Skip to main content

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்

             



என் மனைவி தமிழ் நாட்டு சுற்றுப் பயணத்துக்கு அனுப்பியிருந்தேன். எனக்கு சேலை கடையென்றால் அலர்ஜி. இரண்டு மூன்று நாட்கள் முழுக்க கால்கடுக்க சேலைக்கடையிலும் , கடைத்தெருவில் அலைவதை நினைத்தாலே கால்கள் கடுக்கத் தொடங்கிவிடும்.
மகள் குடும்பத்தோடு அவள் ஜூலை 29ல் போய்விட்டிருந்தாள். கிட்டதட்ட 11 நாட்களை எப்படிக் கழிப்பது என்ற பிரச்னை. நீண்ட நாட்களாவே பானு விடுமுறையைக் கழிக்க சொங்க்லாக்-தாய்லாந்து போகலாம் என்று அழைத்துக் கொண்டிருந்தார். நான் நாலைந்து முறை பார்த்த  ஊர்தான். மிகுந்த ஆரவ்மில்லை. காரில் போய்விட்டு வருவதற்கு உசிதாமான இடம். இரண்டரை மணி நேரப் பயணம்தான். எனக்கும் போரடித்துக் கொண்டிருந்தது. சரியென்று பானுவோடு கிளம்பிவிட்டேன்.
மனைவி இல்லாத வேளையில் பானுவோடா? அதுவும் தாய்லாந்துக்கா? என்ற உங்கள் எண்ணம் கோணாலாவது தெரிகிறது. பானு என் நடைப் பயிற்சி நண்பர். ஆடவர். பானு  நாயர். போதுமா?

2 ஜூலை காலை 7.30க்கெல்லாம் என்னை என் வீட்டில் ஏற்றிக்கொண்டு கிளம்பி விட்டார். மணி 10 வாக்கில் புக்கிட் காயு ஹீத்தாம் எல்லையை அடைந்தோம். சனிக்கிழமையாதலால் ' உல்லாச விரும்பிகள்' எல்லைச் சாவடியை அடைத்துக் கொண்டு நின்றிருந்தனர். பானு கொஞ்சம் எரிச்சலடைய ஆரம்பித்தார். காலை ஆறரைக்குக் கிளம்பியிருக்க வேண்டும் என்றார். நான்தான் தமதமாக்கினேன் என்பது போன்ற உடல் மொழி. சுங்கச்
சாவடியின் நான்கைந்து  நீண்ட வரிசையில்  நின்றிருந்தார்கள் .  இதனை 'சாவடி' என்று சொல்வதன் உட்பொருள் புரிய காத்திருப்பவர்கள் மட்டுமே விளங்கும். நம் பாக்கெட்டைக் கொள்ளையடிக்கும் டோல் கட்டணம் கூட நம்மைச் சாவடி அடிப்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். ஆளும் மலாய்க்காரக் கட்சிக்கே  நம் டோல் கட்டணம் அனைத்தையும் தாரை வார்ப்பது  பயண மக்களின் தலைவிதி. குடி மக்களை முடி மக்களாக்கிய  பெருந்தன்மை உடையவர்கள் நாம். முடிமக்கள் இப்போது 'குடி ' மக்களாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள் வெளி நாட்டுக்குச் சென்றால். நல்லாருக்கட்டும்.... நல்லாருக்கட்டும். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது,

 நாங்கள் மனிதர்களை
 மந்திரிகளாக்கினோம்
 மந்திரிகளைத்தான்
மனிதர்களாக்க முடியவில்லை.

சரி விடுங்க.

"இங்க பாஸ்போர்ட் பரிசோதனை. அந்தப் பக்கமாய் இருக்கும் சாவடி தாய்லாந்து உள்ளே பயணமாகப் போகும் கார் பரிசோதனை " என்றார் பானு அடுத்த சாவடியைக் காட்டி.  அப்படின்னா இரண்டு முறை சாவடி இருக்கிறது! அங்கேயும் மலைப்பாம்பு போல வரிசை வால் நீண்டிருந்தது. எனக்குப் பொறுமை கொள்ளவில்லை. ஒன்றரை மணி நேரம் வரிசை வான்கோழியை விழுங்கிய மலைப் பாம்புபோல மெல்ல நெளிந்துகொண்டிருந்தது. மூன்று நான்கு சாவடிகள் மூடப்பட்டிருந்தன.

 "பாஸ்போர்ட்டின் உள்ளே ஒரு வெள்ளி மலேசிய ரிங்கிட்டை வைத்து விடு," என்றார் பானு . நான் அவரை ஏறிட்டுப் பார்த்தேன். ஆமாம் லஞ்சம்தான் என்றார். அது தாய்லாந்து சாவடி. குத்து மதிப்பாய் ஒரு ஆயிரம் பேர் கடந்தால் 1000 ரிங்கிட் ஆயிற்று. யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. அது கிட்டதட்ட கட்டாயமாக்கப்பட்டு பழக்கத்துக்கு வந்துவிட்ட ஊழல்களில் ஒன்று. ஒரு ரிங்கிட் ஒரு பயணிக்குப் பெரிய பிரச்னை இல்லைதான். ஆனால் பெறுநரை கொள்ளைக் காரகளாக்கி பணக்காரார்களாக்கி விடுவதில் நமக்குள்ள  பெருந்தன்மைதான் காரணம். பெறுபவன் சொரணையே இல்லாத முகம் வைத்திருப்பதுதான் அங்கீகரிக்கப் பட்ட அறவுணர்ச்சியாகிவிட்டது. நமக்கு ஒரு ரிங்கிட் லஞ்சம் கொடுக்கவே கை நடுங்குகிறது!
"பரவால்ல ஒரு ரிங்கிட் தான" என்றார் பானு. அவர் தன்னை அடிக்கடி ஒரு சோசொயலிஸ்ட் என்று சொல்லிக்கொள்வார். இடது சாரித்தனம் சில இக்காட்டாண தருணங்களில் சமரசம் செய்துகொள்கிறது. ஊழல் அரசு பற்றி உரக்கக் கருத்துரைக்கக் கூடியவர்.

அப்போது சில தாய்லாந்து தரகர்கள், "டுவென்டி ரிங்கிட்... கோ குவிக்" என்று காத்திருப்பவர்களை நோக்கி "சிறப்புச் சலுகை'செய்யக் கோரிக்கொண்டிருந்தான். நான் பானுவைக் கேட்டேன் ." 20 ரிங்கிட் கொடுத்தால் அவனே நம் பாஸ்போர்ட்டைக் கொண்டு போய், நாம் சீக்கிரம் கடந்து போக முத்திரை குத்தும் வசதியை செய்து கொண்டு வந்து விடுவான்," என்றார்.

நான் பாஸ்போர்ட்டுக்குப் பதிவு செய்யும்போது முகக் கண்ணாடியைக் கழட்டி படம் எடுத்தார்கள். இங்கே முகத்தைக் கூடப் பார்க்காமல் 20 ரிங்கிட் வாங்கிக் கொண்டு முத்திரைக் குத்துவதை நினைத்துப் பார்த்தேன். என்ன முரண்? என்ன அல்பம்? என்ன அக்கறையின்மை?  உலகநாடுகளில் பயங்கராவாதம் பக்கவாத நோயாய்ப் படமெடுப்பது எப்படி என்று இப்போது புரிய வைத்தது.

முத்திரை குத்தப் பட்ட கடப்பிதழ் கைக்கு வந்ததும் காரைக் கொண்டு போய் தாய்லாந்து எல்லைக்கு அப்பால் வைத்துவிட இடம் தேடினோம்தெளிதில் இடம் கிடைக்கவில்லை. கண்டபடி பார்க் செய்த ஒரு சில கார்கள் நகராண்மைக் கழகத்தால் 'கிளேம்ப்' ( நகராதபடி இருக்க இரும்புப் பூட்டு) போடப்பட்டுக் கிடப்பதைப்  பார்த்ததும் பயம் வந்துவிட்டது. எங்கள் காருக்கு அது நேர்ந்தால் பயணமே நாசமாகிவிடும்.

 ஒரு உட்புறத் தெருவில் 'பாதுகாப்பாக காரை நிறுத்திவிட்டு மீண்டும் எல்லைச் சாவடிக்குச் சென்றோம் காருக்கான பயண அனுமதி பெற. அப்போது வரிசை மேலும் நீண்டு நெளிந்து கொண்டிருந்தது. வாகன உரிமையாளர் மட்டும் வந்தால் போதும் என்றார்கள். நான் மீண்டும் வாகனத்தை நிறுத்திய இடத்திற்கே ஓடினேன். கார் கிளேம்ப் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய. நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை.

அவர் முடித்துக் கொண்டு வந்திருந்தார். என் கைப்பேசி தற்காலிகமாய் செத்துப் போய் இருந்தது.  ரோமிங் பதிவு செய்ய வில்லை. இரண்டொரு முறை ரோமிங்கால் என் பர்ஸ் இளைத்துவிட்ட அனுவம் உள்ளதால்.

பசி குபு குபுவென வயிற்றை எறிக்கத் தொடங்கியிருந்தது. மணி மதியம் பன்னிரண்டைத் தாண்டியிருந்ததும், கோடை வெயில் கொலுத்திக்கொண்டிருந்ததும். காதிருந்த களைப்பும் பசியைத் தூண்டிவிட்டிருந்தது. டானாவ் கடைத் தெருக்களின் கவிச்சி நெடி குடலைப் பிடுங்கி பசியை அடக்கிக் கொண்டிருந்தது. இதற்காகவே அந்நிய மண் வந்தோம் என்ற எரிச்சல் அங்கேதான் தொடங்கியது. மலேசியாவையும் தாய்லாந்தையும் ஒரே ஒரு கோடுதான் பிரிக்கிறது என்றாலும் உணவுக் கலாச்சாரம் முற்றிலும் மாறிவிட்டிருப்பது அதிசயம்தான்.
அதற்குள் சுங்கச் சாவடி வேலைகளை முடித்துக் கொண்டு பானு வந்துவிட்டிருந்தார்.

பானு' ஹாட்யாய்' போய் சாப்பிடலாம் என்றார்.ஹாட்யாய் தாய்லாந்தில் மூன்றாவ்து பெரிய நகரம். ஹாட்யாய் டானாவிலிருந்து ஒரு மணி நேரப்பயணம். கவிச்சி வாடை டானாவிலிருந்து என்னை விடாமல் விரட்டியது. தாய்லாந்து பச்சை நிற குமுட்டிப் பழத்தைச் சாப்பிட்டு பசியோடு சமரசம் செய்துகொண்டிருந்தேன். அதன் மேல் தோல், பாம்பு தோல் தரிசு நிலம் கோடைகால்த்தில் வெடித்துக்கிடப்பதுபோல இளம்பச்சை நிறத்தில் இருந்தது . பாதுகாப்புக்காக எல்லை பேரங்காடியில் வரியற்ற பிஸ்கட் ஒரு பொட்டலம் வாங்கி வைத்திருந்தேன்.  


பயணம் தொடரும்......

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின