Skip to main content

எதிர்ப்பாரா திருப்பங்கள் சிறுகதை வாசிப்பின் ஆவலைத் தூண்டின



       

        வாராந்திர இதழாக குமுதம் இதழ்களின் வழியேதான் நான் கதை வாசிக்கத் துவங்கினேன். குமுதம் இதழ்களை நான் கடையில் வாங்கியது மிகக்குறைவு . ஏனெனில் நான் வளர்ந்த தோட்டத்தில் ஜனரஞ்சக வாசகர் ஒருவரிடமிருந்தே குமுதமும் ஆனந்தவிகடனும் கல்கண்டையும் பெற்றுக்கொண்டு வாசித்தேன். இப்படி ஓசியில் வாசிப்பது எனக்கு மிகச் சுவாரஸ்யமான அனுபவமாகும்.  தமிழகத்திலிருந்து  கிட்டதட்ட இரண்டு வாரம் கழித்தே அவருக்குக் குமுதம்  கிடைக்கும். அவர் படித்து முடிக்க மூன்று நான்கு நாட்கள் ஆகிவிடும். அதை நான் போய் அவரிடம் இரவல் பெறக் காத்திருக்கும் தருணத்தைத்தான் கொஞ்சம் படபடப்பானது என்று சொல்வேன். இதழை அவரிடமிருந்து இரவல் வாங்குவதிலிருக்கும் படபடப்பைவிட அதில் இருக்கும் சிறுகதைகளும் அது என்னை அலைக்கழிக்கப்போகும் திடீர் திருப்பங்களுமே என்னை நிலைகொள்ளாமல் செய்துவிடும். அங்கிருந்துதான் எனக்கு வாசிப்புப் பழக்கம் உருவானது என்று சொல்லலாம். கையில் காசில்லாதவர்கள் ஓசியில் படிப்பது தப்பில்லை என்றே வாதிடுவேன். கற்கை நன்றே..பிச்சைப் புகினும்! நான் கேட்கும்போதெல்லாம் இரவல் கொடுப்பதில் அவர்  முகம் கோணியதில்லை. ஏனெனில் கதைகளையும் துணுக்குக்ளையும் படித்துவிட்டு அதுபற்றி தொடர்ந்து உரையாட நான் மட்டுமே அவருக்குக் கிடைத்திருந்தேன். அந்த அனுபவம் எவ்வளவு சுகமானது எவ்வளவு ஆத்மார்த்தமானது அவரும் நானும் உணர்ந்த உணர்ந்த காரணத்தால்தான் நான் அவரிடம் இரவல் வாங்குவதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.ளேன் மனம் புண்படாதவாறு அவர் புத்தகங்கள் கொடுப்பதைத் தொடர்ந்திருந்தார். வாசிப்புப் பழக்கத்தை மென்மேலும் வளர்த்தெடுத்த காரணத்தால்தான் ஓ ஹென்றி என்ற பாபெரும் எழுத்தாளர் என்னை வந்தடைந்திருந்தார்.
சிறுகதை எழுதுபவர்களுக்கு ஒ ஹென்றி மிகச் சிறந்த திறப்பைக் காட்டுபவர். மரபார்ந்த கதை சொல்லும் முறையில் கதையின் இறுதி முனை எதிர்பார்க்காத திருப்பங்களால்  அமைந்தவையாகவே இருக்கும். இப்படியான திடீர் திருப்பத்தை வைக்கவே ஓ ஹென்றி போன்ற எழுத்தாளர்களின் கதையாடும் பாணி வாசகனை ஈர்த்திருந்தது .தன் வார்த்தை அடுக்குக்குள் வசப்படுதியவாறே  கதையை மிகச் சாதுர்யமாக நகர்த்துவார் ஓ ஹென்றி. சற்றும் எதிர்பார்க்காத திருப்பங்களால் முடிவுறும் கதைகளே சிறந்த சிறுகதை என்று பேசப்பட்ட காலம் ஒன்றிருந்தது. குமுதம் போன்ற வெகுஜன இதழ்கள் இந்த மர்ம முடிச்சை முடிந்து கொண்டு போகும் கதை சொல்லும் முயற்சியை முன்னெடுத்தது ஓ ஹென்றி போன்றவர்களிடமிருந்துதான் எனத் துணிவோடு சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் சிறுகதை இலக்கியம் மேலை நாட்டிலிருந்தே இந்தியத் துணை கண்டத்துக்கு இறக்குமதியான வடிவமாகவே இருந்திருக்கிறது. மேலை நாட்டு சிறுகதைகளின் வடிவ நேர்த்தியை இந்திய எழுத்தாளர்கள் அப்படியே கையாண்டார்கள்.
ஆனால் இன்றைக்கு கதையின் முனையில் முடிச்சவிழ்த்துக்காட்டி வாசகனை திடுக்கிட வைக்கும் முறை நீர்த்துப்போய் விட்டது. ஏனெனில் இது போன்ற கதையாடல் நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வாசகனை போரடிக்கவைத்துவிட்டது. பல சமயங்களில் வாசகனே கதையில் கடைசி வாக்கியத்தின் சூட்சமத்தை கதை வாசித்து முடியும் முன்னரே யூகித்தறியும் திறனை பெற ஆரம்பித்துவிட்டான்.  வாசிப்புப் பயிற்சியின் மூலமே முடிவை யூகிக்கும் ஆற்றலை அடைந்து விட்டிருப்பான். எனவே சிறுகதையின் திடீர் முடிவுகள் அவனை ஒரு கட்டத்தில் கைவிட்டுவிடுகிறது. தன்னால் கதையின் இடையிலேயே யூகிக்க முடிந்த முடிவையே மிண்டும் சந்திக்கும் போது வெறுப்படைகிறார். அதனால் தற்போது வரும் கதைகள் முடிவைச் சொல்வது குறைவு. வாசகனே யூகித்துக் கொள்ளட்டும் என்ற பன்முகத்தன்மையை அளிக்கிறது பிறகு வந்த சிறுகதைகள். முடிவைத் திறந்துவிடப்பட்ட கதைகள் வாசகனுக்கு புதிய திறப்பை அளிக்க எழுதப்படுகிறது. அந்தந்த வாசகனின் வாழ்வனுபவம் அவனை அக்கதை விரித்துக் காணும் பரிமாணங்களை கொண்டிருகிறது. இன்றைய கதை வடிக்கும் சுவாரஸ்யம் அதுவே. அதனால்தான் பெரும்பாலான வெள்ளந்தி வாசக மனம் கதையில் என்னதான் சொல்ல வருகிறான் எனத் தலையைப் பரபரட்டெனச் சொரிந்து குழம்புகிறான். என்னடா சொல்றான் இவன் என்று புலம்ப ஆரம்பிக்கிறான்.
ஒரு படைப்பாளனின் வாழ்வனுபமே பெரும்பலான சமயங்களில் கதைகளாக வடிவம் பெறுகின்றன. ஓ ஹென்றி கடந்துவந்த வாழ்க்கையின் மணத்தை அவருடைய கதைகளில் நுகரமுடிகிறது. அவரிடைய ‘இருபது ஆண்டுகள் கழித்து’ (after twenty years) என்ற சிறுகதையை வாசித்து விட்டு அவருடைய  வாழ்க்கைக் குறிப்பைப் படிக்கும் என்னால் கண்டடைய முடிந்தது இதனையே.
ஓ ஹென்றி 1862 செப்டெம்பர் மாதம் அமேரிக்காவின் வடக்கு கெரலினாவில் பிறந்தவர். வாசிக்கும் பழக்கம் அவருக்கு சிறுவயது முதலே கூடியிருக்கிறது. பின்னாளில் அவர் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராகப் பரிமளித்ததற்கு வாசிப்பு காரணம். அவர் வாழ்க்கை எப்போதுமே மகிழ்ச்சியானதாகவே இருந்ததில்லை.
ஹ¥ஸ்டனில் ஒரு வங்கியில் வேலைசெய்தபோது வங்கிப்பணத்தை அவர் கையாடியதாகக் குற்றஞ்சாட்டப் பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார். அவரது மாமனார் அவரை ஜாமீனில் எடுத்து தற்காலிகமாக சிறைபடுவதிலிருந்து காப்பாற்றுகிறார். அந்த வழக்குச் சம்பந்தமாக ஒருநாள் அவர் நீதிமன்றத்து வரும் தருணத்தில் மனம் மாறி , குற்றஞ்சாட்டப் படுவதிலிருந்து தப்பிக்க வேறு ஊருக்குப் போய் தலை மறைவாகிவிடுகிறார். சில வருடங்கள் தலமறைவு வாழ்க்கையை வாழ்கிறார்.
அவரின் கெட்ட நேரம் அவரின் மனைவி நோய்வாய்ப்பட போலிஸ் அவருக்கு வலைவீசிக்கொண்டிருக்கும் அதே ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் நேர்கிறது. போலிசால் தேடப்பட்டுவரும் அவர் அங்கே கைதாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இது ஓ ஹென்றியின் வாழ்வின் ஒரு கசப்பான இழை.


நான் அவரின் ‘இருபது ஆண்டுகள் கழித்து’ என்ற கதையினை வாசித்து முடித்தபோது கிட்டதட்ட தன் கசப்பான  அனுபவம் ஒன்றையே அக்கதையாக முன்வைத்திருக்கிறார் என்று தோன்றியது. ஏனெனில் அக்கதை அவரின் வாழ்வனுபவத்துக்கு ஒத்திசைவான ஒன்றாகவே இருக்கிறது.
இருபது ஆண்டுகள் கழித்து என்ற கதை இரண்டு நண்பர்களின் உண்மையான  மன உணர்வையும் நட்பு வாழ்வின் நிதர்சனத்தையும் கதைக் களமாகக் கொண்டது. ஒன்றாகவே இளமையைக் கழித்த இருவரும் வாழ்வில் முன்னேற்றம் அடையவேண்டி ஒருநாள் வெவ்வேறு திசைக்குப் பிரிந்து போக முடிவெடுக்கிறார்கள். இருபது ஆண்டுகள் கழித்து பிரிந்த அதே இடத்தில் அதே நேரத்தில் சந்திக்கவேண்டுமென்று உறுதி பூண்ட பின்னரே பிரிகிறார்கள். உறுதி எடுத்த வாறே இருபது ஆண்டுகள் கழித்து போப் அதே இடத்தில் வந்து இருபது நிமிட நேரம் காத்திருக்கிறார். அது பனிகொட்டும் ஒர் இரவு வேலை. அப்போது அங்கே மேல் கோட்டு அணிந்து உயரமான உருவத்தோடு ஒருவர் வருகிறார். யாருக்கோ காத்திருக்கும் இவரைச் நோட்டமிடுகிறார். அவர் விரலில் வைர மோதிரம் ஒன்று பளிச்சிடுகிறது. அவருடைய டை பின் மின்னலடிக்கிறது. அவருடைய கைகடிகாரம் விலை உயர்ந்ததென சொல்லும் வகையில் அந்த இருட்டிலும் ‘அடையாளம்’ காட்டி பெருமமையடிக்கிறது .அந்த உயர்ந்த மனிதர் அவரை யார் எவரென விசாரிக்க அவர் அங்கே காத்திருக்கும் காரணத்தை விவரித்துகொண்டே, தன் தரமுயர்ந்த சுருட்டை தன் விலைமதிப்பற்ற தீப்பெட்டியால் பற்ற வைக்கிறார்.மந்த வெளிச்சத்தில் அவன் பொன்னாபரணங்கள் பளிச்சிடுகின்றன. அன்று இங்கிருந்து கிளம்பி நியூயோர்க்க சென்ற பிறகு பிரம்மிக்கத்தக்க முன்னேற்றம் அடைந்ததாகப் பெருமையோடும் சொல்கிறார் போப். காரணத்தைச் செவிமடுத்தபின் அவர் அங்கிருந்து கிளம்பிப் போய்விடுகிறார்.

சற்று நேரம் கழித்து   ஒரு சீருடையணிந்த போலிஸ் அங்கே பிரசன்னமாகிறார்.
“நீ போப்தானே? இருபது ஆண்டுகளுக்குப் பிறகுச் சந்திக்க உறுதி பூண்ட அதே போப்தானே?” என்று வியப்போடு வினவுகிறார்.
அடையாளம் கண்டுகொண்ட ஜிம்மி . போபை கட்டிப்பிடித்து நெகிழ்ந்துபோகிறார். வெகுகாலம் கழித்து அதே இடத்தில் அதே நேரத்தில் சொல்லிச் சென்றபடி சந்திப்பது அபூர்வமாக நடக்கும் ஒன்று என்பதால் இருவரின் மீள் சந்திப்பும் மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாகவே அமைகிறது. கட்டித்தழுவல் முடிந்து ஜிம்மி போப்பிடம் ஒரு துண்டுக் கடிதத்தைக் கொடுக்கிறார்.
“போப், சற்று நேரத்துக்கு முன்னர் உன்னைச் சந்தித்த அதே ஜிம்மிதான் நான். நீ உன் சுருட்டைப் பற்ற வைக்கும்போது ஒளிர்ந்த முகம்தான் இங்கே சிக்காகோ போலிஸ் வெகு நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த முகம் என்று கண்டு கொண்டேன். எனவே நான் போலிஸ் சீருடை அணிந்து வந்து உன்னைக் கைது செய்கிறேன்” என்று எழுதியிருந்தது.
அந்த மடலைப் படித்து முடித்து நிமிர்ந்து பார்க்கவும் போலிஸ் அவர் கைகளையும் விலங்கிடவும் சரியாக இருக்கிறது. கதை இங்கே முடிகிறது. அதன் திருப்பம் நாம் எதிர்பாராத ஒன்று. எப்படி உற்ற நண்பையே கைது செய்ய முடியும் என இந்திய மரபான நட்பு மனம் கேள்வி எழுப்புகிறது. ஆனாலும் இது ஒரு போலிஸ் நியாயமாக ஆற்றவேண்டி கடமையே என நம் தர்க்க மனம் தார்மீகத்தை முன்வைக்கவே செய்கிறது.
முடிவில் உச்சம் கொண்டு வாசகனை ஒது கணம் திகைக்க வைக்கும் கதைகளை ஓ ஹென்றி நிறையவே எழுதி இருக்கிறார்.







Comments

Anonymous said…
Τhank уou, I have just been lοoking foг infо appгoximаtelу
this subϳеct for a long time аnd yours іs the grеаtest I hаve found out so fаг.
However, what about the сοnсlusion? Are you sure
concerning the ѕourсe?

Ηеre is my blog: RPMPoker Offer
தயாஜி said…
தற்போது ஓ ஹென்றியின் சிறுகதைகளை வாசித்து வருகிறேன். உங்கள் இப்பதிவு எனக்கு உதவியாக கிடைத்தது. நன்றி...

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த