Skip to main content

சிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2

சிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2

முதல்நாள் கலந்துரையாடலைப் பற்றி இராஜ கணேஷின் முகநூல் பதிவு தெளிவாக இருந்தது. நானும் எழுதினால் சுவை திகட்டிவிடலாம். எனவே நான் நேற்று எழுதிய பதிவில் லிங்க் கொடுத்திருக்கிறேன்.
Balu Manimaran  என்ற முகநூல் தளத்தில் 
வாசிக்கலாம்.




மலேசிய இலக்கியம் குறித்து பெரும்பாலான தீவிர எழுத்தாளர் பார்வை ஒன்று போலத்தான் இருக்கும். ஆனால் மலேசிய இலக்கியத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பவர் ஒரு சிலர் மட்டுமே. அவர்கள் இலக்கிய அமைப்புகள் வழி பதவியைப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் அமைப்பின் பெய்ர் காப்பாற்றப்படவேண்டுமல்லவா?

ஒருமுறை ஒரு தினசரி பத்திரிகை ஒரு அறிக்கை விட்டிருந்தது. சிறுகதை பக்கத்தில் அவ்வறிக்கையை வாசிக்க நேர்ந்தவுடன் எனக்குக் கடுப்பைக் கிளர்த்தியது.  சிறுகதை எழுதுபவர்கள் நான்கு பக்கங்களுக்குள் எழுதினால் மட்டுமே பிரசுரமாகும், அது பாதி பக்கத்துக்குள் வரவேண்டும் என்று குறிப்பிடிருந்தது அறிக்கை.  உப்பு, புளி, மிளகாய், கடுகு, தாளிப்பு, சோம்பு இவற்றை நிரப்பும் ஜாடியாக பத்திரிகை பக்கத்தை அளவோடு ஒதுக்குகிறார்கள் எடிட்டர்கள், நிர்வாகிகள். "சார் ஒன்ற பக்கத்துக்கு அருமையான் சிறுகதை வந்திருக்கு சார், போடலாமா?" என்று ஒரு இலக்கிய பகுதி எடிட்டர் நிர்வாகியைக் கேட்க, " யோவ், அத பாதிய வெட்டி போடுய்யா, நடிகைகள் தொடைய ,இடுப்ப, தொப்புள போட எடம் வையுங்க," என்று சொல்லியிருக்கிறார். நாசி காண்டார் வியாபாரம் செய்வர்கள் பத்திரிகையை வாங்கி வணிகம் செய்தால் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இதுதான் இன்றைக்கு உள்ள நிலவரம். எழுத்தாளர்களின் கற்பனையைக் கட்டமைக்கும் ஆயுதம் அவர்கள் கையில் இருக்கிறது என்றால் இலக்கிய வளர்ச்சி எப்படியிருக்கும் என்று யோச்சித்துப் பாருங்கள். அதே பத்திரிகை என்னிடம்  ஒருமுறை கதை கேட்டார்கள் நான் நான்கே வரிகளில்தான் கதை எழுதுவேன் பரவாயில்லையா என்று கேட்டேன். அன்றிலிருந்து என்னிடம் கதை கேட்பதில்லை. இன்றைக்கு நிலைமை படுமோசமாக இருக்கிறது. கதைக்கு கெஞ்சும் பத்திரிகைகள் நிலையை எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது! தேறாத கதைகளை முன்பு குப்பையில் போட்டார்கள், இப்போது பத்திரிகையில் போடுகிறார்கள். அந்தக் கதைகளை எழுதியவர்கள் காலரை நிமிர்த்திக்கொண்டு நடக்கிறார்கள்.சரி விடு பின் நவீன வகையறாக்கள் என்று விட்டு விட்டேன்.
நான் கலதுரையாடலின் போது மலேசிய இலக்கியத்தின் தேக்க நிலையைச் சொன்னேன். அதன் காரணகளை முன்வைத்தேன். தேக்கநிலையை சரிசெய்ய பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும். ஒரு பக்கம் பள்ளிப்பாடத்திட்டம் மதிப்பெண்களை நோக்கியே மாணவர்களை நகர்த்துகிறது. இன்னொரு பக்கம் மின்னூடக சினிமா கவர்ச்சி, வேறொரு பக்கம் இலக்கியம் தெரியாத இலக்கிய பத்திரிகை ஆசிரியர்கள்.

கலந்துரையாடல் தீவிரத் தொனியுடன் நடந்தது. நான் எபோதுமே தரமான வாசகர்களை நல்ல எழுத்தாளனுக்கு ஈடாக வைத்துப் பார்ப்பேன். கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் சிலர் எழுத்தாளர்கள், பலர் முதிர்ந்த வாசகர்கள். கணேஷ் பாபு, இராஜ கணேஷ், பிரேமா மகாலிங்கம், அழகுநிலா, சூர்ய ரத்னா, ஜெயந்தி சங்கர், பாலு மணிமாரன் என  நீண்ட பட்டியலைச் சொல்ல முடியும். இரண்டே நாளில் பெயர்கள் நினைவில் கொள்ளும் அளவுக்கு என் மூளை கொள்ளளவு சிறியதே. ஆனாலும் சிலரின் கூர்மையான வினாக்கள், அபிப்பிராயங்களை வைத்தே அவர்களின் ஆற்றலுக்கு uyஉரிய இடத்தைத்  தரவேண்டும். அவர்கள் தேர்ந்த எழுத்தாளருக்கு ஈடான வாசகர்கள். எழுத்தாளனின் ஆளுமையைச் சோதிக்கும் சோதனைக் குழாய்கள். அவர்களின் தேடல் இல்லையென்றால் படைப்பாளனின் ஆளுமை வளராது அல்லவா? நான்கு பதினைந்து வயதையொத்த மாணவர்களின் வினாக்கள் புருவத்தை உயர்த்தச் செய்தன. ஒரு மாணவி தொழிநுட்ப வளர்ச்சி ஏடுகளை (நூல்களை) இல்லாமல் ஆக்கிவிடுமே என்ற கவலையை முன்வைத்தார். நியாயமான கவலை. ஆனால் அதற்கான மாற்று உபாயம் வந்துகொண்டே இருக்கிறது. கல்வெட்டுகளில் பதிவான சங்ககால இலக்கியத்தை மின்னூலாக ஆக்கி நிலைக்கச்செய்யும் தொழில் நுட்பத்தை வரவேற்காமல் இருக்க முடியுமா? இயற்கையின் சுழற்சி விதி ஒன்றை இழந்து பிறிதொன்றை உருவாக்கும் சக்தி கொண்டத்துதானே! அஞ்சத் தேவை இல்லை. என்று பதில் சொன்னேன். ஆனால் கைகளில் புத்தக ஸ்பரிசம்  இல்லாமல்  வாசிக்கும் நிலை ஒரு பேரிழப்புதான். என்  போன்றவர்கள் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு வாசிப்பதை பெரிதும் விரும்புகிறோம். மடிக் கணினி போல அது தொடையில் சூடேற்றுவதில்லை!!

முதல் நாள் கலந்துரையாடல் அங்கம் ஒரு நிறைவை எய்தியவுடன் பாலு எங்களை வெளியே உணவருந்த அழைத்துச் சென்றார். வித்யாசகரின் நீண்ட நாள் நண்பர் வேலுவும் இணைந்துகொண்டார். அவர் மலேசிய சிங்கப்பூருக்கான தொடர்பை விடாமல் வைத்திருக்கும் இரு நாட்டு குடியுரிமை பெற்றவர். உணவுமேசையில் இலக்கைய சர்ச்சை சில மணி நேரம் நீண்டது. எங்களை விடுதிக்கு டேக்ஸி ஏற்றிவிட்டுத்தான் பாலு வீடு திரும்பினார்.  இன்று காலை சிங்கை தமிழ் முரசில் வெளியான கலந்துரையாடல் செய்தியை பாலு அனுப்பிவைத்திருந்தார்.
சிங்கப்பூர் தமிழ் முரசில் வெளியான கலந்துரையாடல் செய்தி

நாளை தொடரும்.....

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின