Skip to main content

கரகம்~ சிறுகதை


                                                  கரகம்

போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது.
“நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்.
பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள வாக்கு” என்று மேலும் தலைவர் சொன்னார்.
“வருஷா வருஷம் பாரிட் புந்தார்லேர்ந்து கரகப்பூசாரியா சாமிக்கண்ணுவதானே கூப்பிடுவோம். அவருகிட்ட என்னா கொறையக் கண்டாரு தலைவரு? சொல்லட்டும். ஏன் திடீர் பல்டி தலைவரே?” பக்கத்தில் அமர்ந்திருந்த காளிமுத்து அதற்கு ஆமோதிப்பதைப்போல் தலையை ஆட்டினார். கூட்டம் களைகட்ட ஆரம்பித்ததும் இன்னிக்குப் பொழுது அமர்க்களமா கழியப்போற சந்தோஷத்தில சிலர் நிமிர்ந்து உட்கார ஆரம்பித்தனர்.
“மொதநாளு ஒபயம், எல்லக்கட்டு, தீமிதி அன்னிக்குள்ள சாங்கியம், மறுநா சாமி ஊர்வலம், அப்புறம் மூனா நாளு இடும்பன் பூச எல்லாத்துக்கும் சேத்து அவரு பேசன தொக முன்னூத்து அம்பது வெள்ளி. அட்வான்ஸ் நூறு வெள்ளிய பேசி முடிக்கும்போது கண்டிசனா அதுக்கு மேற்கொண்டு காசுகொடுக்க முடியாது, கமிட்டியில முடிவெடுத்தாச்சின்னு சொல்லிட்டுத்தான் கையில காச வச்சேன். அப்போ ஆட்டுக்கடாயாட்டம் மண்டைய மண்டைய ஆட்டிட்டு, தீமிதிக்கி மொத நாளு அம்பது கூடப்போட்டு கொடுத்தாலே ஆச்சின்னு ஒத்தக்கால்ல நின்னாரு. கொடுக்கலன்னா நான் வரமாட்டென்னு அடம்பிடிச்சாரு. மறுநா திருவிழா. அதுக்கு மொத நா இப்படிப் பண்ணாரு. பெறவு நான் எவ்வளவோ நல்லபடிக்கு சொல்லியும் பாத்தேன், சண்டபிடிச்சும் பாத்தேன். மனுஷன் அசரலியே! காச வச்சிட்டுப் பேசு இல்ல, ந்தா நீங்க கொடுத்த முன் பணம் நூறு வெள்ளின்னு தூக்கிப் போட்டாரு. சாமி ஆடுற மனுஷன் இப்பிடி சுத்திவுடுராறேன்னு பதறிப்போயிட்டேன். நான் இல்ல வாக்கு கொடுத்தவன்? மானம் மரியாதைய காப்பாத்தணுமேனு என் சொந்தப்பணம் அம்பது வெள்ளியை அவருகிட்ட கொடுத்த பெறவுதான் ஆளு அசஞ்சாரு”.
“என்னா புதுக் கதையா இருக்கு. திருவிழா முடிஞ்சு கணக்கு வழக்கு பாக்குற கூட்டத்துல நீங்க இதச் சொல்லலியே?”
“என்னாத்தச் சொல்ல. அப்படியே சொன்னாலும் கமிட்டி ஒத்துக்குமா? தீமிதி முடிஞ்சி வரவு செலவு பேசி முடிச்சப்போ நாம திட்டம் போட்டதவிடச் செலவு கூடப் போயிடுச்சுன்னு கணக்கு வந்துருச்சி. இதுல நான் எப்பிடிக் கேக்க? எல்லாம் போட்டாச்சி… திருவிழாவும் முடிஞ்சிபோச்சு. என்னத்தக் கேக்க? சாமி கணக்குல போகட்டுமேன்னு வுட்டுட்டேன். மேக்கொண்டு அவ பாத்து கொடுப்பான்னு கேக்குல”
“அப்புறம் ஏன் பெருசுபடுத்தறீங்க. சாமிக்கண்ணு கரகப்பூசாரியா வந்த எந்த வருஷமாவது தீ எறங்குற நேரத்துல மழ வந்துருக்கா? அப்பிடியே இருட்டிக்கிட்டு வந்தாலும், கலைஞ்சி போயிடலியா? ஆத்தங்கரையில கத்திமேல நின்னு வாக்குக்கேட்டப்ப அதெல்லாம் ஒண்ணும் வராம ஆத்தா பாத்துக்குவான்னு வாக்குக் கொடுத்ததுக்கு அப்புறம், பொரண்டுக்கிட்டு வந்த மழ பொறப்பட்டு போயிரலியா? அவரு எல்ல கட்டுனதுக்கு அப்புறம் எஸ்டேட்டுல யாருக்காவது நடக்கக்கூடாத விஷயம் நடந்திருக்கா? சத்திய வாக்கு தந்தாருன்னா தந்ததுதான்! மறுபேச்சு இல்ல. அம்பது வெள்ளியப் பெருசா கணக்குல எடுத்துக்கிறீங்க?” சிலர் அவர் சொல்வது சரியெனத் தலையாட்டினார்கள். கூட்டத்துல எப்படியும் ஆமாம் சாமிகள் பாதிப் பேருக்கு மேல் தேறுவார்கள்.
“அதுசரி! வரமாட்டேன்னு உடும்புப்பிடியா நின்னப்ப, அந்த நேரத்துல எங்கபோயி கரகப்பூசாரிய தேடுறது? எல்லாக் கோயில்லேயும் அதே நேரத்துல திருவிழா. போய்க் கெஞ்சினாலும் வரமாட்டாங்க. வாக்கு கொடுத்திட்டவங்க எப்பிடி வருவாங்க? கடைசி நேரத்துல மென்னியப் பிடிச்சத இன்னும் மறக்க முடியல. அப்படியே நெஞ்சுலியே நிக்குது. அதான் வாணாங்கிறன். போன வருஷமே முடிவு கட்டிட்டேன், இவரு சரிப்பட்டு வரமாட்டாருன்னு”
“நீங்க முடிவு பண்ணிட்டா, நாங்க எதுக்கு அப்புறம்? புடுங்கவா…?”
“என்னா வார்த்த பேசுறாரு பாத்தீங்களா, கோயில்ல!”
“ச்சொம்மா இருங்க… நல்லத கெட்டதப் பேசி முடிக்கத்தான கூடியிருக்கோம், இங்க வந்துட்டு பிடுங்கவா வைக்கவான்னுட்டெல்லாம் பேசப்படாது.”
“எப்பயும் கூப்பிட்றவரையே கூப்பிடுவோம். புதுசா யாரையாவது கூட்டிட்டு வந்தா புது வில்லங்கமெல்லாம் வராதுன்னு என்னா நிச்சயம்”?
“அதான் கமிட்டி எல்லாம் கூடியிருக்கோம்ல, ஓட்டுக்கு விட்டுப்பாப்பம்! என்னா நா சொல்றது?”
“சாமிக்கண்ணயே கூப்பிடுவோம்னு ஒரு ஓட்டு அதிகமாகத் தூக்க, தலைவர் “நீங்களே நடத்திக்கிங்கன்னு” பேசாம எழுந்திருச்சிக் கிளம்பினார். ”ஒரு தலைவரு பேச்சுக்கு மதுப்பில்லேன்னா… நான் என்னா மசிருக்குத் தலைவரா இருக்கணும்? அவ பாத்துக்குவா உங்கள…”
“நான் பேசனப்ப என் வாய அடச்சிட்டீங்க இப்ப தலைவரே என்ன வார்த்த பேசுறாரு பாத்தீங்களா?”
“விடுப்பா… எரியிற வூட்ல எண்ணய ஊத்தாத! நீ ஒன்னு சொன்ன பதிலுக்கு அவரு ஒன்னு சொல்லிட்டாரு. சமமாயிடுச்சு, விட்று!
… … …
தீமிதி முடிந்து இரண்டாம்நாள் சாமி ஊர்வலம் களைகட்டியிருந்தது. வருடம் முழுதும் வீட்டுக்குள்ளே அடைபட்டுக்கிடந்த மனிதர்கள் உட்பட மொத்த ஜனமும் வீதிக்கு வந்திருந்தது. நடந்துமுடிந்த கூட்டத்துக்குப் பிறகு கோயில் தலைவர் மட்டும் வெளியில் தலைகாட்டவே இல்லை. திருவிழாவில் அவருக்கு வழங்கப்படும் வழக்கமான மரியாதையைக்கூட அவர் மறுத்திருந்தார். அவரது மோட்டாரை இரவு வேளைகளில் பக்கத்து டவுனில் பார்த்ததாக சிலர் பேசிக்கொண்டனர். தலைவர் இல்லாத திருவிழாவில் கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்ந்திருந்தன. இளைஞர்களை தாராளமாகப் பியர் பாட்டிலுடன் கோயில் சுற்றுவட்டாரங்களில் காணமுடிந்தது. சிலர் குளிர்பான பாட்டிலில் பியரை ரொப்பிப் பருகிக்கொண்டிருந்தனர்.
கின்னஸ் ஸ்டௌட் அன்று கடைகளில் விற்றுத்தீர்ந்திருந்தது. அவ்வூரில் வற்றாமல் பியர் சுரக்கும் கடைக்காரனின் அப்பா செத்துப்போக இரண்டுநாட்கள் கடை அடைப்பு என போர்ட் தொங்கியது, குடிகாரர்களை கடவுள் மேல் நம்பிக்கை இழக்க வைத்தது. சில கைகால் நடுக்கம் எடுத்தவர்கள் பியருக்குப் பதிலாக வேறு ஒரு உபாயத்தைத் தேடினர். உடம்பிலும் பையிலும் வலு உள்ளவர்கள் கொஞ்சம் பயணம் செய்து கள் தோப்பில் தஞ்சம் அடைந்தனர். இளைஞர்களுக்கு அவ்வாறு இல்லை. அவர்களுக்கு அந்நாள் முக்கியக்கொண்டாட்டம். கூட்டுக்கேளிக்கையே அவர்களின் உற்சாகம். களியாட்டத்திற்கான ‘வஸ்து’ இல்லாத பதைபதைப்பில் திணறியபோதுதான் பிரத்தியேகமாகப் பக்கத்து டௌனில் காய்ச்சி தருவிக்கப்பட்டதாக சம்சு அன்று அமோக விற்பனைக்கு வந்தது. யார் மூலம் எங்கிருந்து விற்பனையாகிறது என்றெல்லாம் ஆராய யாருக்கும் நேரமில்லை. பியரைவிட பலமடங்கு மலிவாக சின்னச் சின்னப் பைகளில் விரைவாக விநியோகம் கண்டது. சட்டென லயத்துச் சந்துக்குள் இருந்து பெரும் ஜனத்திரளுக்கு அதைக்கொண்டு வந்து சேர்க்க முறையான வணிகச்சந்தை தன்னிச்சையாய் உருவாகியிருந்தது.
வீட்டுக்கொல்லையின் கனகாம்பரமும், மல்லிகையும் சாமந்தியும் பெண்களின் கூந்தலில் இடம்பிடித்திருந்தன. வேர்வை மணம், சம்சு மணம், கின்னஸ் ஸ்டெளட் மணம் ஆகியவற்றோடு அந்த மலர்களின் மணமும் கலந்து சுற்றுப்புறத்தின் சூழ்நிலையை மாற்றியிருந்தது
படையல் தட்டுகள், தேங்காய், வாழைப்பழம், பூ, சூடம் சாம்பிராணி, வெற்றிலைப்பாக்கு, திருநீறு, பட்டுத்துணி, கொண்டைக்கடலை, பொங்கல் சோறு, தட்சணை எனப் பக்தர்களின் வசதிக்கேற்ப செம்மண் சாலையோரத்தில் வரிசை பிடித்திருந்தன. யானை வருவதற்கு முன்னரே மணியோசை முந்திக்கொள்வதுபோல கரகப்பூசாரியும் அலங்கார மாரியாத்தா வருவதற்கு முன்னரே ஆட்டக் காவடிக் கூட்டம் பட்டையைக் கிளப்பின. உடல் தொப்பறையாய் நனைந்து பிசுபிசுத்த ஆட்டக்காரர்கள் தண்ணீர் பந்தலில் நின்று இளைப்பாறினர்.
அவர்களின் பார்வை அனைத்தும் இப்போது கரகப்பூசாரி சாமிக்கண்ணு மேல் விழுந்தது. அவர் தலையில் சுமந்திருந்த கரகம் குழந்தை விளையாட்டு ராட்டினம்போல அநாமத்தாகச் சுழன்றது. கைகள் வளைந்தாட, கால்களாட, புஜமாட, புட்டமாட, புறமுதுகுமாட, கைகளாட, கழுத்தாட, விழிகளிரண்டும் புரண்டு புரண்டாட, கால் சலங்கையும் ஜதியோடாடியது. முகத்திலிருந்து வியர்வை சரம் சரமாய் நீர்க்கோடென ஓயாது விரைந்து கீழிறங்கியது. மார்பிலும் புஜத்திலும் பூசிய சந்தனம் கரைந்துகொண்டிருந்தது. குங்குமச் சிவப்பு தடயத்தை இழந்தவண்ணம் இருந்தது. திருநீறும் தன் அடையாளத்தை மொத்தமாய் இழந்திருந்தது. வேட்டியை இறுக்கியிருந்த மஞ்சள் சால்வை முதற்கொண்டு வியர்வையால் நனைந்திருந்தது. அவர் சுற்றிச்சுற்றி ஆடும்போதெல்லாம் அவர் கழுத்தில் தொங்கிய புலிநகத் தங்கச் சங்கிலியும், நான்கைந்து விரல்களில் போட்டிருந்த பச்சைக்கல் பதித்த மோதிரமும் ஒளிக்கீற்றை வீசியது. மாரியாத்தா அலங்காரம் தோத்துப்போச்சி போங்க! கரகப்பூசாரியைச் சுற்றிச் சூழ்ந்திருந்த கூட்டத்திலிருந்து சம்சு வாடை தூக்கலாகவே இருந்தது.
பத்து வெள்ளி வைத்த வீட்டுக்கு மட்டுமே கரகப்பூசாரி ஆடினார். ஏற்கனவே துரை வீட்டில் ஆடியதற்கு அவருக்குத் துரை ஐம்பது வெள்ளி வைத்திருந்தார். அங்கே அவர் கரகம் மாதிரி சுழன்று சுழன்று ஆடினார். கைவசம் உள்ள வித்தையெல்லாவற்றையும் கொட்டி ஆடினார். கரகம் தலையில் இருந்தபடியே பின்னால் வளைந்து ஐம்பது ரிங்கிட்டை நாக்கால் நக்கி எடுத்தார். வளைந்தபடியே கொக்கோ கோலா குடித்தார். கரகத்தைத் தலையிலிருந்து மறு தோளுக்கு லாவகமாய் மாற்றினார். ஐம்பது வெள்ளிக்காகக் களைத்தவர்தான் பிறகு ஆட்டத்தின் வேகம் குறைய ஆரம்பித்தது. கிராணி வீடுகளில் அவர் துரை வீட்டில் ஆடியது போன்ற வேகத்தைக் காட்டவில்லை. கொஞ்சம் சுதி குறைந்திருந்தது. லயத்துப் பக்கம் வந்தபோது தண்டல்கள் வீடுகளில் ஆடினார். ஆனால் கிராணி வீடுகளில் ஆடியது போன்ற வேகம் காட்டவில்லை. மற்ற வீடுகளில் சற்றுநேரம் ஆடுவதற்குப் பத்து வெள்ளி இருந்தால்தான் ஆட்டத்தைக் காட்டினார். இல்லையென்றால் சல் சல் என்ற சலங்கை ஒலியை மட்டுமே ‘இனாமாக’க் கொடுத்து விட்டு, வீடுகளைத் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தார். வீடுகளைக் கடக்கும்போதெல்லாம் அவர் கால்களில் பெண்கள் சிலர் சாஷ்டாங்கமாய் விழுந்து எழுந்தனர். வாகுதெரிய மஞ்சள் நீரில் நனைந்த உடம்பால் அவர் மயிர்க்கூச்செறிந்தார்.
தாய்மார்கள் சிலர் பயபக்தியோடு தங்கள் பச்சைக் குழந்தைகளை அவரின் ‘திருக்கைகளில்’ கொடுத்து திருநீறு வாங்கி ஆசீர்வாதம் பெற்றனர். அவர் கைக்குப்போன குழந்தைகள் தன் முகத்தில் பீதியை நிறைத்து வீரிட்டுக் கதற ஆரம்பித்து மீண்டும் தாயின் கரங்களுக்கு வந்ததும்தான் பாதுகாப்பில் இருப்பதை உணர்ந்து தங்கள் அழுகையை விசும்பலோடு சன்னமாய் நிறுத்திக்கொண்டன. இடுப்பில் கட்டிய மஞ்சள் துணியில் காசுப் பொட்டலம் கங்காருக் குட்டியாய் விம்மியிருந்தது. அந்தக்குட்டி வளரும் வாய்ப்பு பிரகாசமாய்த்தான் இருந்தது.
“பத்து வெள்ளி வச்சாதான் ஆடுவேன்னா. காசு இல்லாதவங்க என்னா பண்ணுவாங்க?”
“ஆடணும்னா பத்து வெள்ளி வய்யி. இல்லன்னா சொம்மா இரு.”
“சம்பளத்துக்கு இன்னும் பத்து நாளு இருக்கே. நாலு நாளைக்கு முன்னாலதான் தீமிதி பிளாஞ்சா போட்டாங்க. அதுலதான் சம்பளத்து வரைக்கும் ஓட்டணும். இதுல நான் ஆட்டத்துக்குப் பத்து வெள்ளி வச்சிட்டேன்னா சோத்துக்கு சொருகுதாளம் போட வேண்டியதுதான்.”
கரகப்பூசாரி ஆடிக் களைத்துப்போனது போன்று இருந்தார். அவருக்கு ஸ்டூலை நகர்த்திப் போட்டனர். அப்போது கண்களைக் கசக்க ஆரம்பித்தார்.
திடீரென்று கூட்டத்திலிருந்து சலசலப்பு எழுந்தது.
பொன்னுச்சாமி குதிக்கால் போட்டு உட்கார்ந்து “சரசு கண்ணு சரியா தெரில” என்று சொன்னவர் சற்று நேரத்தில் “வல்லுசாவே தெரில சரசு” என்று பதற்றம் நிறைந்து பெருங்குரலெடுத்தார். அப்போது அவரிடமிருந்து கிளம்பிய சம்சு நெடி காத்திரமாய் வெளிப்பட்டு சாமிக்கண்ணு மூக்கில் புகுந்தது.
கூட்டத்தில் இருந்த இன்னொரு கிழவனிடமிருந்தும் “ஐயோ, திடீர்னு பார்வ போயிடுச்சே” என்ற அவலக்குரல் கேட்டது. சாமிக்கண்ணு அவரை கஷ்டப்பட்டு உற்றுப்பார்க்க முயன்றார்.
“தாயீ மகமாயீ என்னம்மா இது ஒனக்கு என்னா கொற வச்சோம்?” என்ற நடுங்கிய கதறல் கூட்டத்திலிருந்து எழுந்தது. அவ்வாறு கத்தியவர் தன் மிக அருகில் இருக்கிறார் என கரகப்பூசாரியால் சம்சு நெடியை வைத்து அறிந்துகொள்ள முடிந்தது.
அடுத்தடுத்து சிலரும் “எனக்கும் இருண்டு போச்சே” என்று கண்களைக் கசக்க ஆரம்பித்தனர். வெளிச்சத்தையே பார்த்திருந்த கண்களுக்கு இருட்டு தரிசனமானால் உண்டாகும் குழப்பமும் கூச்சலும் கூட்டத்தைக் கதிகலங்க வைத்தது.
“தாயீ கண்ணாத்தா நீயே கண்ணப் பிடுங்கலாமா?” ஒன்னக் கொண்டாடுற நேரத்துலியா எங்கள இப்படிச் சோதிக்கணும்? என்ற ஒப்பாரிக்குரல் ஒரு கணம் கொண்டாட்டச் சூழலை புரட்டிப் போட்டது! ஏதோ விளையாட்டுக்குத்தான் குடிகாரன்கள் கூச்சலிடுகிறார்கள் என்று இருந்த கண்டுகொள்ளாதவர்கள் இப்போது பீதியோடு குரலிட்டவர்களை நோக்கி ஓடி வந்தனர்.
கூட்டமெல்லாம் பார்வை பழுதாகிப்போனவரிடத்தில் கொத்துக் கொத்தாய் நின்று கூச்சலிட்டுப் புலம்பி வெடித்துக் கொண்டிருந்தது. இது எதனால் நேர்ந்தது, என்று அப்போது யாராலும் யூகிக்கமுடியவில்லை. கூடியிருந்த மனிதக்கூட்டத்தில் அதிர்வலைகள். ஊர்ந்து நகர்ந்து கொண்டிருந்த ரதம் திக்பிரமை பிடித்தது போல நடு ரோட்டில் நின்று விட்டது.
இப்போது கரகப்பூசாரியும் கண்களை அதிகமாகக் கசக்கத் தொடங்கினார். அவருடைய தலையில் இருந்த கரகம் குடை சாய்ந்தது. அதில் இருந்த பூ வேலைப்பாடு சிதறி மண்ணில் விழுந்திருந்தது. அவர் “ஆத்தா” என்று கத்த வாயெடுத்து இரு கைகளாலும் ஓசை வெளிவராமல் பொத்திக்கொண்டார். கங்காரு பைபோல அவர் மடியில் கனத்த பணமூட்டை அவிழ்ந்து சில்லரைகள் நாலாபக்கமும் சிதறி ஓடின.


Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த