Skip to main content

மரணம் குறித்த முன் சமிக்ஞைகள்





                                                         கவிஞர் பா.அ.சிவம்


            பா. அ. சிவம் எனக்கு அறிமுகமானது தொலைபேசி வழியே. குரலை வைத்து அவர் முகம் இன்னெதென்று அனுமானிக்க முடியாததாக இருந்தது. ஆனாலும் மனம் அவர்க்கொரு முகத்தை வரைந்தபடி இருந்தது. அவர் பெயரை வைத்து , குரலை வைத்து அந்த ஓவியம் உருவாகிக்கொண்டிருந்தது. நமக்குப் பிரியமானவரின் முகத்தைப் பார்க்கும் ஆவலில் இப்படியான சித்திரங்கள் நம் மனம் வரைந்துகொள்வது இயல்புதானே!
“மலாயாப் பல்கலைக் கழக பேரவைச் சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் எழுதிய சிறுகதை  பரிசுக்குத் தேர்வு பெற்றிருக்கிறது, நீங்கள் நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்” என்று அழைத்துச் சொல்லியிருந்தார். அந்த ஆண்டு அவர் பேரவையின் தலைவராகப் பொறுப்பேற்று இருந்தார். எனக்குப் பரிசு கிடைத்த மகிழ்ச்சியை சற்றே மறந்து , நான் ஓர் இளம் எழுத்தாளர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும் பிரக்ஞையே குறுக்கிட்டது அப்போது.
நான் அவரிடம் கேட்டேன்,” நீங்கள் பத்திரிகையில் கவிதை எழுதும் பா. அ. சிவமா?” என்று. “ஆமாம் சார்” என்றார் அவர். ஒரு எழுத்தாளரோடுதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்ற மகிழ்ச்சி என்னுள் மல்லிகையின் மணமாய் உள் நுழைந்துகொண்டிருந்தது.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவரோடு பேச இயலவில்லை. டத்தோ சிரி சாமிவேலு சிறப்பு வருகையாளராக இருந்தபடியால் அவர் வேலை பளுவோடு இருந்தார்.
அதற்கும் அடுத்த ஆண்டு நான் பரிசு பெற மலாயாப் பல்கலைக் கழகம் சென்றிருந்தேன். அந்த ஆண்டு அவர் தலைவர் பதவியில் இல்லை. நான் துங்கு சாண்சிலர் மண்டபத்துக்குள் நுழைந்தபோது பா. அ. சிவம் மூன்று நான்கு நண்பர்களோடு சுவரின் மேல் அமர்ந்தபடி சிரித்துக் அலவாளாவிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் அடையாளம் கண்டு கொண்டவராகச் சுவரிலிருந்து சரக்கென்று இறங்கி, “வாங்க சார்,” என்று கைகுலுக்கினார். பல்க¨லைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களில் அப்போது அவர் எனக்கு நெருக்கமானவராக ஆகியிருந்தார். அவர் எழுதிய கவிதைகள் பற்றியும் என் எழுத்துலகம் பற்றியும் அந்தச் சந்திப்பின் பேச்சு அமைந்திருந்தது. இன்னொரு சக எழுத்தாளனைச் சந்திக்கும் தருணம் அலாதியானது. அதிலும் படைப்பிலக்கியத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழப் போகிற எழுத்துக்குச் சொந்தக் காரரோடு பேசிக்கொண்டிருப்பது உடன் பிறந்தவரிடம் பழகும் அனுபவமாகவே இருந்தது. ஆள் உயரமாகவுமில்லாமல் குள்ளமாகவும் இல்லாமல் சராசரி உயரத்தில் இருந்தார். சிவந்த அழகிய வட்ட முகம். எல்லாவற்றுக்கும் மேலாக புதியவரை வரவேற்கும், அனுசரிக்கும், சிரித்த முகம். முகமூடியற்ற முகம்.
அதற்குப் பிறகு அவர் வடிக்கும் கவிதை வழியே நான் அவரோடு மிக நெருக்கமானேன். அக்கவிதைகளை வாசிக்கும் தருணத்தில் நாம் அதனோடு ஒன்றித்து விடுவோம். அவை மனித உணர்வுகளின் பிரதி பிம்பமாக பயணிக்கும். எளிதில் உள்வாங்கப்பட்டு படிமங்களாக மாறிக்கொண்டிருக்கும். கவிதைகள் முடிவுற்ற புள்ளியிலிருந்து மேலுமொரு பரிமாணத்தோடு இயங்க ஆரம்பிக்கும்.
ஒருமுறை அவர் ‘சாமி’ என்ற தலைப்பிட்ட கவிதையொன்றை ‘தென்றல்’ இதழில் வாசிக்க நேர்ந்தது. அவர் புதுக்கவிதைத் துறையில் கால் பதிக்கப் போராடிய நேரம் அது.‘அப்பா சாமி கும்புடுறதில்ல’ என்ற பேச்சுத் தமிழில் தொடங்கி இருந்ததை நான் அபூர்வமான ரசனையோடு படிக்கத் துவங்கினேன். அந்தக் கவிதையில் வந்த அப்பா ஒரு நாத்திகராகப் பாத்திரத்தை ஏந்தியிருந்தார். அப்பா எத்துயரத்திலும் கடவுளை வணங்கியதில்லை என்ற பொருளோடு ஒலித்த கவிதை அது! வீட்டிலும் கோயிலிலும் பணமும் நகையும் பொருளும் திருட்டுப் போகும் பட்சத்தில் கடவுளின் இருப்பு குறித்து எழுப்பப் பட்ட அங்கதத் தொனியிலான கவிதை. கடைசி வரியில் அவர் முத்தாய்ப்பாக சொன்ன வரிகள்தான் உச்சத்துக்குக் கொண்டு போனது.
     ஆண்டுக்கூட்டத்துல பேசி
     ஆத்தாவுக்கு
     “ரேலா”
     ஏற்பாடு செய்யணும்.
கடவுளை பாதுகாப்பு அரணாக நம்பி வழிபடும் சமூகக் கருத்தாக்கத்தில் கடவுளுக்கே காவல் தேவை என்று முடித்திருப்பது எவ்வளவு பெரிய நகைச்சுவை. இந்தக் கவிதைச் சாயலில் அப்பா சாமி கும்பிடுவாறு என்ற தலைப்பில் ஒரு சார்புக் கவிதை எழுதியிருந்தேன் நான். அவரின் அந்தக் கவிதை என்னை எழுதத் தூண்டியது. அது குறித்து அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தது நெகிழச் செய்தது என்னை. ஒரு மூத்த எழுத்தாளர் என் கவிதைக்குப் பதில் கவிதை எழுதியிருப்பது என்னை மதிப்பதற்குச் சமமானது என்று குறிப்பிட்டு என்னையும் கௌரவப் படுத்தி இருந்தார் சிவம்.
பா. ஆ. சிவத்தின் மரணச் செய்தியை என் காதுகளில் காய்ச்சப்பட்ட ஈயமாய் ஓதியவர் கவிஞர் தேவராஜன்.  அன்று இரவு சிங்கப்பூர் செல்வதற்காக அந்நிய செல்வாணியை மாற்றிக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தபோது அந்த அழைப்பு தீக்கனலாய் நெஞ்சில் அறைந்தது. ஒரு கணம் நிலைகுலைந்து போனேன். கார் ஸ்டார்ட் செய்தபடியே நகராமல் நின்றிருந்தது. மரணச் செய்தி பொய்யாக இருகக்கூடாதா ,என்ற மனம் வேண்டியபடி நின்றது. இளமை காலத்தைக் கூட சரிவர வாழாத கவிஞன் ஒருவருக்கு நேரக்கூடாத அசம்பாவிதம் இது. பெருமனதோடு கொடுத்ததையே இப்படி இடையில் வந்து பிடுங்கிச் சென்றது என்ன தர்மம்? காலம் கனியும் வரை காத்திருக்கக் கூடாதா? ஏனிந்த அவசரம் எமனுக்கு? என்று ஒரு மனம் துடித்தவண்ணம் இருந்தது.
வீட்டில் வந்து முகப் புத்தகத்தைத் திறந்தால் அவருடைய பால்வடியும் முகமும் அவலச் செய்தியும் வந்து விழுந்தபடி இருந்தது. மரணித்தது உறுதி. இதில் பொய் விளையாட்டு இல்லை என்று உறுதியானதும் கனக்கத் துவங்கியது நெஞ்சு.
எனக்கென்னவோ அவரின் குறை ஆயுள் குறித்த அறிவிப்பு சமிக்ஞைகள் அவர் கவிதைகள் பலவற்றுள் திருமத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருந்ததாகப் பட்டது.
    அவருடைய ‘உனது பெயர் நான்’ என்ற கவிதை நூலில் முதல் கவிதையாக ‘அன்புள்ள அப்பா’  என்ற தலைப்பில் பதிவாகியிருக்கிறது. இது அப்பவின் மரணம் குறித்த பதிவு. அப்பா இறந்தும் இன்னும் வீட்டில் இருப்பதாகவே உணர்கிறார். அவர் வீட்டில் புழங்கும் ஓசை வீட்டில் ஒலித்தபடியே அவருடைய இருப்பை உணர்த்திய வண்ணம் இருக்கிறது. இங்கேயும் கவிதையின் இறுதி வரியில்தான் தன் முத்திரையைப் பதிக்கிறார்.
     பிரேதம் எடுத்தாகி
     ஊரார் கலைந்து
     கவுச்சி எல்லாம் கலந்து
     நாள்கள் பல
     கடந்த பின்னும்
     “ அப்பா இன்னமும்
     வீட்டிலேதான் இருக்கிறார்”
என்று அப்பா தங்களோடு வாழ்ந்தது பற்றிய நினைவின் முடிவின்மையை விவரிப்பார். ஒரு சிறுகதையின் எதிர்பாரா திருப்பம் போல நம்மை விக்கித்துப் போக வைக்கும் வரிகள் இவை. அம்மாவின் இறப்பையும் கவிதையாக வடித்திருந்தார். துங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் நடந்த மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கவிதை ஆய்வரங்கில் அக்கவிதை முதற் பரிசு பெற்றிருந்தது. அந்த ஆய்வை நான்தான் மேற்கொண்டேன். அம்மா சவப்பெட்டிக்குள் வைத்து கடைசி ஆணி அடிக்கப் பட்டது என்று எழுதியபோது இறந்து ஆண்டுகள் கடந்த என் அம்மா எனக்குள் நுழைய ஆரம்பித்தார். சவப்பெட்டி மூடுவதற்கு முன் கடைசி கடைசி என்று பார்த்த தாயின் முகம் சோகத்தைக் கிளறியபடியே இருந்தது.
நட்பு எப்போதுமே கூடிக் குலாவிக் களிக்கும் உறவு அல்ல. அதன் இன்னொரு முகம் கொடூரமானது. காழ்ப்பும் வெறுப்பும் மறைத்து விளையாடும் உறவுதான் நட்பு!. அதன் முழு முகம் வெளியே தெரியவரும் போதுதான் நட்பின் மோசமான முகவரி புலனாகும். ஒரு சிறிய கவிதையில் நட்பின் மேல்பூச்சு அடையாளம் தெறித்து சிதறும் படி எழுதுவார்.
    வெட்டியான் செத்தபின்
    வெட்டுவான்
    நண்பன்
    சாவதற்காய் வெட்டுவான்.
வெட்டியான் ஒரு சாண் வயிற்றுக்காய் வெட்டுவதும், நண்பன் உள்ளபடியே சாகடிக்க வெட்டுவதும் என்ன ஒரு முரண் நகை! இதிலேயும் சாவு!
     அதே தொகுப்பில் ‘பிரிவின் குரல்’ என்ற அவல ஓசையோடு ஒரு கவிதை வருகிறது. இந்தக் கவிதையைப் படித்ததுதான் அவர் தனக்காக எழுதிக்கொண்ட ஒன்றா என்று சந்தேகிக்க வைக்கவும் செய்கிறது! அவ்வளவு உருக்கம்.
     என்றாவது ஒருநாள்
     இது நிகழுமென்று
     தெரியாமலில்லை
     இன்றே நிகழ்ந்ததைத்தான்
     ஏற்றுக்கொள்ள
     முடியவில்லை.....
     உடனிருப்பாய் என்றாய்
     எனக்குத் தெரியவேண்டும்
     முதலில்
     ‘நீ எங்கு இருக்கிறாய் என்று’
இதனைப் படித்தவுடன் அவருடைய எதிர்பாரா பிரிவு மனதை மீண்டும் மீண்டும் உலுக்கிவிடுகிறது. ‘நீ எங்கு இருக்கிறாய்’ என்ற இறுதி வார்த்தைகளை நமக்குள் திணித்துவிட்டு , அதே பதிலற்ற வினாவை நம்மைத் தொடுக்க வைத்து அவர் கரைந்து காணாமற் கிடக்கிறார்.
நான் அவரைச் சந்தித்தது ஐந்தாறு முறைதான் இருக்கும். ஒவ்வொரு முறையும் அவர் அன்பில் நான் உறைந்துபோயிருக்கிறேன். ஒரு மூத்த எழுத்தாளரை மதிக்கும் மனம் அவருக்கு. ஒவ்வொரு சந்திப்பிலும் என்னைத் தொட்டு சென்ற கனிவான வார்த்தைகள் என்னை அலைக்கழித்தபடி இருக்கின்றன.
ஆகக் கடைசியாக சிவத்தை நான் சந்தித்தது மலாக்காவில் மௌனம் கவிதை இதழ் விழாவில். தற்காலக் கவிதைகள் பற்றிப் பேசியதாக நினைவு. நிகழ்வு முடிந்து மண்டப வாசலில் மற்ற சந்திப்புகள் போலல்லாமல் இந்த இறுதிச் சந்திப்பில் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
மௌனம் 13வது இதழில் அவர் எழுதிய ‘நீயில்லாத வானம்’ கவிதை அவருடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்து பிரிவைத் துயரைப் பெரும் சுமையாக்குகிறது.
நீயில்லாத
வீட்டிற்குத் திரும்புவதாக

உன்னை நினைத்துச்
சுவரில் தொங்கும்
படங்களுடன்
உரையாடிக் கொண்டிருப்பதாக

கிண்ணத்தில் இல்லாத
தேநீரை
உன்னுடன் அமர்ந்து
பருகுவதாக

நடு இரவில்
ஆகாயத்தை நோக்கி
உனது பெயரைக்
கூவி அழைப்பதாக

வானத்தில் தேமல் தோல்
உரியும் ஒவ்வொரு வேளையும்
உயிர் பிரிந்து
உயிர் மீள்வதாக

ஒவ்வொரு நாளும்
பிறந்து இறக்கிறது
வாழ்க்கை

ஆமாம் அவரின் மரணம் குறித்த ஞாபகங்கள் அவரோடு கழித்த பொழுதுகளைக் கிளர்ந்து விடுகிறது. அவர் சொல்வது போல அவரின் பேரிழப்பு ஒவ்வொரு நாளையும் அவதரிக்க வைத்து இறப்பின் துயரங்களை இதயத்தின் அருகில் வைத்துவிட்டுச் செல்கிறது.
அவருடைய திடீர் மறைவும், அவர் எழுதிய மரணம் சார்ந்த கவிதைகளும் இப்போது ஒன்றோடு ஒன்று சந்தித்துக் கொள்ளும் அமானுஷ்ய தருணத்தை என்னால் கனத்த சோகத்தோடுதான் எதிர்கொள்ள முடிகிறது. இதனை ஒட்டிய இன்னொரு சம்பவம்! மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன் வல்லினம் நிகழ்ச்சிக்கு நண்பர்களோடு சென்றிருந்தேன். கே.எல் செண்டரில் விடுதி எடுக்க லோபியில் காத்திருந்த நேரத்தில் பா. ஆ. சிவம் எங்களைப் பார்க்க அங்கே வந்திருந்தார். மோட்டார் சைக்கிலில்தான் என்று நினைக்கிறேன்.  அவருக்கு அப்போது வானொலியில் செய்திப் பிரிவில் வேலை என்று நினைக்கிறேன். விடி காலையிலேயே எழுந்து வேலைக்கு ஓடி வாசிப்பறைக்குச் செய்தி அனுப்பவேண்டிய மிகக் கடுமையான வேலை. அந்த பணி பளுவிலும் எங்களை நிகழ்ச்சிக்கு வரவேற்க அங்கே வந்திருந்தது என்னை ஒரு கணம் மலைக்க வைத்தது. பெரும் பட்டணத்தின் நெரிசலைக் கடந்து வந்தது மட்டுமின்றி , “விடுதி நல்லால்லனா சொல்லுங்க சார் வேற எடம் பாக்கலாம்,” என்றார் நட்பின் கரிசனம் மிகுந்த குரலோடு விருந்தோம்பல் செய்தார். அப்படி அன்பொழுக வரவேற்றதும், விடுதி அறை உறுதியாகும் வரை எங்களுக்காகக் காத்திருந்ததும், இன்னும் நினைவிலிருந்து மறையாத போது அவர் மறைந்து போனது எவ்வளவு கொடூரம்?
என்றைக்கோ அவர் எழுதிய பிரிவு சார்ந்த கவிதைகள் இப்போதும் இந்த தருணத்தில் நெஞ்சைக் கீறிச் செல்கின்றன.
   
    அதீத பிரியங்கள்தான்
    கோரியிருக்கின்றன
    நமக்கிடையே
    துயரப்பிரிரை

பா. அ. சிவம் அமைச்சர் சுப்ரமணியத்தின் பத்திரிகைச் செயலாளரகப் போனதிலிருந்து அவரோடு தொடர்பு கொள்வது எளிதில் நடக்கக்கூடிய காரியமாக இல்லை. அதனால் கவிதை எழுதுவதையும் குறைத்துக் கொண்டிருந்தார். ஒரு நல்ல கவிஞன் வாழ்வாதாரத்துக்காக தான் விரும்பும் ஆத்ம பயணத்திலிருந்து விலகி நிற்கும் சந்தர்ப்ப சூழ்நிலையை நினைத்து நான் கொஞ்சம் வருந்தியதுண்டு. இருந்தாலும் இலக்கிய நண்பர்களுக்காக இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்து கொடுப்பதிலிருந்து அவர் பின்வாங்கியதே இல்லை. கவிதை எழுதுவதைக் குறைத்துக் கொண்டாலும் இலக்கிய நிகழ்வுகளில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டுதான் இருந்தார்.
அவருடைய பிரிவு சம்பந்தமான கவிதைகள் துயரங்களைக் கொண்டு வருபவை. நம்மோடு இல்லாமல் இருக்கும்  தருணத்தில்தான் பிரிவு குறித்த அவருடைய பதிவுகள் அவர் தன் மரணத்தை உணர்ந்திருக்கக் கூடுமோ என்ற அமானுஷ்ய சிந்தனையையும் சந்தேகத்தையும் எழுப்புகிறது.
அவர் எழுதிய கவிதைகளே அதற்குச் சான்று. அவருடைய கவிதைகளைக் கொண்டே அவருக்கே அஞ்சலி செலுத்தும் இத்தருணம் வலிகள் நிறைந்தது.


     அன்புள்ள கடவுளுக்கு
     என்றெழுத ஆசை
     அத்தனை இறைஞ்சல்களும்
     இறந்துபோனதில்
     அர்த்தமற்றுக் கிடக்கிறது
     ஆத்ம சுருதியின் ஓசை

என்ற ஒரு கவிதையும்,
 
    மீண்டும்
    பார்க்க முடியாது
    என்பதைத் தவிர,
    வேறு என்ன உண்டு
    உனது சாவில் நண்பா?

என்ற கவிதையயும் அவருக்கே அஞ்சலியாக்குகிறேன்.


 

Comments

மனதை பாரமாக்குகின்ற அஞ்சலி சார் இது.... அவர் கவிதைகள் அனைத்திலும் மர்மம் சூழ்வதை இப்போது உள்வாங்கும்போது உணர்ந்துகொள்ளப்படுகிறது.
அழகானவர். புன்னகையே அழகு. கவிதையே அறிமுகம். எழுத்தே அடையாளம். நமது இலக்கிய உலகிற்கு அவரின் பிரிவு பேரிழப்பு.. ஈடுகட்ட முடியாத பேரிழப்பு. அவர் போல் கவிதை எழுதுபவர்களை உருவாக்கவே முடியாது. அது அவரின் சமூதாய உள்வாங்கள். காப்பி அடிக்கலாம் ஆனால் உணர்ந்து எழுத அவர்தான் வரவேண்டும்.
Anonymous said…
hi sir.. where cn i gt mr. sivam kavithai book ? plz reply

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின