Skip to main content

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்- இறுதிப் பகுதி





 தாய்லாந்தில் இரண்டு நாட்கள்- இறுதிப் பகுதி.





                                           இரண்டு இரவுகள் தங்கியிருந்த விடுதி
சொங்க்லாக் கடற்கரையோரம் உள்ள ஒரூ தாய் எழுத்தாள்ரின் சிலை.


மலேசிய கிராமப்புற சாலையோரங்களில் நீரா நீப்பா ( பனங்கள்) விற்பதைப் போல தாய்லாந்து கிராமங்களிலும் ஒருவகை இயற்கை பனை மர மதுவை விற்கிறார்கள். சாலை இரு மருங்கிலும் இப்படி நிறைய அங்காடிகள் இருந்தன. பானு ஒரு புட்டி வாங்கி வந்தார். 10 பாட்தான். அதனை உடனே திறந்து ஒர் மிடறு ஊற்றினார்.திறந்த கணத்தில் அதன் கெட்டிய வாடை குப்பென்று காரை நிறைத்தது. கள்வாடைதான். ஆனால் அது பலநாட்கள்  உறை போட்டதுபோல கனத்த நெடி. கிட்டதட்ட வாந்தியை வெளித்தள்ளும் நெடி. அவர் உடனே புட்டியை மூடிவிட்டார்.அலாவுதினின் 'ஜீனி' மீண்டும் அடைபட்டது. ஆனால் காருக்குள் அடைபட்ட வாடை ஒவ்வாமையை உண்டுபண்ணியது. சிறிது நேரம் வாடை வெளியேற காண்ணாடிகளைத் திறந்துவிட வேண்டியதாயிற்று. புலித்த சுவை என்றார் பானு. ஒரு மிடறு ஊற்றிவிட்டவர் ஒரு திணறு திணறினார். அவர் தலை புலித்த சுவையைத் தாங்க முடியாமல் குலுங்கி நின்றது.கேஸ்டிரிக் உள்ளவர்கள் கிட்டே நெருஙகக் கூடாது.

அன்று மாலை நடைப் பயிற்சிக்குப் போனோம். கொரியாவிலிருந்து வந்த தைகுனாண்டோ குழு தைக்குவாண்டோ விளையாட்டை அறிமுகம் செய்யும் வகையில் மக்கள் கூடுமிடத்தில் அதனை செய்து காட்டினர். ஆனால் அதில் ஒரு ரகசிய எஜெண்டா இருந்ததைப் பானு சொன்னார். கிருத்துவ சமயத்தை அதன் ஊடாகப் பரப்பும் தந்திரம். மதத்தை பரப்புவது இன்னொரு சமய விழுமியங்களுக்குச் சவால் விடுவது போன்றது. சமயம் வலிமையான விழுமியங்களைக் கொண்டிருந்தால் அது தானாகவே பரவும். போருக்கு ஆள் சேர்ப்பதுபோன்ற நடவடிக்கை தேவையற்றது. அது நான் பின்பற்றும் சமயமாக இருந்தாலும் சரி.

மறுநாள் காலை விடுதி அறையைக் காலி செய்துவிட்டு புறப்பட்டோம். ஹாட்யாயில் கடைத்தெருக்களில் எதையாவது வாங்கலாம் என்றே திட்டம். 
ரோபின்சனை அடைவதில் இம்முறை சிக்கல் இல்லை. ஆனாலும் நோண்புப் பெருநாள் கூட்டம் அதிகமாக இருந்தது. நான் நடைப்பயிற்சிக்குக் காலணி வாங்கவேண்டும் என்றேன். அசல் வகைக் காலணிகள் மலேசியாவைப் போன்றே விலையில் மாற்றமில்லை. ஆனால் போலிகளை வாங்கக்கூடாது. சற்றே விலைக் குறைவுதான். அதனைத் தொட்டுத் தூக்கியவுடனே அசலுக்கும் போலிக்குமான வேறுபாட்டை உணர்த்திவிடும். ஒரு நைக் போலியில் விலை 3000 பாட்.பேரம்பேசிக் குறைத்தால் 2500க்கு வாங்கலாம். அது போலியானது ஆனால் விலையும் குறைவில்லை. அதற்கு அசலையே வாங்கலாம் என்று வந்துவிட்டேன்.

ஒன்றும் வாங்கும் எண்ணமில்லை. அந்நிய வீதிகளைச் சுற்றித் திரிவதில் ஒருவகை மகிழ்ச்சியான கிளர்ச்சி இருந்தது. 

பகல் உணவை முடித்துவிட்டு டானோக்கை நோக்கிக் கிளம்பினோம். நள்ளிரவு முடிந்து சுங்கச் சாவடியை மூடிவிடுவார்கள் என்று சொன்னார் பானு. எனக்கு அது புதிய செய்தியாக இருந்தது. எனவே சுணங்காமல் கிளம்பினோம்.

எல்லையை அடைய இன்னும் 20 கிலோ மீட்டர்தான் இருக்கும்.

ஒரு மோட்டார் சைக்கிளில் இரு தாய் போலிஸ் காரர்கள் எங்களைக் கடந்து நிறுத்தச் சொல்லி கையசைத்தனர்.

பானு தயங்கியபடியே ஓரங்கட்டினார்.

சன்னலைத் திறக்கச் சொன்னான். திறந்தார்."லைசன்'  என்றான் எடுத்துத் தந்தார். சாலை விதி குற்றச் சிட்டையில் குறித்துக்கொள்ள ஆரம்பித்தான். நாங்கள் என்ன குற்றம் என்றோம் ஆங்கிலத்தில். 'நோ தாய்?' என்று கேட்டான். 'நோ ஓன்லி இங்கிலிஷ்' என்றார்.

சாலை சமிக்ஞை விளக்கில் நீங்கள் நிறுத்தவில்லை என்று பரிபாசையில் சொன்னான்.

சாலை சமிக்ஞை கடந்த இருபது நிமிடத்தில் எங்கேயும் கடந்ததாய் நினைவில்லை. 

"நோ" என்றார்.

"யு நோ ஸ்டோப்" என்றான்.

"யு கோ போலிஸ் ஸ்டேசன். 3000 பாட்" என்றான். அப்போதும் எழுதுவதை நிறுத்தவில்லை.

"ஐ ஹேவ் ஓன்லி 2000 பாட்," என்றார்.

2000 பாட் என்றதும் ஆள் கவனமாகிவிட்டான். " 2000 பாட், 2000 பாட் ,ஓகே கம்" என்று சொல்லும்போது அவன் அளவற்ற மகிழ்ச்சியில் இருப்பதாகத் தெரிந்தது. சற்று மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று, 2000 பாட் என்று கேட்டான். லஞ்சம். தான் எனப் புரிந்து கொண்டது. என்னிடம் 1000 சொச்ச பாட் இருந்தது. அவரிடம் 800 பாட் இருந்தது. இரண்டையும் சேர்த்துக் கொடுத்தோம். அவசரமாய் வாங்கிக் கொண்டு 'நோ கொம்ப்ளேம்" என்றான். மூன்று நான்கு முறை நோ கொம்ப்ளேம் என்று எச்சரித்தான். நாங்கள் 'நோ...ஒகே" என்றோம். அதுவரை உடும்புப்பிடியாய் கையில் வைத்திருந்த லைசன்சை கொடுத்துவிட்டு. குற்றச்சிட்டையையும் வாங்கி கொண்டு போய் விட்டான். மிகுந்த பதற்றத்தில் இருந்து பானு சற்றே பெருமூச்சு விட்டு ஆசுவாசமானார். 

"கொடுத்துத் தொலைத்தது நல்லது. இல்லையென்றால் போலிஸ் ஸ்டேஷன் கொண்டு போவான். போலிஸ் வேண்டுமென்றே தாமதப் படுத்துவான்- லஞ்சம் கேட்க. தாமதமானால் இன்னொரு நாள் விடுதியில் தங்க நேரிடும். எதற்கு வீண் வில்லங்கம். அவன் போலிஸ் ஸ்டேசனில் பேசும் மொழியில் நாம் இருவரும் சேர்ந்து ரத்த வாந்தி எடுக்க நேரிடும்," என்றேன்.

அவர் பேசாமல் காரைச் செலுத்தினார்.

ஆனால் அவர்களின் மேல் எல்லை போலிசில்' கொம்ப்லேய்ம்' செய்தால் என்ன என்று எண்ணமிருந்தது.  'விடு புள்ளக்குட்டிக் காரன் பொழச்சி போகட்டும்' என்றே விட்டு விட்டோம்.

ஊழலை இப்படித்தான் வளர்த்து விட்டிருக்கிறோம் நாம். ஒரு ரிங்கிட்டிலிருந்து 700 மில்லியன் வரை ஊழல் வளர்ந்து கொண்டிருப்பது எப்படி? இப்படித்தான்.

முற்றும்.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின