Skip to main content

கோணங்கியின் மாந்திரீக உலகத்தினுள்

                               
   


      17.9.2017 வல்லினம் நிகழ்ச்சி முடிந்த மறுநாள் பாண்டியன் கோணங்கியை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்.
         பாண்டியன் காரிலிருந்து இறங்குவதற்கு முன்னர்  கோணங்கி நட்பு மிகுந்த புன்னகையோடு என்னைப் பார்த்தார். நான் இரு கைகளைக் கூப்பி வணங்கினேன் . அவரும் கைகளைக் கூப்பினார். அதிலிருந்தே  மனிதர்களை முதல் பார்வையில் நேசிக்கும் அப்பழுக்கற்ற தகவல் அனுப்பப் பட்டிருந்தது எனக்கு. காரில் இருந்து இறங்கியதும் கட்டிப் பிடித்துக் கொண்டார். அவருக்காக நான் தயார் செய்த தேநீரை கொண்டு வந்து மேசையில் வைத்தேன். கொஞ்சம் கூட சுணங்காமல் ‘தேநீரா?’ என்று மகிழ்ச்சி நிறைந்த மொழியோடு, அருந்த ஆரம்பித்தார். நான் தமிழகத்தில் தயார்  செய்யும் தேநீரின் சுவை குன்றாமல் செய்யப் பழகியவன். எனவே தேநீரே என் வரவேற்பு பானம்.
        என் வீட்டின் முன்புறத்தில் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலி சிறிய வட்ட மேசையைப் பார்த்து எழுதுவதற்கான மூட்  கிடைப்பதற்கு எழுத்தாளர் செய்த இந்த ஏற்பாடு பொருந்தும் என்று சொல்லி இருக்கிறார் பாண்டியனிடம். நான் பெரும்பாலும் அதில் அமர்ந்துதான் வாசிப்பேன். வெளிச்சம் உள்ள இடத்துக்கு இருக்கையை மாற்றியவாறே. இந்த கட்டுரையைக் கூட அதில் அமர்ந்துதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
         ‘ஒரு படம் எடுத்துக் கொள்ளலாம்’ என்றேன். அவர் அருகில் நின்று பாண்டியனை எடுக்கச் சொன்னேன். அவர்,’ இப்படி வேண்டாம் கைகளைக் பிடித்துக் கொண்டிருக்கும் போது எடுக்கட்டும்’,  என்றார். பின்னர் இன்னொரு பளிச்சிக்கு ஏதாவது,’ உரையாடுவது போல அமையட்டும் என்று, என்னானா எழுதியிருக்கீங்க, இப்போ என்ன எழுதிறீங்க?’ என்றார். நான் கேமாராவின் கண்கள் விழுந்துகொண்டிருப்பதை மறந்து பேசிக்கொண்டிருந்தேன். நான் அவரைச் சந்த்தித்து இரண்டொரு நிமிடத்தில் நடந்த அந்நியோன்யம் இது.
         பின்னர் காரில் புறப்படோம்.
          காரில் இராஜிந்திர சோழனின் ஆட்சி காலத்தில் இருந்த கல்வெட்டுகளையும் , அகழ்வாராய்ச்சி இருக்கும் பூஜாங் பல்லத்தாக்கு போகும் பாதை நெடுக்க பச்சை நிறத்தை மெய்மறந்து ரசித்தவேறே இருந்தார் . சிறு குழந்தையின் கொஞ்சமும் குறைந்துவிடாத  மின்னலிடும் ஆர்வமான சதா தேடும்   அவதானிப்புடன்.  எதை நோக்கினும் வியந்து விரியும் கண்கள் அவருக்கு.அவர் பார்வைக்குள் எப்போதும் ஒரு விநோதப் பறவை பறந்து கொண்டேயி ருந்தது.
         பூஜாங் பள்ளத்தாக்கை விட்டு வருவதற்கு முன்னாலேயே எனக்கு சரியான பசி எடுத்துக் கொண்டது. இனிப்பு நீருக்கு உடனே ஏதாவது சுவீட் இருந்தால் உடல் நடுக்கம் நிற்கும். அங்கே சிற்றங்காடிகள் அறவே இல்லை. நான் பாண்டியனின் கார் சாவியைக் கேட்டேன்.’ என் பையில் சுவீட் இருக்கு, பை பாக்கெட்டில் பாருங்கள்’ என்றார் கோணங்கி. நடுக்கம் ஆரம்பிக்கும் நிலை. பையில் கைவிட்டு எடுத்து வாயில் போட்ட சில நிமிடங்களில் சம நிலைக்கு வந்தேன்.
       வரலாற்று இடத்தைப் பார்த்துவிட்டு பீடோங் பயணம். அங்கே பாலமுருகன் காத்திருந்தார்.
         பீடோங் சிறிய பட்டணத்தில் இறங்கி சீன உணவுக்கடையில் மதிய உணவு. சீன உணவுத் தேர்வு கோணங்கியுடையது. காட்டுப் பன்றி, சிஸ்லிங் தௌபூ, கங்கோங் கீரை, மீன் தோம்யாம்,. அவர்க்கு முற்றிலும் புதிய உணவு. விரும்பி விரும்பி சாப்பிட்டார். பிரம்மாதம்.. பிரம்மாதம் என்று சொல்லிக் கொண்டே. ஒரு கருப்பு பீருக்கு பன்றி இறைச்சி அவருக்கு மிகுந்த சுவையூட்டிக் கொண்டிருக்கலாம். லேசான போதையில் அவர் இன்னொரு மீன் தோம்யாம் கேட்டார். புதியதாய்ப் பார்க்கும், பழகும், உண்ணும் எல்லாமே அவருக்கு  பேரின்பம் அளிக்கக் கூடியவை. நல்லாருக்கா என்று நாம் அவரைக் கேட்க வேண்டியதில்லை.  ஆமோதிக்கும் பாணியில் சதா தலையை ஆட்டிக்கொண்டே சுவைத்து உண்டார். கருப்பு பீர் சாதாரண பீரைவிட சற்று அல்கோஹோல் கூடியது. வெயில் வேளையில் அது தன் வேலையைக் காட்டிவிடும்.  ‘அண்ணே நீங்களும் ஊத்திக்குங்கோ என்றார்” .உவப்பான அருகாமையோடு அருந்துவதில்தான் மதுவின் சுவை அலாதியாகும்.ஆனால் நானும் அவரும் சேர்ந்து ஒரு பெரிய புட்டியை முடிந்திருந்தோம். ஒரு லிட்டர்.  தூக்கல் மிதமாகத்தான் இருந்தது. பாண்டியனுக்கு அவரின் உடல் மொழி அதீத மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும். முகம் நிறைந்த மலர்ச்சி.
       “என் மவளுக்குக் கல்யாணம். 16 வகை செட்டி நாட்டுச் சமையல்” என்றார். நீங்கள் செட்டியாரா என்றேன். இல்லை நான் கீழ் வகுப்பைச் சார்ந்தவன். கல்யாணச் சாப்பாடு மட்டும்தான் செட்டிநாடு” என்றார்.
       “ஈப்போ நிகழ்ச்சிக்கு சட்டை வேணும்.ரெண்டுதான் கொண்டாந்தேன்,” என்றார்`
        அவர் சைசுக்கு சட்டை என் அலமாரியில் தேடினேன். இரண்டொன்று தேரும் என்று நினைத்தேன். போட்டுப் பார்த்து ‘சேராதுண்ணே’ என்றார். தொடக்கத்திலுருந்தே நான் அண்ணனாகிப் போனேன் அவருக்கு.  இப்போது எனக்கு இரண்டு தம்பிகள். பாண்டியன் என் வீட்டு அருகில் இருக்கும் கடைக்கு அவருக்கான சைசில் சட்டையைத் தேடி ஓடினார். கிடைக்கவில்லை. அதைப் பெரிது படுத்தவில்லை. உடையை மாற்றறிக்கொள்வதிலோ, முகத்தைக் கழுவிக்கொள்வதிலோ அவருக்கு ஆர்வமில்லை. நான் நானாக இருப்பேன் என்பது போன்ற அலட்டலில்லாத மனநிலை.
         அடுத்து தைப்பிங்குக்கு ஓர் இலக்கியச் சந்திப்புக்குப் போகவேண்டும். நான் பயணத்தின்போது ஒரு அரை டின் பீரை நீட்டினேன். ‘ மனச புரிந்து நடக்கும் அண்ணா நீங்க, என்று சொல்லிக் கொண்டே வாங்கி வைத்துக் கொண்டார். “நெருக்கத்தில் போய்ச் சாப்பிடுங்க. மலேசிய வெகுசன இலக்கியத்தைச் சாட ஏதுவாக இருக்கும்,” என்றார் பாண்டியன்.
        15 பேர் கூடியிருந்தார்கள். வாணிஜெயம் ஏற்பாடு. நிகழ்ச்சியில் பேச்சு சுவாரஸ்யமாய் இல்லை. அவர் மேடைப் பேச்சாளர் இல்லை. 15 நிமிடத்தில் முடித்துக் கொண்டு திரும்பிவிட்டோம்.ஆனால் அதே மேடையில்    சுப்ர பாரதி மணியமும் இருந்ததுததான் முக நூலில் சூடான விவாதத்தை தொடக்கிவிட்டிருந்தது. தீவிரமும் வெகுசனமும் ஒரே மேடையில் இருந்தது சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கிவிட்டிருந்தது. ‘வுடு எல்லாம் எலக்கியம் தானே’ என்று மலேசிய வெகுசன பெரும்பான்மை அந்த விவாதத்தைப் புறந்தள்ளியது.
            தைப்பிங்கிலிருந்து திரும்பும் போது கூலிம் நெடுஞ்சாலையை மழை நனைத்துக் கொண்டிருந்தது. கார் விளக்கு வெளிச்சத் தீற்றலில் பளபளத்துக் கொண்டிருந்தது. மென்மையான இருள். அந்தி வேளையில், மழையும் பொழியும் பொழுதில் சாம்பல் திரையிட்டு மூடிக்கொள்ளத் தொடங்கியிருந்தது. கோணங்கி பையிலிருந்து இரண்டு அழைப்புக் கார்டை எடுத்தார். “தோ பாத்திங்களா மழை பெய்யுது, மெல்ல பச்சை மறையுது, பாலம் வருது, இந்த சில்லிட்ட தருணத்தில்தான், என் மகள் கல்யாணத்துக்கு அழைப்பு கொடுக்க சரியான நேரம்,”  என்று சொல்லிக் கொண்டே எனக்கும் பாலமுருகனுக்கும் இரண்டு அழைப்பை பெயரெழுதிக் கொடுத்தார். என் அழைப்பில் ‘அண்ணாவுக்கு’ என்று எழுதியிருந்தது. மணப் பத்திரிகை கொடுப்பதற்கு அவர் பார்த்த நாள் நேரம் நான் அனுபவித்த விநோத உணர்வை சொல்லத் தெரியவில்லை. கோணங்கியின் கவித்துவ மன எழுச்சியின் தருணம் அதுவென நினைக்கிறேன். தனக்கு மட்டுமே புலனாகும் ஆழமான குறியீட்டு மொழியை உள்வாங்கிக்கொள்ள என்னைப் போன்ற சராசரிகள்  அவருடைய மாந்திரீக உலகத்துக்குள் நுழைந்தே தீரவேண்டும். அதன் எல்லாத் திசைகளும் இப்போது அடைத்தே கிடக்கிறது!
       
  அவரை சுவாமி ஆஸ்ரமத்தில் விட்டு விட்டு வீட்டை அடையும் வரை, எனக்குள் கோணங்கி  விடாப் பிடியாய்க் குடியிருந்துவிட்டுத்தான் போனார்.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின