Skip to main content

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

(ஏர் ஆசியா பற்றி ஒரு கொசுறு செய்தி. சிக்கனச் சேவை என்ற பெயரில் பயணிகள் பணத்தின் மேல் குறி வைக்கும் உத்தி பற்றிய செய்தி இது. நான் அனுபவித்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது)

4.ஏற்காடு மலைக்குளிரும் இலக்கியச் சாரலும்.




                                                        ஏற்காடு விடுதி


இந்தப்பயணம் மிகக் கடுமையான பயணமாக இருக்கும் என்று முன்னரே தெரிந்திருந்தால் பயணத்தை ரத்து செய்திருப்பேன்.
கடந்த ஆண்டு கலந்துகொண்ட ஊட்டி இலக்கியச் சந்திப்பின் இனிமையான நினைவுகள் ஆறுவதற்கு முன் இந்த ஆண்டு இன்னுமொரு இலக்கிய முகாமுக்கு ஏற்காடு பயணப்பபட்டோம். இலக்கியம் எங்களுடைய ஆன்மாவில் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்று. அதிலும் ஜெயமோகன் குழுமத்தின் ஏற்பாடு. சொட்டச் சொட்ட இலக்கியம் மட்டுமே பேசி, விவாதித்து, சண்டையிடும் ஒரு கொண்டாட்ட நிகழ்வு என்பதால் அதன் ஈர்ப்பிலிருந்து விடுபட முடியாது. அங்கே பிரமுகர், மாலை மரியாதை, போலிப் பாராட்டு, பரஸ்பர முதுகு சொரிதல் மேடை, நாற்காலி ஒன்று கிடையாது. தரையில் விரித்த பாயில் உட்கார்ந்துதான் இலக்கிய விமர்சனக்கள் விவாதங்கள் நடக்கும்.



                            ஜெயமோகன் இடது பக்க்ம் கையூன்றி அமர்ந்துள்ளார்
 
                                                           நாஞ்சில் நாடன்


தரையில் உட்கார முடியாதவர்கள் மட்டுமே நாற்காலியில் உட்காருவர். இவ்வெளிய நிகழ்ச்சியே இதன் முக்கியத்துவத்துக்கு ஆதாரம். எனவே  இப்பயணத்தைப் கடந்த ஆண்டு ஊட்டியிலிருந்து திரும்பிய கையோடு திட்டமிட்டுக் கொண்டோம். சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியை கூலிம் ஆஸ்ரமத்தில் சந்தித்து, பினாங்கு விமான நிலையத்துக்குப் போவாதாக முடிவெடுக்கப் பட்டது. அதன் படியே என் மகன் என்னைக் கூலிம் ஆஸ்ரமத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பினான். கூலிமிலிருந்து சுவாமியின் நண்பர்கள் எங்களை பினாங்கு விமான நிலையத்தில் கொண்டுபோய் சேர்த்தனர்.  எல் சி சி டி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு டிக்கெட் போட்டிருந்தோம். 27 ஜூன் காலை 6.30 மணிக்கு எங்கள் பயண நேரம். விமான நிலையத்துக்கு அருகில் உள்ள டியூன் விடுதியில் இரவு தங்கி மறுநாள் காலையில் பயணப் படவேண்டும்.
அங்குதான் துவங்கியது எங்களின் கெட்ட காலம்.
முன்னாலேயே விடுதியை புக் செய்துவிட்டதால் கனிணியில் பிரிண்ட் செய்த தாளைக் காட்டி சாவியை வாங்கிக் கொண்டோம். இருவருக்கான படுக்கை அறை. லாபியிலேயே ஒரு துண்டும் , ஒரு சவர்க்காரமும் ஒரு சேம்பு குப்பியும் கொடுத்தார்கள். இருவர் தங்கும் அறைக்கு ஒரு துண்டு மட்டுமே கொடுக்கப் பட்டது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். அத்துண்டையும் மீண்டும் லாபியிலேயே கொண்டு வந்து ஒப்படைத்துவிடவேண்டும் என்றே ஹோட்டல் பணியாளர்கள் சொன்னார்கள். நல்ல வேளையாக துவைத்து அயர்ன் செய்து தரவேண்டுமென்று சொல்லிவிடவில்லை. வேறொன்றுமில்லை நமக்கு பொறுப்புணர்ச்சியைக் கற்றுத் தருகிறார்கள். வீட்டில் அப்படியே கடாசிவிட்டு வந்தால் கொஞ்ச நேரம் பானை உருளும் ‘இல்லாள் அர்ச்சனை முறை’ நிகழும் . அது அதோடு முடிந்துவிடும். இங்கே கடாசிவிட்டு வந்த துண்டுக்கும் துட்டு கேட்பார்கள் போலும்.
டியூன் விடுதி அறையப் பற்றிச் சொல்லவேண்டும். அறையைத் திறந்து உள்ளே பார்த்ததும் வெட வெடத்துப் போனது. ஆளாளுக்கு ஒரு கைப்பை, ஒரு பெரிய பயணப் பை. அதனை வைத்ததும் கட்டிலில் ஏற முடியாது . ஏறினால் இறங்க முடியாது! பைகளே அறையை ஆக்ரமித்துக் கொண்டது. கட்டிலின் கால்மாட்டுப் பக்கம் போய்தான் ஏறவேண்டும் இறங்கவேண்டும். நடமாட முடியாது. நான் இருவருக்கு மட்டுமே புக் செய்த அறை இது. ஆனால் இன்னொரு இலக்கிய நண்பரை சேர்த்துக்கொண்டு பயணப்படலாம் என்று ஸ்வாமி சொல்லிவிட்டார்.- மூவரும் ஒரே அறையில் தங்க நேரிட்டது. மூன்று பெரிய பைகள், இரண்டு சிறிய பைக¨ள் ஏந்திக்கொண்டு கட்டிலின் பக்கவாட்டு இடம் பிதுங்கி நின்றது. கால் மாட்டுப் பக்கம்தான் ஏறி இறங்க வேண்டும். கட்டிலை சுவரோடு தள்ளிப்போட்டு இடத்தை பெரிதாக்க எண்ணினோம். தள்ளிப்போட்டுப் பார்த்தால் குளியலறைக் கதவைத் திறக்க முடியவில்லை. சரி நாளைக்குக் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாளிக்க முயற்சி செய்தோம். அன்றைக்கு சிவ ராத்திரிதான். எனக்கு பதினாறு முறை புரண்டால்தான் தூக்கமே வரும். புரள , நகர, நெளிய முடியாது. ஒருவரை இன்னொருவர் உரசிக்கொண்டல்லாவா  கிடக்கிறோம்.(ஒரு நாள் வாடகை 192 ரிங்கிட் மலேசியா)தூக்கமாவது மண்ணாவது! விடிய விடிய பேசினோம். பேச்சு இடைவெளி விடும் போது கோழித்தூக்கம். 4.30க்கு அலாரம் அதிர்ந்தது. ஊர்ந்து கீழே இறங்கி கட்டிலை நகர்த்தி முதலில் குளிக்கச் சென்றேன். கீழே போய் பேருந்தை சற்று நேரம் நிறுத்தி வைக்கலாம் என்ற முன்யோசனைதான். கீழே ஒரு பேருந்து ஆட்களை நிரப்பிக்கொண்டிருந்தது. பிதுங்கப் பிதுங்கப் பயணிகள் பேருந்தில் நிண்ரும், அமர்ந்து இருந்தார்கள். மணியைப் பார்த்தேன் காலை 5,25. டியூன் விடுதி ஏர் ஆசியா விமானத்தளத்துக்கு ஒரு கிலோ மீட்டர் அருகில் என்பதால் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் போனால் பயணிப்பையை செக் இன் செய்து விடலாமென்றே தப்புக் கணக்குப் போட்டிருக்கிறோம்.
அன்று காலையில் 4.30 மணிக்கு எழுந்ததுதான் நாங்கள் செய்த முதல் தவறு. மூன்று பேரும் குளித்து லாபிக்கு இறங்குவதற்குள் மணி காலை 5.20 ஆயிற்று. விமானத்தளத்துக்கு எங்களை ஏற்றிச்செல்ல வேண்டிய பேருந்து கீழே காத்திருந்தாலும் அதில் ஏற்கனவே பயணிகள் நிறைந்துவிட்டதை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன். “பிலைட் மிஸ்ஸாயிடும் , எங்களையும் ஏத்திக்கிங்க என்றேன்,” பேருந்து ஓட்டுனரிடம். “நெறஞ்சிடுச்சு முடியாது, தோ போய்ட்டு வந்திடுறேன், மூனு நிமிசம்,” என்றார். இனி அடுத்த பேருந்துதான் என முடிவாகிவிட்டது. மூனு நிமிசத்தில வந்திடுவேன் என்றவர் வந்து சேர 10 நிமிடம் ஆயிற்று. என் வாழ்வில் இரண்டாவது முறையாக பிலைட்டை தவறவிடப் போகும் வாடை புயலாகவே வீசியது. நான் படப் படப்பானேன். பேருந்து வந்து சேர்ந்ததும் பயணப்பைகளை மள மள வென ஏற்றினோம். நாங்கள் அவசரப்பட்டு என்ன செய்ய பேருந்துக்குள் ஒவ்வொருவராய் ஏறி அமர்வதற்குள் நேரம் கடந்துவிட்டிருந்தது. இன்னும் 35 நிமிடம் மட்டுமே பாக்கி. எல்லாரும் ஏறிய பிறகு ஓட்டுனர் ஒவ்வொரு பயணியிடமும் இரண்டிரண்டு வெள்ளி பயணக்கட்டனமாக வசூலிக்க ஆரம்பித்தார். பேருந்துக்குள் முப்பதுக்கு மேற்பட்டோர். நான் பதற்றத்துக்குள்ளானேன். இன்று பயணப்பட்ட மாதிரிதான். நான் மீண்டும் சொன்னேன்  “பிலைட் மிஸ்ஸாயிடுங்க,” அவர் என்னைப்பார்க்காமலேயே ஏதோ சொன்னார். “நீங்க முன்னாலேயே வந்திருக்கணும்” என்பது போலக் கேட்டது. அவர் அக்கறையெல்லாம் 2 ரிங்கிட் வசூல் செய்வதிலேயே இருந்தது. எனக்கு என்னையே கன்னத்தில அறைந்துகொள்ளவேண்டும் போலிருந்தது.
டோனி பெர்னாண்டஸ் - ஏர் ஆசியா நிறுவனத்தின் உரிமையாளர். மலேசியாவின் முதல் பத்து கோடீஸ்வரர்களில் ஒருவர்- பேருந்து கூட நிரம்பி வழிந்தால்தான் துட்டு நிறையும் என்பதிலேயே கவனமாக இருப்பவர் போலும். “ “மவனே பஸ் நெறையிறவரைக்கு கெளம்பாதே , கொன்னுடுவேன் வடுவா,” என்று அவரை மிரட்டியிருக்கக் கூடும்.
பேருந்து விமானத் தளத்தையடைந்ததும் பையை உருவி எடுத்துக் கொண்டு ஓடினோம். டிக்கெட்டைக்காட்டினோம்.
“சோரி சர்,” என்று கை விரித்து விட்டான் படுபாவி.
எங்கள் மூவரின் முகத்தை மாறி மாறி பார்த்துக் கொண்டோம். ஈ ஆடவில்லை என்றுதான் பொதுவாகச் சொல்வார்கள். ஈ இருந்தால் தானே ஆட. இன்னும் டுயூட்டிக்கு வரவில்லை போலும்! காலைக் குளிர்.தூக்கமின்மை உடற் சூட்டைக் கூட்டியிருந்தது. யாரைக் கோபித்துக் கொள்வது என்பதில் வேறு குழப்பம். ஏர் ஆசியா மீது எக்கச் சக்க கோபம். அந்த நிறுவனம் எல்லாவற்றிலும் துட்டைப் பார்க்கவேண்டும் என்ற கொள்கையை உடையது. . பதினாறு வயது சப்பாணி கமல் மாதிரி 'சந்தக்குப் போணும் காசை குடு.... காசை குடு' எடுத்தற்கெல்லாம் பிடுங்கல்  பண்ணும் நிறுவனம்.
ஸ்வாமி நான் மீண்டும் கூலிமுக்கு போகிறேன் என்றார்.
நானும் உங்களோடு கிளம்பி விடுகிறேன் என்றேன்.
“யுவா எப்படியாவது போயிர்லாம் சார்,” என்றார்.
நான் ஸ்வாமியையும் கூட கூப்பிட்டேன். “எனக்கு இப்பயே குதிக்கால் வலிக்குது.(அவருக்கு ஆணி வளர்ந்து சின்ன ‘சர்ஜரி’ செய்திருந்தார்).முடியாது” என்றார். அவர் போய் டிக்கட் பார்த்துவிட்டு வந்தார். 160 ரிங்கிட் பினாங்குக்கு.
“அதுக்கு சென்னைக்கே போயிடலாமே” என்றேன். “அப்போ நீங்க யுவாவோட சென்னை போங்க, நான் வரலே” என்று ஒற்றைக்காலில் நின்றார்.(பாத வலி இல்லையா!) ஒற்றைக்காலில்தானே நிற்க முடியும்.
யுவா போய் டிக்கட் பார்த்து வந்தார். 640 ரிங்கிட். அம்மாடியோவ்.
என்ன செய்யலாம் என்று யோசித்தேன். “நான் வரல யுவா” என்றேன்.
“வாங்க சார்..” என்றார் பதிலுக்கு. ஸ்வாமி “ரிட்டர்ன் டிக்கட் வீணாயிடும்” என்றார்.
நான் தலை சொரிந்து நின்றேன், யுவா மீண்டும் வற்புறுத்தினார். சரி போவோம் என்று முடிவெடுத்தேன். இணையம் மூலம் டிக்கட் புக் செய்தோம்.அன்றைக்கு விமானம் 4 மணிக்கு என்று உறுதியாயிற்று. ஸ்வாமி பினாங்குக்கு பறந்துவிட்டார். நானும் யுவாவும் பூச்சோங்கிலுள்ள அவர் இல்லத்துக்கு டேக்ஸி பிடித்தோம். தூக்கம் வரவே இல்லை.

தூக்கமின்மை எனக்கு அதீத சோர்வை கொடுத்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் கால் நீட்டிப் படுத்தால் தேவலாம். வாடகை கார் பூச்சோங் போய்ச் சேரவேண்டும்.


                                                        சேலம் பட்டணம்
                                   நகைச்சுவைப் பேச்சாளர் ஞானசம்பந்தன்



(இங்கே நிறுத்திவிட்டு பஞ்சாப் பயணத்தைத் தொடர்கிறேன்)

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த