Skip to main content

ஹோலிடேன்னா இப்படித்தாம்பா

          கடந்த வெள்ளிக்கிழமை 20.5.11ல் மீண்டும் மலேசியாவின் கிழக்குக்கடற்கரை மாநிலமான திரங்கானு மாநிலத்தின் பெர்ஹெந்தியான் உல்லாத்தீவுக்குப் பயணமானோம். பின்னிரவு இரண்டு மணிக்கு இரண்டு கார்களில்  கிளம்பிவிட்டோம். நாங்கள் மேற்குக் கடற்கரை மாநிலமான கடாரத்திலிருந்து குறுக்கு வெட்டாக போடப்பட்ட நெடுஞ்சாலையைக் கடந்து ஏழு மணி நேர ஓட்டத்தில் துறைமுகத்தை அடைந்தோம். பின்னிரவில் கிளம்பினால்தான் காலை ஒன்பது மணிக்குள் துறைமுகத்தை அடைய முடியும். அதை விட்டால் வேறு பயணப்படகு இல்லாமலில்லை. ஆனால் விடுதி செக் இன் நேரம் 12.00 லிருந்து அந்த நாளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவே இந்தப் பின்னரவுப் பயணம் போலும். என் மகன்கள் இரண்டு பேரின் ஏற்பாடு இது. எனக்கு இந்த நள்ளிரவுப்பயணத்தில் சம்மதம் இல்லைதான். இருவருக்கும் அப்பாவையும் அம்மாவையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நல்ல எண்ணம்தான் காரணம். எல்லாம் அவர்கள் செலவு.
           காலையில் ஏழுக்கேல்லாம் துறைமுகத்தில் இருந்தோம்.விடிய விடிய தூக்கமில்லை. அவர்கள் காரை ஓட்டுவதிப் பார்த்தால் கும்பகர்ணனுக்கே தூக்கம் வராது. இரண்டு காரிலும் ஐந்து பேரப்பிள்ளைகள் இருந்தார்கள் என்பது பயணத்தை மேலும் அச்சமாக்கியது.
ஓங்கிய பெருங்காட்டைக் கடந்துதான் இந்த ஏழு மணி நேரப்பயணம். யானைகள் நள்ளிரவில்தான் சாலையைக் கடக்கும்போலும். இரண்டு கிலோ மீட்டருக்கு இடையே யானைகள் நடமாட்டம் இருப்பதைக் குறிக்கும் சாலைப் பலகைகள். ஆனால் இந்த முறை நாங்கள் பலகையில்தான் யானைகளைப் பார்த்தோம். காரில் யானைகளையே அச்சமூட்டும் உயிரினங்கள் இருந்தன என்பதே எனக்குத் தைரியம் மூட்டுவதாக இருந்தது.
      உல்லாசத் தீவுக்குச்செல்லும் இயந்திரப் படகில் ஏறும்போது மணி எட்டரை. எங்களோடு சில பிரஞ்சுக்காரர்களும் இருந்தனர். படகு அரை மணி நேரத்தில் தீவை அடைந்துவிடும் என்று சொன்னார்கள். எல்லாரும் உட்கார்ந்ததும் படகு வேகம் பிடிக்க ஆரம்பித்தது. நான் நினைக்கிறேன் மணிக்கு 150 கிலோ மீட்டருக்குக் குறையாத வேகம். பெருத்துச் சுருண்டு வரும் அலைகளைக் கிழித்தெறிந்துகொண்டே சீறிப் பாய்ந்து செல்கிறது. மோதிச்செல்லும் அலைகளை அநாயசமாக கிழித்தவாறே விரைந்து ஊர்கிறது படகு. படகின் முன்பக்கம் சீன நாகம்போல தலையைத் தூக்கித் தூக்கி ஏறி இறங்கும்போது அலைகளை அறைந்து அறைந்து செல்லும்போது. பேய் பிடித்த பெண் முடியை விரித்து மேலும் கீழும் ஆட்டி அச்சுறுத்தும் காட்சிக்கு ஈடானது அது. சிறு குடலும் பெருங்குடலும் இடம் மாறிவிடுமோ என்ற பயம் ஆட்கொள்கிறது. சீரிச்செல்லும் தருணத்தில் கடல் நீரை வாறி இறைக்கிறது. அந்த அரை மணி நேரமும் அகால நேரமென்றே அறிக.
     மணி ஒன்பதுக்கெல்லாம் தீவை அடைந்திருந்தோம். நான் மறுபிறவி எடுத்திருந்தேன். விடுதி மணி பத்துக்குத்தான் தயாரானது. ரூம் கிடைத்தவுடன். குளித்துவிடலாம் என்று குளியலறைக்குள் சென்று குனிந்து எதையொ எடுத்தேன். தீவு சுற்றுவது போன்ற பிரம்மை உண்டானது, தூக்கமின்மை காரணமாக வந்த அலர்ஜிதான் அது. குளித்துவிட்டு வெளியே வந்தவுடன் காலை உணவுக்குச் சென்றோம். ஒரு ஆள் பசியாற முப்பது வெள்ளிக்கு மேல் தரவேண்டியதாயிற்று. ஒவ்வொரு முறையும் ஆர்டர் கொடுத்து சாப்பிடலாம் என்று முடிவெடுத்ததால் இந்த விலை. முன்பொருமுறை அறை வாடகையோடு பேக்கேஜ் கணக்கில்  உணவுக்கும் பேசிவிட்டதால் சாப்பிட்டு வயிறெறிந்து போனோம். திரும்பத் திரும்ப ஒரே வகை உணவைப் பரிமாறிக் கொன்றார்கள். மறுமுறை உணவைப் பார்க்கவே பிடிக்கவில்லை!
      இந்த முறை கவனமாக இருக்கவேண்டும் என்ற நினைப்பில் இந்த ஏற்பாடு. ஆனால் விலையோ படு பயங்கரம். ’ஹோலிடேன்னா இப்படித்தாம்பா,” என்றான் பெரியவன். ஆனால் அதே விலையில் சாப்பிட்டால் வயிறு ஏற்காது. ஏற்றாலும் சீரணிக்காது. இரண்டு நாளுக்கு இந்த செலவு செய்தால் என் ஒரே வீட்டை விற்கும்படியாகிவிடும். அப்புறம் தின்னு கெட்ட குடும்பப்பட்டியலில் எங்களோடுதும் சேர்ந்ததுவிடும்.
       சாப்பிட்டு விட்டு அக்கடா என்று தூங்கலாம் என்று நினைத்தேன். வெளியே வந்ததும் மீண்டும், ”படகில் ஏறுங்கப்பா,” என்றான்..
       ”எங்கே?” என்றேன் நான். “சும்மா ஏறுங்கப்பா!” என்றான் மகன்.
       ”தாத்தா நம்பெல்லாம் சுனோக்கிலிங் போறோம்.” என்றாள் பேத்தி.
       ”நேத்து பூரா தூகமில்ல, படகுப் பயணம் வேற ’புலியாட்டம்’ பயணமானது, இவ்ளோ பணம் கொடுத்து சாப்பிட்டது வேற செரிக்கல! அதுக்குள்ள என்னடா சுனோக்கிலிங்?” என்றேன்.
       ”ஹோலிடான்னா அபடித்தாம்பா!” என்றான் மீண்டும்.
        கரு நீலக் கடல் விரிந்து குளிர்கிறது. தண்ணீருக்கு அடியில் மீன்களும் கடற்பாறைகளும், பிற கடல் வாழ் உயிரினங்களும் கண்ணாடிக்குள் பார்ப்பதுபோல தெளிவாகத் தெரிகிறது. அள்ளி அள்ளிக் குடிக்கலாம் போலத் தோன்றுகிறது.
        மிதவையும் கண்ணாடியும் அணிந்துகொண்டு கடலில்  குதிக்க ஆரம்பித்தார்கள் எல்லாரும்.
”தாத்தா நீங்களும் வாங்க தாத்தா,” என்று வியந்து என்னை அழைத்தனர். தூக்கம் கண்ணுக்குள்ளேயே இருந்த்து. கடலில் குதித்தால் தூங்கியவாறே மிதக்கப்போகிறேன் என்று தெரிந்துவிட்டது எனக்கு.
      கடலுக்குள் குதித்து கண்ணாடி அணிந்து பார்த்தபோதுதான் ரம்மியமான ஒரு புது உலகம் வசப்பட்டது. வண்ண வண்ண மீன்கள் குறுக்கும் நெடுக்கும் நீந்தித் திரியும் அழகை நாளெல்லாம் பார்க்கலாம், கடற்பாறைகள் வெள்ளைப் பூக்கள் கணக்காய பூத்துச் சிரிக்கிறது. வெறும் மேல் பாகமே இவ்வளவு வனப்பென்றால், கடலுக்கடையில் இன்னும் என்னவேல்லாம் இருக்கும்? எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று கடலையும் சேர்த்துதான் பாடி இருக்கிறான் பாரதி. புதுச் சேரியிலும் வாழ்ந்தவனில்லையா?
        பேரப் பிள்ளைகள் மீன்களோடு மீன்களாகவே இரண்டு நாளையும் கழித்தார்கள்.
       அருகருகே உள்ள பல தீவுக்கூட்டங்களுக்குச் சென்று பார்த்தோம். ஒரு தீவில் 1500 பேர் குடியிருகிறார்கள். அங்கே தொடக்கப்பள்ளிக்கூடம், காவல் நிலையம், தபால் நிலையம் என்று எல்லா வசதியும் உண்டு. ஒரு நாள் பகலுணவை அங்கேயே முடித்துக் கொண்டோம். விலை எவ்வளவோ  சகாயம்!
      பெர்ஹெந்த்தியான் தீவின் ஒரு அறையின் விலை நானூறு மலேசிய ரிங்கிட். பகல் உணவின் விலை தலைக்கு 40 ரிங்கிட். ”தாங்காதுடா சாமி’ என்றேன்.
      ”ஹோலிடான்னா அப்படித்தாம்பா,” என்றான் மகன்.
      அங்கே இரண்டு நாளைக் கழித்துவிட்டு, இக்கரைக்கு வந்து,  திரங்கானு கோலா பெசுட்டில் இருக்கும் ஒரே இலை சாப்பாட்டுக்கடை மீனா ரெஸ்டாரெண்டில்  பகல் உணவை முடித்தோம்.
மலாய்க்காரர்களே அதிகம் வாழும் பெசுட்டில் ஒரே தமிழ் உணவுக்கடை அது.



























மீண்டும் ஏழு மணி நேர கார் பயணம் தொடங்கியது.
      ”ஏம்பா இவ்ளோ செலவு செஞ்சி லீவுக்கு வரணுமா?” என்று கேட்டேன் எல்லாரிடமும்.
     ”ஹோலிடேன்னா இப்படித்தாம்பா,” என்று கோரஸில் பதிலளித்தனர் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும்.








Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த