Skip to main content

மலாய்க்காரர்கள் எந்தப் பக்கம்?


                                                   அன்வர் இப்ராஹிம் PKR கட்சி

                                     
                                        மஹாதிர் முகம்மது முன்னால் பிரதமர்.
நிக் அசிஸ் PAS கட்சி

  




            இங்கே நான் மலாய்க் காரர்கள் என்று சொல்வது பெரும்பாலான மலாய்க்காரர்கள் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.

            மலேசியாவில் மாலாய்க் காரர்கள் தங்கத் தட்டில் வைத்து பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கான சலுகைகளை பிற இனத்தவர் வாயில் எச்சில் ஊற பார்த்துக்கொண்டிருக்கும் வகையிலான் கல்வி, சமூக, பொருளாதார் மேம்பாட்டுச் சலுகைகள்! பல இன மக்கள்  வாழும் நாட்டில் இதனை ஒளிவுமறைவில்லாமலேயே அரசு செய்து வருகிறது என்றால் அதன் பலம் குறித்துச் சொல்ல வேண்டிய வசியமில்லை!. இதனால்தான் இவ்வரசு தன்னைத் 'transparent' என்று பிரகடனப் படுத்திக் கொள்கிறதோ என்னவோ!! அதனைச் சட்டப் படியும் செய்து வருகிறது. மலாய்க்காரர்கள் (அதாவ்து பூமியின் புத்திரர்கள்)  என்ற பிரத்தியேக சலுகை பெற்ற குடிமக்கள் என்ற ரீதியில் மலேசியாவில் கிட்டதட்ட அறுபத்தைந்து விகிதம் மலாய்க்காரர்களே வாழ்கிறார்கள். எஞ்சிய இடத்தைச் சீனர்கள், இந்தியர்கள், இபானியர்கள், கடாசான்கள், பிற இனத்தவர்கள் என பகிர்ந்துகொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட இனம் ஆக உயர்ந்த எண்ணிக்கையில் வாழும பட்சத்தில் ஆட்சியில் அவர்கள் கைதான் ஓங்கியிருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளின் ஜனநாயகப் போக்கு வேறு. ஒபாமா மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பது கருப்பர்கள் மட்டுமே வாக்களித்ததால் அல்ல! அங்கே ஜனனாயகம் என்பது
அறிவார்ந்த தளத்தில் இயங்கக்கூடியது என்று நான் புரிந்துகொள்கிறேன். இங்கே அப்படியில்லை ஜனனாயகம என்பது இன அடிப்படையிலானது. மலாய்க்கார இனம் அதிகப் படியாக வாழ்வதால் இதனை மலாய்க்கார ஜனநாயகம் என்று சொல்லலாம்.

               சுதந்திரத்துக்கு முன்னர் இருந்தே அடித்தளமிட்டுக்கொண்ட UMNO (UNITED MALAYAN NATIONAL ORGARNAZATION) மாலாய்க்கார இனத்தால் ஆன கட்சி. அது விடுதலைக்கு வித்திட்ட கட்சி. அதன் காரணத்தால்  தொடக்கத்தில் அது  பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது.  மலாய்க் காரர்களில் பெரும்பாலும் அதில் அங்கத்தினர்களாக இருந்தார்கள். அதன் அடித்தளம் பலமிக்கதாக இருந்ததால் நாற்பது ஆண்டுகளாக அது அசைக்க முடியாத இடத்தில் இருந்தது.
         
          ஆனால் எதிர்க் கட்சிகள் இன்றைக்கு முன்புபோல பலவீனமாக இல்லை. மலாய்க்காரர்கள் தங்கத் தட்டில் வைத்துப் பார்க்கப் பட்டாலும் அரசாங்கம் தூய்மையான அரசாங்கமாக இல்லை என்ற குற்றச்ச்சாட்டாலும், தூய்மையான அரசாங்கமாக இருக்கவேண்டுமென்றால் அது இஸ்லாம் கொள்கைகளைக் கறாராகப் பின்பற்றினால் ஆகக் கூடிய காரியம் என நம்புகிறது. இப்படி நம்புவதற்கு ஒரு முகாந்திரக் காரணம் ஒன்று சாட்சியாய் நிற்கிறது. அகில மலேசிய இஸ்லாமியக் கட்சி என்று சொல்லப்படும் PAS கட்சியின் ஆட்சியில் இருக்கும் கிளந்தான் மாநிலம் ஒரு தூய்மையான் அரசாக இன்று வரை நிலைக்கிறது. அதன் முதலமைச்சரை ஒரு மதகுருவாகவே மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.ஆகவே மலாய்க்காரர்களின் நம்பிக்கை கிட்டதட்ட இந்த நேர்மையான ஆட்சியால் ஈர்க்கப் பட்டு தகவமைக்கப்பட்டது.
     
          ஆனால் UMNO வின் தலைவர்கள் அப்படியல்ல. பல அமைச்சர்கள் துணை அமைச்சர்கள் கையை அழுக்காக்கிக் கொள்ளாமல் பலர் ஆட்சி செய்ததில்லை. அவர்களைப் பாதுகாக்கக்கொள்ள மேல்மட்டத் தலைவர்கள் இருப்பதால். அதனை ஊழல் நிறைந்த ஆட்சியாகவே மக்கள் அவதானிக்கிறார்கள். நாடு விடுதலை அடைந்த நாள் தொட்டு , அதாவது கிட்டதட்ட 57 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே கட்சி (தேசிய முன்னணி) ஆட்சி பீடத்தில் இருப்பதால் அதற்கு அகந்தை கூடிவிட்டிருக்கிறது .அதனால் ஊழலுக்கும் இடம் கொடுத்துவிட்டது, இந்தத் தேர்தலில் மாற்று அரசியல் கட்சிக்குப் பாதை விடுவோமே என்று மக்கள் நினைக்கிறார்கள்.    ஊழலற்ற அரசாங்கத்திற்கு இஸ்லாம் கொள்கை அடிப்படையில் ஆட்சி நடக்கவேண்டும். அந்தத் தூய்மையான் ஆட்சி செய்வதற்கு எல்லாத் தகுதிகளும் எதிர்க் கட்சிக்கு உண்டு என்றும் கருதுகிறார்கள். பினாங்கில் ஆட்சி செய்யும் DAP யும் , கிளந்தான் மாநிலத்தை ஆட்சி செய்யும் PAS சும், சிலாங்கூர் மாநிலத்தை ஆளும் PKR ரும் கூட்டணி அமைத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள். இந்தக் கூட்டணி ஆட்சியில் ஊழல் இல்லையே என்று வியக்கிறார்கள் நாட்டு மக்கள். எனவே பெரும்பாலான பெருக்கல் குறிகளைப் பெறப்போகும் கட்சியாக எதிர்க் கட்சி விளங்குகிறது.
  
            ஒரு நாற்பது வருடத்துக்கு முன்னர்  இருந்த மலாய்க்காரகள் மனநிலை இன்று இல்லை. அரசாங்கக் கட்டுப் பாட்டில் இருக்கும் ஊடகச் செய்திகளே மலாய்க்காரகளின்  அபிப்பிராயத்தைக் கட்டமைத்து வந்தன. ஆனால் மின் ஊடகங்கள் பெருகி கை அடக்கத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறித்தான் விட்டது. வலத்தலங்கள், ட்டுவீட்டர்கள், முகநூல்கள், மின்னஞ்சல்கள், மின் செய்தித் தாட்கள் தரும் தகவல்களை அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள். தொடக்கத்தில் இவை வம்படியான செய்திகள் கொண்டுள்ளதால் மக்கள் பெரிதும் கவரப்பட்டாகள் என்றுதான் கருதவேண்டும்.  ஆனால்  இவற்றுக்குள் (பெரும்பாலும) பதிவாகும் நிதர்சனத் தகவல்களை  நம்பி அதனால் பெரிதும் ஈர்க்கப் பட்டார்கள் என்று சொன்னால் தப்பாகாது.
      
        இன்னொரு முக்கிய தகவல் ஒன்றுண்டு.
 
       தொடக்க காலத்தில், அதாவது  நாடு விடுதலை அடைந்த காலத்தில் என்பது விகிதம் மலாய்க்காரர்கள் UMNO வின் பக்கமே இருந்தார்கள். இருபது விகிதம் பாஸ் கட்சியை நம்பினார்கள். இன்றைக்கு அவர்கள் குத்துமதிப்பாக முப்பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள். முப்பிரிவுகளும் கிட்டதட்ட சம பங்கு மாலாய்க்காரர்கள்  தன்னகத்தே கொண்டுள்ளது என்று கூறலாம்.
 
        UMNO கட்சியில் ஒரு முப்பத்து மூன்று விகிதமும். UMNO இன்றைக்கு ஆளும் தேசிய முன்னனியில் முக்கியக் கட்சியாகும். அதுதான் அரசாங்கத்தை நிர்ணயிக்கிறது என்று சொன்னாலும் பிழையில்லை.

         PAS என்ற முக்கிய எதிர்க்கட்சியில் இன்னொரு 33 விகிதமும்;
   
         PKR (மக்கள் நீதிக் கட்சி) என்ற இன்னொரு எதிர்க்கட்சியில் 33 விகிதமாக பிரிந்து கிடக்கிறார்கள்.
 
         DAP எதிர்க் கட்சி கூட்டணியிலும்( பெரும்பாலும் சீனச் சமூகத்தினரைக் கொண்டது) சிறிய எண்ணிக்கையில் மலாய்க்காரர்கள் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். சிலர் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாக இருக்கிறார்கள்.
   
        இதில் PAS PKR என்ற இரு கட்சிகளும் எதிர்க்கட்சி கூட்டணியில் சங்கமித்துக் கொண்டன. எனவே இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் மலாய்க்காரர்களின் கை ஓங்கித்தான் இருக்கிறது.

          PKR கட்சி அன்வர் இப்ராஹிமைத் தலைவராகக் கொண்டுள்ளது. அன்வர் இப்றாஹிம் முன்னர் UMNO  ஆளுங்கட்சியில் இருந்தவர் என்பதும் , அவர் துணைப்பிரதமராக இருந்தார் என்பதும் புதிய செய்தியல்ல. அப்போது அவர் ஒரு தூய்மையான அரசியல் வாதியாக இருந்ததே 'பெரும் குற்றமாக' கருதப் பட்டது. அப்போது பிரதமராக இருந்த மஹாதிர் தன்னைவிட அதிக செல்வாக்கில் இருந்த அன்வரின் வளர்ச்சியைப் பிடிக்கவில்லை. அவரை வேரறுக்கு முயன்றார். அதனால் அவர்  ஓரினப் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் சிறைக்குள் தள்ளப்பட்டார். (மலாய்க்காரர்கள் இதனை நம்ப மறுத்ததே மஹாதீரின் செல்வாக்கு சரிந்து ஆட்சியிலிருந்து விலகியதற்குக் காரணம்) ஆறாண்டும் சிறை வாசத்துக்குப் பின் இப்போது பலம் வாய்ந்த எதிர்கட்சி கூட்டணியின் தலைவராக அவதாரம் எடுத்துள்ளார் அன்வர் இப்ராஹிம்.

          ஆளுங்கடசி (தேசிய முன்னணி- BARISAN NASIONAL) தான் இழந்ததை (வாக்குகளை) மீட்டெடுக்கு தவமாய் தவமிருக்கிறது. அதிலும் பிரதமர்  நஜிப் படாத பாடு படுகிறார். சீனர்களின் வாக்கையும் இந்தியர்களின் வாக்கையும் சேகரம் செய்ய வரலாற்றிலேயே இல்லாத அலவுக்குத் தேசிய முன்னணி  தராத சலுகைகளை அறிவித்த வண்ணமும் , அவற்றை நிறைவேற்றிய வண்ணமுமாக இருக்கிறார்.

          அரசாங்கத்தின் கடைசி நேர அறிவிப்புக்களும் வாக்குகள் எந்தப் பெட்டிக்குள் போகும் என்பதை நிர்ணயிக்கும்.

Comments

PUNNIAVAN said…
பிரிந்து கிடக்கும் இந்தியர்களில் தமிழர்களின் நிலைதான் கவலைக்கிடம்.
மற்றவர்களுக்கு மொத்தமாய் போய் சேர்கிறது. தமிழர்களுக்கு
மிச்சம் இருந்தால் கொடுக்கலாம் என ஆலோசனை
நடத்தப்படுகிறது. வெறும் 30 வெள்ளிக்காக நம்மவன் அம்னோகாரனுக்கு
ஓட்டு போட்டாலும் ஆச்சரியம் இல்லை. எந்தப் பக்கம் சாய்ந்தாலும்
மலாய்க்காரர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பு வழங்கும்.
நமக்கு....
ko.punniavan said…
அன்பு நண்பரே,
தமிழர்கள் எஜமானர்களுக்குக் கீழ்படிந்து வாழ்ந்து வருவதில் கூச்சமில்லாதவர்கள். அதனால்தான் இப்போதைக்கான எஜமானர்கள் அம்னோ காரர்கள்தான்.அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். ஓரிடத்தில் ஏழை குடும்பத்துக்கு பொருள் கொடுக்கப்போனபோது எனக்குப் பணமாய்க் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.கேட்டு வாங்கும் இனமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.எனவே பாமரத் தமிழரின் ஓட்டு தேசிய முன்னணிக்கே.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின