Skip to main content

இனப்படுகொலையும் அரசை நம்பாத மாணவர்களும்


( முகநூலிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது)
 
மாணவர்களே, எவரையும் நம்பாதீர்கள்!
ம.செந்தமிழன்

மாணவப் போராளிகளே,
2009, மார்ச் மாதம் நடந்திருக்க வேண்டிய போராட்டங்கள், இப்போது நடக்கின்றன. அந்தக் காலத்தில்தான், புலிகளின் படையை இந்தியச் சதி சுற்றி வளைக்கத் தொடங்கியிருந்தது. இந்தியக் கடற்படை, இலங்கைத் தீவைச் சுற்றி நின்று அரண் அமைத்து கடற்புலிகளைக் காவு வாங்கியது.

கடல் வழியே தப்பிச் செல்ல முனைந்த பொதுமக்களுக்கும் கடல் வழியை மறுத்தது இந்தியக் கடற்படை. நிலப்பகுதிகளோ, சிங்களப் படையின் பெரும் எண்ணிக்கையினால் சுற்றி வளைத்து மூடப்பட்டது. வீரம் செறிந்த தாக்குதல்களைப் புலிகள் நடத்தியபோதும், வான்வழியே பறந்து கொத்துக் குண்டுகள் வீசி, புலிகளின் அனைத்து நிலைகளும் அழிக்கப்பட்டன.

ஒருபுறம் கிளிநொச்சியிலிருந்து மாதக் கணக்கில் நடந்தே வந்து சேர்ந்த பொதுமக்கள், மறுபுறம் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் முற்றுகை. புலிகளின் அப்போதைய நிலையை உலகின் எந்த மனிதனாலும் கற்பனையிலும் காண இயலாது. உணவுப் பஞ்சம், தண்ணீர் பஞ்சம், மருந்துகள் இல்லை, கை கால்கள் முறிந்தவர்களை உயிரோடு விட்டுவிட்டு பயணத்தைத் தொடர்ந்தனர் மக்கள்.

இரண்டு பிள்ளைகளுடன் நடக்கிறாள் தாய் ஒருத்தி. மூத்த பிள்ளை கால்களில் ஷெல் அடிபட்டு வீழ்கிறான். அவனைத் தூக்கிக் கொண்டு ஓட இயலாது. பிள்ளையோ கால்களின் தசை கிழிந்து கதறுகிறான். மற்ற பிள்ளை அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அரற்றுகிறாள். மூத்தவனை அங்கேயே விட்டுவிட்டு, இளையவளுடன் ஓடுகிறாள். அடுத்த ஷெல்லில், தாயின் தலையில் அடி. மேற்கொண்டு நடக்க இயலாமல், அருகேயிருந்த புதரில், பிள்ளைகளுடன் பதுங்கிக் கிடக்கிறாள். மறுநாள் காலை, சிங்களப் படையினர் ரோந்து வருகையில், புதருக்குள் பிள்ளை அழுகுரல் கேட்கிறது.

அந்த இளைய மகளுக்கு நான்கு வயது. தலையில் ஷெல்லடிபட்ட மயக்கத்தில் கிடந்த பெண்ணை, புதரிலிருந்து இழுத்து வெளியே போட்டு, நான்கு வயது மகளின் முன்னே, வல்லுறவு கொள்கின்றனர். அந்தத் தாய் கத்தவும் இல்லை, கதறவும் இல்லை. அவள் எப்போது இறந்தாளோ யாரறிவர்?

துப்பாக்கிக் கட்டையைத் திருப்பி, பின்கட்டையால் அடித்தே அந்த நான்கு வயது சிறுமி கொல்லப்பட்டாள்.
இதுபோன்ற, சம்பவங்களைப் போரிலிருந்து தப்பிய மக்களிடம் நீங்களும் கேட்டிருக்கலாம். சிங்கள இராணுவம் நடத்திய வெறியாட்டங்களுக்கு இம்மக்களே சாட்சிகள். ஆனால், இந்த சாட்சிகளைப் பதிவு செய்வதற்குக் கூட நாதியற்ற நிலையில்தானே ஈழம் உள்ளது?

நடந்த பேய்க் கூத்துகளை நிறுத்தவில்லை, தடுக்க முயற்சிக்கக் கூட இல்லை, விசாரிக்கவும் விட மாட்டோம் என்கிறது சர்வதேச அரச சமூகம். அவர்கள் விசாரணையை விரும்பமாட்டார்கள். காரணம் ஒன்று உண்டு. இந்தத் தருணத்தில், அதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

Operation beacon – என்றொரு இராணுவ செயல்திட்டம்.

பீக்கான் திட்டம்:

பீக்கான்(Beacon) என்றால்,‘திக்குத்தெரியா இடத்தில் வழிகாட்டி அழைத்துச் செல்லுதல்’ என்று பொருள். 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் பீக்கான் திட்டம் இறுதிப்படுத்தப்பட்டது. சிறீலங்கா, இந்தியா, உள்ளிட்ட இருபது இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் கூடி சதியாலோசனை செய்து இத்திட்டத்தை தீட்டினர். அமெரிக்காவும் இத்திட்டக் குழுவின் ஓர் அங்கம்தான்.

பீக்கான் திட்டத்தின் சாரம் இதுதான்:
• இத்திட்டத்தின் நோக்கம் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ இயக்கத்தை முற்றிலும் ஒழித்துக் கட்டுவது.
• 2006 மே மாதம் இத்தட்டம் துவக்கப்பட வேண்டும்
• 2009 மே மாதம் திட்டம் முடிக்கப்பட வேண்டும்
• புலிகள் இயக்கத்தில் எஞ்சியுள்ளோரைத் துடைத்து அழிப்பதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, 2011 மே மாதம் இதன் கால எல்லை.

பீக்கான் திட்டத்தின்படியே 2006 – 2009 ஆகிய மூன்று ஆண்டுகளாக தமிழீழக்களம் இயங்கியது என்பதை மேலேயுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. 2006 ஏப்ரல் 25 ஆம் நாள் சம்பூரில் முதல் விமானக் குண்டு வீச்சில் சிங்கள இராணுவம் ஈடுபட்டது. நான்காம் ஈழப்போர் துவங்கிய நாள் இதுவே.

விடுதலைப்புலிகள் பீக்கான் திட்டத்தைத் தொடக்கத்திலேயே அறிந்திருந்தனர். புலிகளின் ஆதரவு இணையதளமான (தமிழ் எடிட்டர்ஸ்.காம் - tamileditors.com) பீக்கான் திட்டம் குறித்த விரிவான கட்டுரையை 2007 ஆம் ஆண்டிலேயே எழுதியிருந்தது. ‘இராணுவத்துடன் எதிர்த் தாக்குதல் நடத்தாமல், தற்காப்புச் சமர் புரிந்து கொண்டே பின்வாங்குவது’ என்பதே புலிகளின் போர்த்தந்திரமாக இருந்தது.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25- ல் சம்பூரில் முதல் குண்டு விழுந்தபோது, சர்வதேச நாடுகள் சிங்கள அரசைக் கண்டித்து வாய் திறக்கவே இல்லை.

அது ‘சமாதானக் காலம்’. புலிகளும் சிங்கள அரசும் நார்வே தலையீட்டுடன் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்த காலம். இருந்தபோதிலும், சிங்கள இனவெறி அரசின் அத்துமீறுலை உலகம் கண்டும் காணாதிருந்தது. காரணம் - சம்பூரில் விழுந்த குண்டு சிங்கள இராணுவத்திற்கு மட்டும் சொந்தமல்ல் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கும் சொந்தமானது.

பீக்கான் திட்டத்தின் நோக்கம் ‘விடுதலைப்புலிகளை அழிப்பது’ என்று சொல்லப்பட்டாலும், அதன் முதன்மை நோக்கம் தமிழீழத் தேசிய இனத்தையே அழிப்பது தான்!

பீக்கான் திட்டத்தின் முதன்மையான அம்சம் என்னவெனில், ‘தாக்குதலின் போது, அதிகப்படியிலான விமானக் குண்டு வீச்சிலும், பல்குழல் எறிகணை வீச்சிலும் ஈடுபடுவது அவசியம்’ என்பதாகும். இத்தாக்குதல்களின் நோக்கம் பேரளவில் பொதுமக்களைப் படுகொலை செய்வது என்பதே! இதன் வழி சிங்கள - இந்திய வல்லாதிக்கக் கூட்டுநாடுகள் அடைய விரும்பிய நலன்கள்:

1. ஆயிரக்கணக்கில் படுகொலைகள் செய்வதன் வழி, தமிழீழ இனத்தின் எண்ணிக்கையைக் குறைத் தல்.
2. படுகொலைகள் கட்டற்றுப் போகும் நிலையில், மக்கள் பீதியடைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு.
3. தொடர்குண்டு வீச்சுகளால் தமிழீழத்தின் வாழ் வாதாரங்களைச் சிதைத்து, மக்களை உள்நாட்டு ஏதிலிகளாக்குவது.
4. போரின்போது, விடுதலைப் புலிகள் தற்காப்பு நிலை எடுத்து பதுங்கிக் கொண்டால், பெருமளவு மக்களைப் பலி வாங்குவதன் வழி புலிகளைக் களத்திற்கு வரச் செய்து வழிப்பது.

பீக்கான் திட்டத்தின் வடிவமைப்பில் ‘இனப்படுகொலை’ இடம் பெற்ற போது, இதற்கு உலகத் தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வரும் என்று அஞ்சப்பட்டது. பீக்கான் திட்டத்தின் வடிவமைப்பாளர்கள் தமிழர் போராட்டம் வெடிக்கும் அபாயமுள்ள 12 நாடுகளைப் பட்டியலிட்டனர். இந்நாடுகளில் உள்ள தமிழர் தலைவர்கள் "பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தனர்’ என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட வேண்டும்’ என்று பீக்கான் திட்டம் வழிகாட்டியது.

தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திரு.கருணாநிதி, இத்திட்டத்தின் அங்கமாகச் செயல்பட்டார் என்பதை உணர வேண்டும். போர் நடந்த காலத்தில், ஈழப் போரைப் பற்றி மேடையில் பேசிய காரணத்திற்காக, திரு.சீமான், திரு.பெ.மணியரசன், திரு.கொளத்தூர் மணி போன்றோர் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

போர்க் காட்சிகள் அடங்கிய குறுவட்டுகளை வைத்திருந்தாலே கைது செய்யப்படுவர், எனும் புதிய சட்டம் திரு.கருணாநிதியால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதாவது, ஈழத்தில் போர் நடக்கிறது, அதில் மக்கள் குவியல் குவியலாகக் கொல்லப்படுகிறார்கள் எனும் செய்திகூட தமிழகத்தில் பரவக்கூடாது என்று விரும்பினார் அவர்.

இந்த நடவடிக்கையின் வழியாகவே, படுகொலையில் தனது பங்களிப்பை அவர் செவ்வனே செய்தார்.

விடுதலைச் சிறுத்தைத் தோழர்கள் பேருந்து மறித்ததற்காக, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்கள். அப்பொழுதும், அக்கட்சி தி.மு.க கூட்டணியில்தான் இருந்தது.

சிங்கள இராணுவத்திற்கு இந்திய ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இராணுவ வாகனங்களை மறித்த ‘குற்றத்திற்காக’ ம.தி.மு.க, பெரியார் தி.க உள்ளிட்ட எண்ணற்ற அமைப்புகளைச் சேர்ந்த உணர்வாளர்களும், மனித உரிமைப் போராளிகளும் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நியாயமாக, திரு.கருணாநிதியே, இந்த இராணுவ வாகனங்களைத் தடுக்க வேண்டும். அவரோ, அந்த வாகனங்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு அளித்து, அனுப்பி வைத்தார். மேதகு பிரபாகரனின் தாயார் மருத்துவம் பார்க்க சென்னை வந்தபோது, அவரை மீனம்பாக்கம் விமானநிலையத்திலேயே பல மணிநேரம் காக்க வைத்து, திருப்பி அனுப்பினார்.

சிங்கள அமைச்சர்கள் தமிழகக் கோயில்களுக்கு வரும்போதெல்லாம், தமிழகக் காவல்துறையின் பாதுகாப்பு மரியாதையோடு வரவேற்றார்.
போருக்குப் பின், பஞ்சத்தில் மாண்டுகொண்டிருந்த மக்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் ஒரு கப்பல் நிறைய உணவு அனுப்பினர். ‘வணங்கா மண்’ என்பது அந்தக் கப்பலின் பெயர்.

அந்தக் கப்பல், சென்னைத் துறைமுக எல்லைக்குக் கூட வராமல் கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டது திரு.கருணாநிதியின் ஆட்சியில்தான்!

அங்கே, கொத்துக்குண்டுகள், இரசாயனக் குண்டுகள் வீசப்பட்டபோதெல்லாம், தமிழகச் சிறைச்சாலைகள் போராளிகளால் நிரம்பி வழிந்தன என்பதை, மாணவர்களே மறந்துவிடாதீர்கள்!

காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதும் பின் அரவணைப்பதும், தி.மு.கவின் வரலாறு. 1967 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், மொழிப்போரில் ஈடுபட்ட 300 தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

உலகில் எந்த இனமும் தனது சொந்த நாட்டிலேயே தாய்மொழிக்காகப் போராடி இவ்வளவு பேரைப் பலி கொடுத்ததே இல்லை. அந்த எதிர்ப்பலையில், ஆட்சிக்கு வந்தது தி.மு.க.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் திரு.மு.கருணாநிதி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். அவரது அப்போதைய முழக்கம்:
‘நேருவின் மகளே வருக. நிலையான ஆட்சி தருக’

போரில் கொல்லப்பட்ட 300 இளைஞர்களின் பிணக்குவியலில்தான் அவர் முதல்வர் இருக்கை அமைத்து அமர்ந்தார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, 300 மாணவர்களைச் சுட்டுக் கொன்ற காங்கிரஸ் முதல்வர் பக்தவசலத்திற்கு, தமது ஆட்சிக் காலத்தில் மணிமண்டபம் அமைத்தவரும் திரு.கருணாநிதிதான்!

மொழிப்போரில் கொல்லப்பட்டவர்களின் கல்லறைகள் எங்கேயுள்ளன என உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு அந்த வரலாற்று உணர்வு வந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

இப்போதும், தமிழகம் போர்க்களம் ஆகியுள்ளது. இக்களத்தில் ஓட்டு அறுவடை செய்யவும், அரசியல் ஆள் பிடிக்கவும், திரு.கருணாநிதி மட்டுமல்ல, எண்ணற்ற அரசியல்வாதிகள் உங்களை வட்டமிடுகிறார்கள்.

எவர் பேச்சையும் நம்பவேண்டாம். இந்தப் போராட்டத்தை நீங்களே முன்னெடுத்துச் செல்லுங்கள். வெற்றியா தோல்வியா எனக் கணக்குப் போட்டு இக்களத்தில் நீங்கள் இறங்கவில்லை. அந்தக் கணக்குகள் எல்லாம் தேர்தல் அரசியல்வாதிகளுக்கே உரியவை. நீங்கள் உணர்வையும், நம்பிக்கையையும் கொண்டு களத்தில் நிற்கிறீர்கள்.

எவரையும் நம்பாதீர்கள். உங்களை மட்டும் நம்புங்கள். எவரையும் பின்பற்றாதீர்கள். உங்கள் மனம் சொல்வதைப் பின்பற்றுங்கள். எவர் பின்னாலும் செல்லாதீர்கள். உங்கள் உள்ளுணர்வின் பின்னே செல்லுங்கள்.

எவர் உதவிக்கும் காத்திராதீர்கள். உங்கள் உதவிக்காகத்தான் ஒரு இனமே காத்திருக்கிறது.
1. ஈழப் படுகொலைகளைச் செய்தவர்களைப் பற்றி சர்வதேச விசாரணை வேண்டும்.
2. தமிழீழத்தில் பொதுவாக்கெடுப்பு வேண்டும்.
3. தமிழர் தேசத்தில் சிங்கள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள்.

இவற்றுக்காக உங்களோடு எவர் வந்து நின்றாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். கட்சி, சாதி, அரசியல் பேதம் வேண்டாம்.

உங்களில் யார் எந்த சாதி என எவர் காண இயலும்? நீங்களே உண்மையான தமிழர்கள்!

உங்கள் தகுதி மிக உயர்ந்தது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் தகுதிக்கு எவர் பொருந்துகிறாரோ, அவரையெல்லாம் சேர்த்துக் கொள்ளுங்கள். பொருந்தாதவரை, எதிர்த்து நேரத்தை விரயமாக்க வேண்டாம். உதாசீனம் செய்துவிட்டு நடைகட்டுங்கள்.

சொகுசு வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள் என விமர்சிக்கப்பட்ட ஐ.டி துறையினர் முதல் கூலித் தொழிலாளர் வரை உங்கள் பின்னே நிற்கிறார்கள். முகநூலும், ட்விட்டரும், வலைதளங்களும் உங்கள் உங்கள் புகழ் பாடுகின்றன.

உண்மையான தமிழினத் தலைவர்களே, காலம் உங்கள் கையில்! களம் உங்கள் காலடியில்!

சமரசம் இன்றிப் போராடுங்கள்!

எளிய பங்களிப்புகளுடன் போராட்டக் களத்தில் எப்போதும் நிற்கும் உங்களில் ஒருவன்,
ம.செந்தமிழன்

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின