Skip to main content
         
                    அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்
                                உள்ளொளி நிறைந்த உலகம்

              நாங்கள் வாடகை வீட்டில் குடியிருந்த நாட்கள்  எங்களுக்கென ஒரு சொந்த வீடு வாங்கிவிடவேண்டுமென்ற உந்துதலை உண்டாக்கிக்கொண்டிருந்தது. வாடகை வீடுகள் நம்மை ஏற்றுக்கொள்வதில்லை. இது யாருக்கோ கட்டிய வீடு இதில் உனக்கு இடமில்லை என்று குடியிருப்பனை எச்சரித்தபடி இருக்கும். என்னதான் மாதாமாதம் வாடகைப்பணத்தைக் கட்டிமுடித்தாலும், வீட்டு உரிமையாளன் நமக்குத் எந்த விதத் தொந்தரவும் தராவிட்டாலும், நம்முடைய இருப்பை அது தற்காலிகமாகவேதான் கருதுகிறது. ‘வீடு உன்னுடையதல்ல’ என்ற உரிமைப்போராட்டத்தை வீடு மௌனமாகவே அரங்கேற்றிய் வண்ணம் இருக்கிறது போலும். ஆகவே தான், வாடகை இருப்பவனின் கனவு சொந்த வீடொன்றில் நிறுவுவதிலேயே கசிந்து நிலைகொள்கிறது.
    நான் வீடொன்றை கட்டிக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தபோது, “வீடு கட்ட நிலம் இருக்கு வேணுமா?” என்ற நண்பர் ஒருவர் கேட்டார். நிலத்தை வாங்கிக் கொள்ளும் அளவுக்கு பணம் போதாது என்றே உள்மனம் கருதினாலும் ,” என்ன விலைக்கு வருகிறது” என்ற ஆசையை வெளிப்படுத்தினேன்.”ஐயாயிரம் வெள்ளிதான்,” என்றார். இந்த சிறிய தொகைக்கு நிலம் வருகிறதென்றால் அதன் உத்திரவாத்தத்தின் மேல்  உடனே சந்தேகம்  கிளைத்தது எனக்கு.            
     “ஒன்னும் பயப்பட வேண்டாம், நிலம்னா தனிப்பட்டா உள்ளது இல்ல,  ஒர் லோட்” என்றார். “ஒரு ஏக்கர் நிலத்தை துண்டு துண்டாக பிரித்த இடம்,” என்றார்.

            “பின்னாடி ஏதும் பிரச்னை வருமா?”
      “லாயர் வச்சி ஒவ்வொரு துண்டு நெலமும் வாங்கியவருக்கே சொந்தம்னு ஒப்பந்தம் பணிக்க முடியும், சும்மா வாங்கிப்போடய்யா,” என்றார். துண்டு நிலத்தை வாங்குவதில் மனம் ஒப்பாமலிருந்தாலும் , சொந்த வீட்டுக் கனவில் மனத் தடுமாற்றம் தோற்றுத்தான் போனது.

எனக்கு அந்த இடம் பிடித்திருந்தது. அதை விட மேலாக வாடகை வீடு நடத்தும் உள்ளிருப்புப் போராட்டம் என்னை அவ்வீட்டினின்றும் விரட்டியபடி இருந்தது. முதலில் வாங்கிப்போடுவோம் பணம் சேர்ந்தபோது பின்னாடிபார்த்துக்கொள்ளலாம் என்ற நிலத்தை சொந்தமாக்கிக்கொண்டேன். நிலம் வாங்கும் வரை இல்லாத எண்ணம் நிலம் வாங்கிய தருணத்திலிருந்து அதன் மேல் வீடு கட்டிவிடவேண்டும் என்ற உக்கிரம் விஸ்வரூபமாகி மேலும் மேலும் பெரிதாய் வளர்ந்துகொண்டே இருந்தது.
எப்படியோ பணத்தைப் புரட்டி வீட்டைக் கட்ட ஆரம்பித்தேன். வீட்டுக்காக நிலம் அளக்கப்படும்போதும்,
அடித்தளமிட குழிகள் வெட்டப் படும்போதும், தூண்கள் ஸ்தாபிக்கப்படும் ஒவ்வொரு கட்டத்திலும் நான்
 அருகிலேயே இருந்தேன். அது வளர்ச்சியுறும்  ஒவ்வொரு கனத்திலும் என் கைகளின் ஸ்பரிசமும்
வாங்கிக்கிகொண்டது. சிமிந்து, செங்கல், பலகை, தூண், ஓடு, ஆணி இவற்றை நானே வாங்கிகொடுத்தது மட்டுமின்றி
அவை உபயோகிக்கப்படும் தருணத்தில் நான் உடன் இருந்தேன். வீடு சன்னஞ் சன்னமாய் எழும்பும் தருணம் தரும் மகிழ்ச்சிப் பிரவாகம் வெள்ளம் நிறைந்தோடும் ஆறென் கரை புரண்டது.
என் உணர்வை அது உள்வாங்கியபடி இருந்திருக்கவேண்டும். இப்படி எனக்கும் நான் கட்டிக்கொண்டிருக்கும் என்  வீட்டுக்குமான உறவு ஒரு மரத்தை நீருற்றி எருவிட்டு கலை நீக்கி வளர்த்துவிட்டதற்கு ஒப்பானதாக இருந்தது.
       வீட்டுக்கு குடி வந்த நாள் பரவசமான அனுபவமாக பதிவாகி இருக்கிறது. வீட்டுக்குள் நுழைந்த பின்னரும் அதனை மேலும் மெருகூட்டும் ஆவல் தீராமால் தொடர்ந்தது. எங்களின் மேலுமொரு குழந்தை போன்று அதனை அரவணைத்துக்கொண்டோம். வாடகை வீட்டில் இந்த எண்ணம் எழவில்லை. ஒருகால் அதன் பராமரிப்பு குறித்த எங்கள் புறக்கணிப்பும் அந்நியத்தன்மையும் அதனோடு ஒட்டவிடாமல் செய்ததோ என்னவோ!
      வீடு பற்றிய தன்னுடைய உள்மன விருப்பத்தை தேவதச்சன் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்கிறார்.
                     
 என் வீடு

என் வீடு சிறிய வீடு
            ஆனாலும்,
            வீடு திரும்ப விரும்புகிறேன்!
   
            ஏழ்மையின் அடையாளம்தான் என் வீடு. அத்தாப்புக்கூரையும் களிமண் தரையும் காற்றை அனுமதிக்காத சாளரமற்ற வீடுதான் என் வீடு. ஆனாலும் இது என் வீடு. களைப்போடும், கோபத்தோடும், சோகத்தோடும்  திரும்பும்போது என் நிலையறிந்து எனக்காகக் காத்திருந்து, ஒரு கனிவான மனைவியைப்போல் அன்போடு அரவணைத்துக்கொள்ளும் வீடு., நான் கூச்சமற்று கால் நீட்டி நிம்மதியாக படுக்க, நடமாட , என் விருப்பபடி சுதந்திரமாகப் புழங்க என்ன என் சௌகரியப்படி அனுமதிக்கும் வீடு. தன் மௌன மொழியில் என் உணர்வுகளைப் பரிவோடு பகிர்ந்துகொள்ளும் வீடு. எனவே வசதியற்றதானாலும் என் வீடு என உரிமை கொண்டாடுகிறார்.
           
            சொந்த வீடு சார்ந்த தேவதச்சனின் கூடுதலான உள்ளுணர்வை வாசித்துப்பாருங்கள்.


            ஒவ்வொரு வீடும் நிரந்தரச் சூரியனை
            ஜன்னல் வழியே அழைக்கிறது
            அதை கைக்குழந்தைபோல
            படுக்க வைத்துக்கொள்கிறது
            தினமும் படியில் ஏறியதும்
            பயங்கள் மறையும்
            என் சிறிய வீட்டின் பின்கதவைத் திறந்து
            பார்க்கிறேன்
            வீட்டிற்கு அப்பால்
            வேறு எதுவும் இல்லை
                     
                     ...தேவதச்சன்...
    
          அதன் கடைசி வரிதான் உயிர்த் துடிப்பினை உணர்த்துகிறது. என் சொந்த வீட்டுக்கு ஒப்பான ஒன்று எதுவும் வெளியே இல்லை.
          என்னுள் ஆர்வத்தையும், கிளர்ச்சியையும், பேரின்பத்தையும் ஊடுறுத்தும் ஈடான பண்பு வேறு எந்தப் பொருளுக்கும் இல்லை என்று உரிமையோடு தட்டிக்கொடுத்து அணைத்துக்கொள்கிறார் தன் இல்லத்தை.

            கொஞ்ச காலம் அந்த வீட்டில் என்னால் வாழ முடிந்தது. பதவி உயர்வு காரணமாக நான் வேறு ஒரு ஊருக்கு மாற்றப்பட்டேன். அங்கிருந்து பயணம் செய்யும் உசிதமான தூரமல்ல. வேலை இடத்துகு அருகிலேயே குடிபெயரவேண்டிய கட்டாயம். வீட்டை அப்படியே விட்டுவிட்டு கிளம்பிவிடமுடியாது. ஆள் நடமாடமற்று புழக்கம் நின்றுபோய்விடும். சூன்யம் குடியேற்றம் செய்துவிடும். வேறு வழியில்லாமல்
            “விற்று விடலாமே,” என்று மன வேதனையோடு முன்வைத்தாள். வீடு உடனே வாங்கப்பட்டது.
            ஆனால் அதனை விட்டு வெளியேறுவது அவ்வளவு சுலபமானதாக இல்லை. கயிறில்லாமல் எங்கள் அனைவரையும் கட்டிப்போட்டிருந்தது. வீட்டின் ஒவ்வொரு மூளையிலும் எங்கள் சுவாசம் கேட்டது. அந்த வீட்டில் எங்கள் பாதங்கள் படாத தரை இல்லை, எங்கள் கைகள் தொடாத சுவரில்லை, எங்கள் பார்வையிலிருந்து தப்பிய விட்டம் இல்லை. என் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடிய இடங்களில் அவர்களின் மகிழ்ச்சிக்குரல் ஒலித்தவண்ணமிருப்பதாக உணர்ந்தோம். சன்னல்களையும் கதவுகளையும் மூடிவிட்டுக் கிளம்பும்போது எல்லாருடைய சொல்லணா சோகம் அப்பிக்கிடந்தது. யார் யாருக்கு ஆறுதல் சொல்லமுடியும்? அதனின் கடைசி முறை திரும்பிப்பார்க்கும் தருணத்தில் நெஞ்செல்லாம் வலித்தது. வீட்டை நிராதரவான நிலையில் விட்டு விட்டோமோ என்ற கவலை.
                 
என் கண்முன்னே எழும்பிய வீட்டைக் காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டானபோது, வாடகை வீடு போலவே சொந்த வீடும் நிரந்தரமானதல்ல என்ற உண்மை மெல்ல புலப்பட ஆரம்பித்தது.

                 ரொம்ப காலத்துக்குப் பிறகு நான் மீண்டும் அங்கே திரும்பிப்போக போகவேண்டிய சந்தர்ப்பம் உண்டானது. என்  பழைய வீட்டைப் பற்றி உருவான கவிதைதான் இது.
           
  இரண்டாவது ஆன்மா


நான் முன்பிருந்த
வீட்டுக்குப் போனபோதுதான்
எனக்கு இரண்டு ஆன்மாக்கள்
இருப்பதாக உணர்ந்தேன்

வீட்டின் தூண் ஒன்றைக்
கெட்டியாகப் பிடித்தவாறு
இருந்தது அது

வீட்டைக் காலி செய்துவிட்டு
விலகியபோது
அது அங்கேயே
தங்கிவிட்டிருக்கக்கூடும்

கடைசியாக
ஒருமுறை திரும்பிப் பார்க்கவைத்ததும்
அதுவாக ஏன் இருக்கமுடியாது

வீட்டை விட்டுப் பிரியும்
தருணத்தில்
ஒரே பிஸ்கட்டை நாயொன்று
கவ்வ்¢ச்சென்ற பசித்த குழந்தையின் சோகம்
கனத்திருந்தது

என் குரல்களின்
அசரீரியை
சேகரித்து வைத்து
ஒலித்துக்காட்டியது

என் பாதத்தடங்கள்
படியாத
இடமொன்றுண்டா
என்று கேலி செய்தது

என் படுக்கையறையிலிருந்து
வரும் குரட்டையொலி
சன்னமாகக் கசிந்தது

கொய்யா மரத்தை அன்னாந்தவாறு
வீட்டை
மீண்டும் வாங்கிவிடலாமே
என்று என் மகன் கேட்டான்
 இரண்டாவது
ஆன்மாவிடம்
எப்படி விலை பேசுவது?



Comments

ko.punniavan said…
mullai ramaiah mullairamaiah10@hotmail.com

23:58 (10 hours ago)

to me
அன்புள்ள புண்ணியவான்,

உங்களுடைய வீடு கட்டுதல், விற்றல் பற்றிய கட்டுரையையும் கவிதையையும் இப்போதுதான் பார்த்தேன். மிக நெகிழ்வாக இருந்தது.

இந்த அடிப்படையில்த்தான் நீங்கள்
மெளனத்திற்கு அனுப்பிய நல்ல கவிதை எழுதப் பட்டது என்று தெரியாது!

வாடகை வீடு உங்களை புறக்கணித்துக் கொண்டே இருந்ததற்குக் காரணம் நீங்களும் அதனை அவ்வளவாக நேசிகவில்லை என்று இறுதியாக கூறியிருப்பது
பத்தியை தூக்கிப்பிடிக்கிறது. நுட்பமான உணர்வுகள்!

அன்புடன்
முல்லை
ko.punniavan said…
உங்கள் குறிப்பு மிகுந்த உற்சாகமூட்டுகிறது.குறிப்பாக இலக்கிய சார்ந்த கூர்மையான அவதானிப்பு செய்யும் உங்களைப் போன்றவர்கள் உற்சாக வார்த்தைதான் என்போன்ற படைப்பாளனை மிண்டும் மீண்டும் பிறக்கச் செய்கிறது.நன்றி

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின