Skip to main content

பாரியின் ‘சத்து ரிங்கிட்` வறுமையின் குறியீடு .

               
             மலேசியச் சிறுகதைகள் ஒரு பார்வை    
     
            என் பள்ளிப்பருவம் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை. வீட்டில் வறுமை கோலோச்சியதே என் எல்லா பின்னடவுகளுக்கும் காரணமாக இருந்து வந்தது. என் தந்தையார் நான் படிவம் இரண்டு படிக்கும்போதே வேலையிலிருந்து ஒய்வு பெற்றிருந்தார். அம்மா உழைத்தால் மட்டுமே ஆறு வயிறுகளுக்கு உணவளிக்க முடியும்  என்ற இக்கட்டான நிலை. என் இடைநிலைப் பள்ளிக் கல்வி பொருளாதரச் சிக்கலால் இடையிலேயே முறிந்துவிடும் ஆபத்தை எந்த நேரத்திலும் எதிர் நோக்கிக்கொண்டிருந்தது. 1960 களில் அரசு இடைநிலைப் பள்ளிகள் ஸ்கூல் பீஸ் விதித்திருந்தது. கல்விக் கட்டணத்தை ஸ்கூல் பீஸ் என்று சொல்லும்போதுதான் அதன் கடுமை உறைக்கும் .மாதம் பன்னிரண்டு வெள்ளி என்று நினைக்கிறேன். ஆண்டு தோறும் பாடப் புத்தகங்களை பணம் கொடுத்து வாங்கியாக வேண்டும். எஸ்டேட்டிலிருந்து பள்ளிப் பேருந்துக்கு மாதம் கட்டணம் கட்டியாக வேண்டும். எனக்கு கைச்செலவுக்குக் காசு, பள்ளிப் பாட ஆசிரியர்கள் பாட வேளைக்கு உபயோகப்படுத்தும் பாட உபப் பொருட்களுக்குக் காசு என எங்கள் சக்திக்கு மீறிய செலவு என அன்றைய கல்வி முறையே சொற்ப வருமானத்தையும் பிடுங்கிக்கொண்டிருந்தது. என் கல்விப் பயணத்தைக்  இடையிலேயே முடக்க கருணையில்லாமல் அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.
   1960 70பதுகளில் இடைநிலைப் பள்ளிக் கல்வியைத் தொடரும் தோட்டப்பபுற  மாணவர் எண்ணிக்கை  மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. முக்கால் வாசிப்பேர் தோட்டப்புற தமிழ்ப்பள்ளியில் ஆறாம் வகுப்போடு படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு ‘சொக்ரா’ வேலைக்கு சென்றனர். அவர்களின் எண்ணிக்கை அதிகம். சொக்ரா வேலை சிறார்களுக்கென தோட்ட நிர்வாகம் ‘கரிசனத்தோடு’  ஒதுக்கியிருந்தது. அவர்களுக்கு அரை சம்பளம்தான்.  ஆனால் அவர்களை முன்பகல் இரண்டு மூன்று வரை வெயிலில் வேலை செய்ய வைத்த பிறகே அரைச் சம்பளம் கொடுப்பார்கள். அப்போதெல்லாம் அதற்கெதிரான ‘சைல்ட் லேபர்’ சட்டம் வந்திருக்கவில்லை. பருவ வயதை அடையக் காத்திருக்கும் ஆண்கள் பிள்ளைகள் வீட்டு வறுமை காரணமாக இவ்வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள். வீட்டுச் செலவுக்கு உபரியாக  கூடுதல் வருமானம் கிடைப்பதால் பெற்றோர்களே அவர்களை சொக்ரா வேலைக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போதைக்கான வரிய நிலை உதிர்ந்தால் போதும் அவர்களுக்கு. வயிற்றுக்கு உணவு கிடைத்தால் எல்லாம் சம்மதம். முதலாளித்துவம் ஆசை காட்டி விரித்த வலையிலிருந்து தப்பி, இடைநிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தவர்களில் பலர் பொருளாதார பின்புலமற்ற காரணத்தால் இடையில் படிப்பை உதறிவிட்டு நின்றவர்களும் உண்டு. அப்படியே தப்பிப் பிழைத்தவர்கள் மூன்றாம் படிவ அரசாங்கச் சோதனையை LCE (Lower Certificate of Education ) எழுதியவர்கள் பெரும்பாலானோர் தேர்ச்சி பெறாமை காரணமாக மீண்டும் தோட்டப்புற வேலைக்கு ஆவது, தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்தது. இந்த தடைகளையும் தாண்டி SC/spm (school Cerificate  அல்லது Sjil Pelajaran Malaysia சோதனையை எழுதித் தேர்ச்சி பெற்று பட்டணப்புற வேலை கிடைத்தவர்கள், தோட்டப்புற இருண்ட வாழ்க்கையிலிருந்து தப்பித்துப் போனவர்களாகவே இருப்பார்கள். இடைநிலைக் கல்வி கட்டணக் கல்வியாக இருந்த காரணத்தாலும் தோட்ட நிர்வாகம் குறைந்த ஊதியத்துக்கான வேலை வாய்ப்புகளை வழங்கிய காரணங்களுமே  மேற்கல்வி வாய்ப்பு நடுத்தர, மேல்தட்டு  மனிதர்களுக்கானதாக மட்டுமே இருந்து வந்தது. ஏழைகளுக்கு அது ஓர் கரிய இருள் மண்டிய காலம்.
     ‘பாரி’ என்ற புனைப்பெயரில் எழுபதுகளில் நல்ல கதைகளை எழுதிவந்தவர் வீரசிங்கம். அவரின் ‘சத்து ரிங்கிட்’ சிறுகதை என் நினைவில் தப்பாமல் நிலைத்திருக்கும் ஒரு கதை. என்னைப்போலவே இடைநிலைப்பள்ளி வாழ்க்கையை சிக்கல்களை எதிர்நோக்கியவர்களுக்கு இக்கதை நெஞ்சில் மிக நெருக்கமான இடத்தைப் பிடித்துவிடும்.
     தன் மகனின் பள்ளிப் பேருந்துக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் ஒரு ஆயாவின் கதையைச் சொல்கிறது ‘சத்து ரிங்கிட்’. ஆயாக் கொட்டகைக்குக் ( ரப்பர் காட்டு வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகளைப் பராமரிக்கும் குழந்தை பராமரிப்பு இல்லம்) தமிழில் மொழி பெயர்த்ததால் அது அழகிய இடம்போல கண்முன் உருவாகி வருகிறதே தவிர, உண்மையில் அது ஒரு ஆரோக்கியமற்ற இடம். ஆயாக்கொட்டாய் என்று சொன்னால் அதன் அவலட்சண முகம் கண்முன் விரியத் தொடங்கிவிடும்.  தளர்ந்த, மலம் ஒட்டிய சிலுவாரைப் பிடித்துக் கொண்டு, மூக்குச் சலி ஒழுக, மூத்திர வாடையோடு அழும் எண்ணற்ற குழந்தைகளை அடைத்து வைக்கும் வசதியற்ற லயத்து வீடு அது. காய்ச்சலில், வயிற்றுப்போக்கில் அவதியுறும் குழந்தைகளையும், ரப்பர் காட்டு வேலைக்குப் போகும் பெற்றோரால் அரைநாள் கைவிடப்படும் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் ஆயாவிடம் விடப்படும்.
    விடிகாலையிலேயே ஆயாக் கொட்டாய்க்கு கிளம்பிக்கொண்டிருக்கும் கல்யாணி ஆயா, இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் தன் மகன் பள்ளிக்குக் கிளம்பாமல் இருப்பதைப் பார்க்கிறார். அவன் ஏன் இன்னும் துயில் எழாமல் இருக்கிறான் என்று வினவ, அவன் சொல்லும் காரணத்தில் கதி கலங்கிப் போகிறாள். பேருந்துக்கு மாதக் கட்டணம் கட்டவில்லை என்றும் அதனால் பஸ் உரிமையாளர், இந்த முறை கண்டிப்பாய் இரக்கம் காட்ட மாட்டார் என்றும் சொல்கிறான். இரண்டு மாத பாக்கி இருப்பதை அவர் எல்லார் முன்னிலையிலும் கேட்டுத் தொல்லை செய்கிறார் என்றும் காரணம் சொல்கிறான். கல்யாணி திடுக்கிட்டு ‘உஸ்கூலுக்குப் போலனா படுப்பு கெட்டுப் போயுருமேயா.. தோ இரு வந்துர்ரேன்” என்று சொல்லி இருள் விழுந்த காலைக் கருக்கலிலேயே கைமற்று வாங்க ஓடுகிறார். சுற்றிலும் கருமை இருள் கருணையில்லாமல் கவிந்திருக்கிறது. லயத்து வீடுகளில் எரியும் மண்ணெணெய் திரி விளக்குகள் மினுக்கி மினுக்கி கும்மிருட்டுக்குப் போலி ரௌடிபோலச் சவால் விடுகின்றன. இத்தனைக்கும்  பேருந்து கட்டணம் ஒரு ரிங்கிட்தான். அதனை யாருடமாவது கெஞ்சிக் கேட்டு அன்றைக்கு அவனை பள்ளிக்கு அனுப்பிவிடத் துடிக்கிறாள் ஆயா. முக்காடிட்டபடியே பனியிலும் குளிரிலும் , சிலர் வீட்டுக் கதவைத்தட்டி வெட்கத்தை விட்டு ஒரு வெள்ளியைக் கடனாகக் கேட்கிறார். எல்லாருமே சாக்குப் போக்கு சொல்லி கைவிரித்து விடுகிறார்கள். ஆயா கல்யாணி அதிகாலையிலேயே ஆயக்கொட்டகைக்கும் போயாக வேண்டிய கட்டாயம் வேறு! காலை மஸ்டருக்குப் போய் வேலை செக்ரோலில் பேர் பதியும் முன்னரே பெற்றோர்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஆயக் கொட்டகையில் விட வந்து நின்றுவிடுவர் என்ற தவிப்பு கிழவிக்கு. அவள் நேரத்தில் அங்கிருந்தால்தான் குழந்தைகளை வாங்கிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள   முடியும். இதற்கிடையில் தன் மகனையும் பள்ளிக்கு அனுப்பி வைத்திட வேண்டும். இரு முனையிலிருந்தும் பாயும் அம்பிலிருந்து அவள் தன்னைப் தற்காத்துக் கொள்ள வேண்டிய இரண்டும் கெட்டான் நிலை  .
    நம்பிப் போனவர் எல்லாருமே கைவிரிததுவிட்ட நிலையில் அவள் சோர்ந்து வீடு திரும்பும் தருணத்தில் ‘கப்பலா’  நினைவு வருகிறது. கப்பாலா என்பவர் எஸ்ட்டேட் வேலை ஒன்றை குத்தகை எடுத்து, அந்த குத்தகை வேலையை முடிக்க தற்காலிகமாக வேலைக்கு ஆள் வைத்திருப்பவர். தனக்குத் தெரிந்த ஓரிரு மலாய் வார்த்தையைப் பாவித்து எஸ்டேட் கப்பலாவிடம் போய் நின்று ஒரு ரிங்கிட்டைப் பெற்று  மகனை பேருந்தில் ஏற்றிவிட்டு தன் காலை லட்சியத்தில் வெற்றி பெறுவதே கதை சொல்லிச் செல்கிறது.. ஆனால் ஒரு வெள்ளியை கடன் பெற்றுக்கோண்டு வரும் இருட்டு வேளையில் அவள் கால் பெருவிரல் நகம் செங்கல்லில் இடிபட்டு பிளந்து கொண்டு ரத்தம் கொட்டுவதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மகனை அன்றைக்குப் பள்ளிக்கு அனுப்பியாக வேண்டும் என்பதே அவளின் சிதறாத குறிக்கோள்.
   எழுபதுகளின் தோட்டப்புற மக்களின் அறியாமையைத் தன் சிறுகதையின் மூலம காட்டிச் செல்வதே அவரின் நோக்கம். அதே வேளையில் கதைக்குள் லட்சிய வாதத்தை பிரச்சார தொனி அகற்றி முன்னெடுத்திருக்கிறார். வரிய நிலை காரணமாக தன் குழந்தைகளின் கல்வியைத் தொடர முடியாத  மக்களுக்கான கதையாக அதனை எடுத்துக் கொள்ளலாம். அன்றைய தோட்டப்புற சூழலுக்கு இது பொருந்தி வந்தது. பணமில்லையென்றால் படிப்பில்லை இல்லை என்றாகிவிடும். இருக்கவே இருக்கிறது எஸ்டேட்டு வேலை வாய்ப்புகள். மக்கள் எதனைத் தேர்ந்தெடுப்பார்கள் அப்போதைக்கான வயிற்றுத் தேவையையா? நாளைய ஒளிமயமான எதிர்காலத்தையா?
      அப்போதைய கல்வி பெறுவதற்கான தடைக்கற்கள்  எதிர்காலக் கனவை சிதைப்பவை.  எனவே மக்கள் அன்றைய பசியைத் தீர்க்கவே வண்ணக் கனவுகளைப் பலி கொடுத்தார்கள்.
      ஆயா என்ற குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் தனித்து வாழும் ஒரு சாதாரண குடும்ப மாது, கல்விக்கு வழங்கும் முக்கியத்துவமே கதையின் மையச் சரடு. மகனை எப்பாடு பட்டாவது தேற்றிவிட வேண்டும் என்ற ஆயா கல்யாணியின் லட்சியம் கதைக்குள் ஊடுறுத்து நிற்கிறது. காலைக்கருக்கலில் அவள் வெட்கத்தை விட்டு பிறர் வீட்டு வாசலில் நின்று கடனுக்குக் கெஞ்சி நிற்கும் இடங்களும், மலாய் மொழி தெரியாமல் பாதிச் சைகை மொழியில் ‘வெல்பேர் முகத்தோடு’ யாசகம் கேட்டு நிற்கும் இடமும், கால் பெருவிரல் அடிபட்டும் அதனை பொருட்படுத்தாமல் மகனுக்காக ஓடும் இடமும், கதைக்குள் அதன் வலிமை குறையாமல் எழுதப்பட்டுள்ளது.
விடிகாலை வேளையைப் காட்சிப்படுத்துதலும் துல்லியமாய் அமைந்திருக்கிறது. சாமக்காரர் அடிக்கும் தண்டவாள இரும்பு மணியோசை மக்கள் தூக்கத்தை தடாரென கலைக்கும் அதிர்வுகள் நம்மையும் அதிரச் செய்கிறது. சிம்னி விளக்குகள் மினுக்கி மினுக்கி எரிந்து பேரிருளை விரட்ட நினைப்பது எறும்பு யானையிடம் எதிர்த்து மோதி மிதிபட்டுச் சாகும் பரிதாப நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஓட்டமும் நடையுமாக ஆயா அவசரமாக வரும்போது  ஒற்றையடிப் பாதையில் கிடந்த செங்கல் அவள் பெருவிரலைப் பதம் பார்த்து வடியும் ரத்தத்தின் சிவப்பையும் காட்டத் தவறவில்லை. அதிகாலை என்பது திரண்டு நின்று அச்சுறுத்தும்  நிலையும் எழுத்தின் வழி காட்டும் காட்சியமைப்பு சோடை போக வில்லை
சத்து ரிங்கிட் என்ற கதையின் தலைப்பே படிமமாக விரிந்து வாசகனுக்குக் கவலையளிப்பதாக இருக்கிறது. வறுமை என்ற சொல்லின் அர்த்ததை இதைவிட வேறு ஒரு குறியீட்டை வைத்து  சொல்லிக் காட்டிவிட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வெள்ளி என்பது அல்பத் தொகை . ஆனால் அது அன்றைய சூழலில், ஏன் இன்றைக்கும் ஏழைகளுக்குப் பெரிய காசுதான். மகனைப் பள்ளிக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்ற இக்கட்டில் கையில் ஒரு வெள்ளி கூட இல்லாத அபலைத் தாயின் நிலையைச் சற்றே பச்சாதாபத்தோடு சிந்திக்க வைக்கிறது. வேளா வேளைக்குக் குறையில்லாமல் விழுங்கி புளித்த ஏப்பம் விடும் பொல்லாத மேல்தட்டுச் சமூகத்தின் மேல் நமக்குக் கோபம் வருகிறது. இப்படிப்பட்ட சமூகக் கட்டமைப்பின் மீது எல்லையற்ற சினம் கொதித்தெழுகிறது. ஒட்டு மொத்த தோட்டப் பாட்டாளின் வறுமைக்குக் காரணகர்த்தாக்களாக இருந்த சுரண்டி வாழும் முதலாளியச் சமூகத்தின் மேல் ஆத்திரம் பொங்குகிறது . அதற்கும் மேலாக முதலாளிய தந்திரத்தைக் கையாண்டு, உழைப்பைச் சுரண்டித்  தின்று  கொழுத்த பணக்காரர்களாகிவிட்டவர்களைத் ’ தொர’ என்று விளித்து கூனிக் குருகி நின்ற ஏழை அப்பாவிச் சனங்களின் வெள்ளந்திந்தித் தனத்தை நினைத்துப் பார்க்கும் போது பரிதாப உணர்வும் பொங்குகிறது.
     இருளின் திண்மையும், ஏழ்மையின் வன்மையும் கதையின் அழுத்ததை நிறுவியிருந்தாலும், கதைக்குள் தாய்மை பொங்கி வழிவதை படிமமாக்கப் பட்டிருக்கிறது,  தன் கால் விரல் அடிபட்டுக் நகம் கழன்று, குருதி கொட்டும்  நிலையிலும் ஆயாக்கொட்டகைக்கு வேலைக்குப் போயாக வேண்டும் அவள்.  அங்கே அவள் முப்பது நாற்பது மேற்பட்ட குழந்தைகளைப் பராமரித்தாக வேண்டும். அக்கடா என்று உட்காரக் கூட நேரமில்லாமல், சதா அவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்த வண்ணம் இருக்க வேண்டும். அவளின் பணி ஒரு தாயின் பணிக்கு நிகரானது. அத்தனைக் குழந்தைகளுக்கும்  அந்த ஒரு தாய்தான். அவள் நொண்டி நொண்டி, வலியில் துடித்து வேலையைக் கடமையாகச் செய்யப் போகும் படிமம் கதையை மேலும் வலிமையாக்குகிறது.
      இக்கதையின் சில இடங்களில், அழகியல் தன்மை கதையோடு ஒட்டாமல்  வலிந்து திணிக்கப்பட்டதுபோல வெளிப்படுகிறது, கடன் கேட்டு அலையும் ஆயாவின் நிலைமையை மூன்று நான்கு இடங்களில், பாலுக்கு ஏங்கும் குழந்தையைப் போல என்றும், வாலியில் பாலிருந்தும் அழும் குழந்தைக்கு பால் கொடுக்க மறுக்கும்  ஒரு பெண்ணைப்போல என்றும்,  உடைந்துவிட்ட பால் போத்தலுக்கு மாற்றுப் போத்தல் கிடைத்துவிட்ட தெம்பில் என்றும் ‘பாலை’ மிச்சம் வைக்காமல் கறந்துவிடுகிறார். இந்த உவமைகள் சற்று செயற்கையாக அமைந்திருக்கிறது. கதைச் சூழலுக்கான தகுந்த உவமைகள் இவை என்று அவர் அபிப்பிராயப்பட்டிருக்கலாம்.  ஆனால் வாசகனுக்கு இந்தத் தேய் வழக்குகள் சோர்வு தட்ட வைக்கிறது. படைப்பாளனின்  எல்லா வகை அழகியல் கூறுகளும் வாசகனையும் மாறறுக் கருத்தில்லாமல் ஊடுறுத்திச் செல்லவேண்டும்..
     எழுபதுகளின் புனைவெழுத்தாளர்கள் சிலரின் சிறுகதைகள் சமூகப் பிரக்ஞையை முன்னெடுத்தாலும் அவை கலையமைதி பிறழாமல் இருந்தன. தன் கருத்தைக் கோடிட்டுக்காட்ட பிரச்சார தொனி காணக்கிடைக்காது. தொடுப்பு வளர்ச்சி முடிப்பு எனக் கச்சிதமான வடிவ நேர்த்தி கொண்டவை. சிறுகதைகளின் முடிவுகள் வாசகனைத் திக்குமுக்காடச் செய்யவேண்டும் என்ற பிரயத்தனம் கொண்டவை. அது எழுபதுகள் கதை சொல்லிகளின் மரபான சிந்தனை. தத்துபித்தென்று எழுதி பத்திரிகையில் கதை வந்தால் நெஞ்சை நிமிர்த்திக்கொள்ளும் இப்போதைய நிலைக்குப் பெரிதும் எதிர்மாறானவை. அதனால்தான் இன்றைக்குக் கதை எழுத வருபவர்கள் பாலபாடமாக இதுபோன்ற கதைகளை வாசித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறேன்.
   எழுபதுகளில் தமிழ்நேசன் நடத்திய பவுன் பரிசுக் கதை போட்டிகள் நமக்கு பத்துக்கும் மேற்பட்ட நல்ல எழுத்தாளர்களை அடையாளம் காட்டியது. பாரியும் அந்தப் பிரசித்தி பெற்ற பட்டியலில் இடம் பெறுகிறார். இக்கதை தோட்டப்புறப் பின்னணியில் எழுதப்பட்ட  முத்திரைக் கதைகளில் முக்கியமானது.
    மலேசியத் தமிழர்களின் அல்லது தென்னிந்தியர்களின் தோட்டப்புற வாழ்க்கை பின்புலம் இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. அதற்கான ஆற்றல்மிக்க தமிழ் எழுத்தாளர் கூட்டம் இங்கே மிகக் கம்மியாக உருவாகி வந்தார்கள். தமிழில் போதிய கல்வி அறிவு கிடைக்காமையும் அல்லது தேடிப் படிக்காமையும், இதற்கு முக்கியக் காரணங்களாக முன்வைக்கலாம். வாசிப்பதற்கான சிறந்த தமிழ் நாட்டு நூல்கள் மலேசியாவில் இல்லாமையும், இருக்கும் நூல்களின் விலை தமிழ் நாட்டைவிட நான்கு ஐந்து மடங்கு அதிகம் வைத்து விற்றமையும் உபரிக் காரணங்களாகச் சொல்லலாம்.
  ஒரு புலம்பெயர் சமூகத்தின் இரண்டு நூற்றாண்டு வாழ்க்கையையும் முழுமையாக எழுதி முடிக்க முடியாதுதான். ஆனாலும் எழுதப்பட்ட வரை நிறைவாக இல்லை என்பதே என் கருத்து. தோட்டப்புற வாழ்க்கை என்பது கிட்டதட்ட இரண்டு நூற்றண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. முதல் காலக்கட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கங்காணி முறையில் தெந்நிந்தியர்களை தமிழ்நாட்டிலுருந்து மலாயாவுக்கு ஓட்டிகொண்டு வந்ததிலிருந்து தொடங்குகிறது. அடுத்த இரண்டாம் உலக யுத்த காலத்தில் அமரிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு  ஜப்பானியர்களோடு பொறுதிக்கொண்டபோது தென்னிந்தியர்கள் யானைகள் மோதல்களுக்கிடையில் நசுங்கிச் செத்த காலக் கட்டமாகும். ஜப்பானியர்கள் சயாம் பர்ம மரண ரயில் பாதை அமைக்க தென்னிந்தியர்களக் கொத்தடிமைகளாக்கிய காலக்கட்டமும் இதில் அடங்கும். மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள்  ஒரு கருப்பு அத்தியாயமாக இதனை பதிவு செய்கிறது வரலாறு. இரண்டாம் உலக் யுத்தததில் ஜப்பானை அடிபணிய வைத்த பின்னர்  . மீண்டும் பிரிட்டிசார் கெடுபிடியில் சிக்கித் தவித்தது மூன்றாவது காலக்கட்டமாகும். இவற்றை இன்னும் நம் இலக்கியவாதிகள் அழுத்தமாகப் பதிவு செய்யவில்லை.
    இக்காலக் கட்ட எழுத்தாளர்களாவது விடுபட்ட நம் மூதாதையர்களின் வரலாற்றை மீட்டெடுத்து  வெளிக்கொணரவேண்டும்.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின