் திட்டம் நான் கலந்து கொள்ள முடியாமையால் கைவிடப்பட்டிருந்தது. எழுதியவர் இல்லாமல் அவருடனான உரையாடல் நடைபெறாது என்ற காரணத்தால் விஷ்ணு புர விழாவில்.  நூலாக்கி வெளியிடும் திட்டம் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. என்னளவில்  அது ஒரு பெரிய  பின்னடைவு. இருப்பினும் மலேசிய எழுத்தாளர் சீ. முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கியமை மிகுந்த மகிழ்ச்சிக் குரியது. என் கனிந்த வாழ்த்துகள் அவருக்கு.  அந்நிகழ்வில் ம. நவீன் மலேசிய இலக்கிய வளர்சிதை மாற்றத்தையும் , அதன் வழி நமக்கான இலக்கிய அடையாளத்தை நிறுவியமையும்  இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது எனக்கு.
பன்னிரெண்டாம் தேதி காலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பிவிட்டோம். அன்று நள்ளிரவில் பயணம். பதினோரு மணி நேரம் விண்ணில்  பறக்க வேண்டும் என்று தெரிந்தபோதே களைப்பை உணரத் தொடங்கினேன். பதினோரு மணிநேரம் என்ன செய்வது? நெடுநேரம் தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் இல்லை எனக்கு. அரை மணி நேர வாசிப்புக்கு ஒருமுறை பராக்குப் பார்த்துவிட்டு தொடர்வேன். ஒரு மொழிபெயர்ப்பு நூலான பயணம் நூலைக் கையில் வைத்திருந்தேன். சிரியா எழுத்தாளர் சமர் யாஸ்பெக் எழுதியது . சிரீதர் ரஙகராஜன் மொழியாக்கம்,.எனக்குப் பயணத்தில் தூக்கம் வருவதில்லை.  ஐந்தாறு  ஏடுகள் வாசித்ததும்.  உறக்கம் சுழழற்றியது. எனக்குப் பெரும்பாலும் பயணத்தில்  உறக்கம் வருவதில்லை. எத்தனையோ ஆயிரம் அடிக்கு மேல் விமானம் பறந்தால் நிமதியாகத் தூங்க முடியுமா என்ன?  ஆனால் இம்முறை அபூர்வமாக தூக்கம் வந்தது. ஏர் ஏசியா தொலைதூரப் பயணத்திலும் தொலைக்காட்சி வசதி இல்லை. ஆனால் கைப் பேட் (pad ) வாடகைக்குத் தருகிறார்கள். பயணிகளிடமிருந்து எப்படியெல்லாம் சம்பாதிக்க முடியும் என்பதை டோநி பெர்னாண்டஸிடமிருந்து பிற விமான நிறுவனங்கள் பாடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன.  


 ஆஸ்திரேலியா கோல் கோஸ்ட் ஒரு தற்காலிக நிறுத்தம். ஆஸ்திரேலிய குவின்ஸ்லேண்ட் மாநிலத்தில் பிர்ஸ்பன் அருகில் உள்ள நகரம் அது. குவின்ஸ் டௌன் என்ற பெயெருள்ள நகரம் நியூசிலாந்தின் தென்தீவிலும் ஒன்று உள்ளது . அழகிய ஏரிக்கரை நகரம் அது.  குயின் என்ற சொல் பொதுவாகவே எலிசபத் ராணியைக் குறிக்கும் சொல். ஆஸ்திரேலியாவும், நியூ சிலாந்தும் ஒரு காலத்தில் பிரிட்டிசார் ஆளுகைக்கு கீழ் இருந்ததால் , அவர் நினைவாக இந்தப் பெயர்கள்.  (தொடரும்)


Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின