Skip to main content

சினிமாக்காரனுக்கு ஏன் இந்தச் சின்ன புத்தி?

இரண்டு தினங்களுக்கு முன்னர் இதனை எழுத நினைத்து நான்கு ஐந்து வரிகள் எழுதி பின்னர் அழித்துவிட்டேன். எனக்கு எழுதப்பிடிக்கவில்ல. ஆனால் நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் அதன் பாதிப்பால் மீண்டும் எழுதத்தூண்டியது. வேண்டாம் என்று விட்டு விடலாம் என்று பார்த்தால், ஏதோ ஒன்று எழுதிவிடுவதற்கான நெருப்பை மூட்டிக்கொண்டே இருக்கிறது. இந்தச்சகதியெல்லாம் எழுதி நேரத்தை ஏன் வீணாக்கவேண்டும் என்று முடிவெடுத்து ஒதுங்கினாலும், குறுக்கே வந்து எழுதித் தொலைப்பதற்கான ஆதங்கத்தை மேலோங்கச்செய்தது. இப்போதும் சொல்கிறேன் நான் எழுதவில்லை, எனக்குள் புகுந்த ஒன்று தீய சக்தியைப்பற்றி எழுத வைக்கிறது. மலத்தை 24 மணிநேரத்துக்குமேல் உடல் வைத்திருக்க விரும்புவதில்லை. இல்லையா?



ஒரு வாரத்துக்கு முன்னால் நடிகர், சூப்பர் ஸ்டார், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ரஜினியின் பிறந்த நாள். தமிழை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று சிவாஜி கணேசன் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். எப்படி இடுப்பை ஆட்டிக்கொண்டு கைகளை மூன்னும் பின்னுமாக (கொசு விரட்டும் மாட்டின் வாலைப்போல) வீசி வீசி வசனத்தை நாக்கில் படாமல் பேசுவது என்ற வித்தையை தமிழ்ச்சமூகத்துக்கு எடுத்துக்காட்டியவர். தன் அறுபதாவது பிறந்த நாளைக் கட் ஒவுட் செய்து கொண்டாட வைத்தவர். கட் ஒவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து புண்ணியத்தைத் தேடிக்கொண்டவர்.

ரசிகர்கள் நடிகர்கள் மேல் ஏன் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மற்ற பொழுதுபோக்கின் மேல் கவனம் செலுத்தாதவர்கள் நாலாந்தர சினிமாவினாலும் நாலாந்தர நடிகராலும் ஈர்க்கப்பட்டு விடுகிறார்கள். படங்கள் புத்தி சுவாதீனத்தோடு எடுக்கப்படுகிறதா என்பதை ஆராய்வதற்கான அறிவு அவர்களிடம் இருப்பதில்லை. புத்தகம் படிக்கும் பழக்கமில்லாதவர்கள். சினிமா விமர்சனங்களைப்படிப்பதில்லை. எனவே நல்ல சினிமாவைத் தேடிப்பார்த்து ஒப்பீடு செய்யும் அறிவு இவர்களுக்கு இருப்பதில்லை. நாயக பாத்திரத்தை முதன்மையாக வைத்து ஒரு போலியான பிம்பத்தை ரசிகன் மனதில் திணிக்கிறார்கள். நாயகனின் சாகசங்காளால் கவரப்பட்டவர்களாக ரசிகர்களை மாற்றும் வித்தையை வெகுநாட்களாகவே படம் எடுத்துவருகிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். பட முதலாளிகள் எப்படி ஏழைச்சனக்களில் அற்றைக்கூலிப்பணத்தைப் அடி வயிற்றில் அடித்துப் பிடுங்கித்தின்னும் சுரண்டலில் தேர்ந்தவர்கள்.

ரஜினிக்கு 60 வயது. ஆள் எழுபது வயதை எட்டியவர் போன்ற தோற்றத்தை அடைந்துவிட்டவர். சிவாஜி படத்தை உன்னிப்பாகப்பார்த்தவர்கள் ரஜினியால் ஒரு கழியைக்கூட ஆண்மைத்தனத்தோடு தூக்கமுடியாமல் இருப்பதைக் கவனித்திருக்கலாம். எடிட் செய்தவன் என்ன பாடுபட்டிருப்பானோ தெரியாது. அங்கே வெட்டி இங்கே வெட்டி கண்டதெல்லாம் ஒட்டி ரஜினியை ஒரு 20 வயது ஹீரோ மாதிரி காட்டியிருக்கிறார். கிராபிக் தொழில் நுட்பம் இல்லையென்றால் ரஜினியால் இன்று வரை தாக்குப்பிடிப்பது முடியாத ஒன்று. எந்திரன் என்று வரப்போகும் படத்துக்குச் சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். கிராபிக் நுட்பம் கொண்டு ரஜினியை எந்திரமாகத்த்தான் காட்டப்போகிறார்கள். ரசிகர்களெல்லாம் இப்போதே ரோபோட்டாகத் தயாராகிவிடுங்கள்.(பலர் எப்போதோ ரோபோட்டாகவே மாறிவிட்டார்கள்- சொச்ச ரசிகர்களுக்குச் சொல்கிறேன்)

தமிழகம் ஒரு அறிவுச்சுரங்கம். அங்கே இருக்கும் தமிழ்ச்சினிமா ரசிகர்கள் ஏன் சுரங்கத்துக்குள் இருக்கும் கரியாகவும் கசடாகவும் இருக்கிறார்கள். 30 40 அடி கட் அவுட்டுகள் செய்து அதற்குப்பாலாபிஷேகம் செய்யும் பைத்தியக்காரத்தனம் தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும். அது வெறும் பலகைதான் என்ற பிரக்ஞைகூடக் கிடையாது. ரஜினியின் வாழ்க்கையில் தேனும் பாலும்தான் ஓடவைத்துவிட்டார்களே தமிழ் ரசிகர்கள். கட் அவுட்டுக்கு வேறு அபிஷேகம் செய்ய வேண்டுமா? தமிழ் நாட்டில் ஏழைக்குழந்தைகள் பாலில்லாமல் கதறும் சத்தம் இவர்களுக்குக் கேட்பதில்லையோ? அவ்வளவு பெரிய மடையர்களா இவர்கள்? இந்தக்கஸ்மாலத்தை உலகுக்குப் போட்டுக்காட்ட தமிழகத்தொலைக்காட்சிகள் போட்டி வேறு போடுகின்றன.

அப்புறம் கூட்டம் கூட்டமாகக்கூடி ரஜினிக்காக அனைவரும் கேக் வெட்டி அல்லோலகல்லோலப் படுத்துகிறார்கள். அன்றைக்கு வெளியே வந்து தன் பக்தர்களுக்குத் தரிசனமே தரவில்லை ‘சுவாமிகள்’. எந்தக் கொண்டாட்டத்திலும் கலந்துகொள்ளவும் இல்லை. எப்படிப்பட்ட அவமானமும் உறைக்காத ரசிகக்கூட்டம்! வீட்டில் நாள் முழுதும் “தியானம்” இருந்தாராம்- ஊடகங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு நாளும் சாயுங்கால வேலையில் தீவிர “தியானம் “ இருக்கும் நல்ல பழக்கம் ரஜினிக்கு உண்டு. தீவிரமான சமய ஈடுபாடு உண்டு என்ற செய்தியை ஊடகங்கள் ஒலிபரப்பி ரஜினியின் புனிதத்தன்மையை ஒளிவட்டம்போட்டுக்காட்டி ரசிகர்கள் மத்தியில் ரஜினியின் பிம்மபத்தை அந்தி வெயில்¢ல் விழும் நிழல் போல அமானுடம் செய்துவிடுகிறார்கள். ஆன்மீக அறிவு அவருக்கு அபாரமாக் இருப்பதாகத்தெரியவில்லை. அவர் மேடையில் பேசியதைக்கேட்கும்போது குட்டு வெளியாகிவிடுகிறது. பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி நடிக்கும் நடிகர் அல்லவா?

ரஜினி தமிழ் மக்களுக்கு என்னதான் செய்துவிட்டார் என்று தெரியவில்லை. சந்தனக்கடத்தல் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி வைத்துக்கொண்டு தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்க நெருக்கடியைக்கொடுத்தார். நம்ம ரஜினி இன்று வரை வாயே திறக்கவில்லை. ராஜ்குமாரை வீரப்பன் கடத்திக்கொண்டுபோய் வைத்திருந்த போது தான் காட்டுக்குப்போய் ரஜ்குமாரை மீட்டு வருவேன் என்று வீரவசனத்தை உதிர்த்தார். என்ன தேச பக்தி! நல்ல காலம் அப்படி ஏதும் அசம்பாவிதம் நடக்கவில்லை ரஜினிக்கு? மழைக்காலத்தில் வெள்ளமும் வெயில் காலத்தில் வரட்சியும் எதிர்நோக்கும் தமிழகம் எவ்வளவு காலத்துக்குத்தான் தண்ணீர் பிச்சை கேட்டுக்கொண்டிருக்கும் கர்நாடகத்திடம் , ரஜினி வாயைத்திறந்து கேட்டால் என்ன? தனக்குச் சோறுபோட்ட இடம் தமிழகம் என்று பேசினால் மட்டும் போதுமா? ஏன் கேட்கவில்லை? கர்நாடகத்தின் கொள்கையோடு ஒத்த சிந்தனையில்லாத ரஜினியின் படம் அங்கே ஓடாது என்பதற்காக. எல்லாம் பணம் பண்ணும் எண்ணம்தான்.

ஒருமுறை தண்ணீர் கேட்டுத் தமிழ் நாட்டு நடிகர் கூட்டம் நெய்வேலியில் போராட்டம் நடத்தியது. பாவம் தர்மசங்கடத்தோடு ரஜினியும் கலந்து கொள்ளவேண்டிய கட்டாயம். அந்தக்கூட்டதில் கர்நாடகம் தமிழகத்துக்குத் தண்ணீர் தரவேண்டும் என்று பேசிவிட்டு, மறு வாரமே கர்நாடகத் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பல்டி அடித்தார் . நடிகர்கள் சிலர் கேட்டதற்கு ஏதோ சொல்லி சமாளித்தார். இங்கேயும் இரண்டு வேஷம்! ரஜினி எவ்வளவு பெரிய நடிகர் ? (இதற்கெல்லாம் டூப் போடாத நாயகன்).

ஆமாம்..... ரஜினி தமிழ்நாட்டு ரசிகர்கள் பையிலிருந்து களவாடும் பணம் பெருவாரியாக எங்கே முதலீடு செய்யப்படுகிறது தெரியுமா?. ரஜினியின் சிறுமைகள் பற்றி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராம்தாஸ் ஆனந்தவிகடனில் ரஜினியின் வண்ட வாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றினார். அவர் எழுதிய கட்டுரை தொடர்ந்து பல வாரங்கள் வந்தது. அந்தக்கட்டுரையில் ரஜினி தமிழ் நாட்டில் சம்பாதிக்கும் பணத்தைக் கர்நாடகத்தில் முதலீடு செய்வதாக போட்டு உடைத்திருந்தார்.ரஜினி வாயில் அப்போதெல்லாம் கொலுகட்டை வைத்திருந்தார் போலும். தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு எப்போது புத்தி வரப்போகிறது என்றுதான் தெரியவில்லை. ரஜினி நினைத்திருந்தால் எத்தனையோ ரசிகர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். அடுத்த ஆண்டும் கொண்டாடுங்கள் அறுபது அடிக்கு கட் அவுட் வையுங்கள், கேக் வெட்டுங்கள் அதனை வெட்கமில்லாமல் ஒலிபரப்புங்கள். அவருக்குச்சிலை எழுப்புங்கள் பின்னர் சிறு தெய்வமாக மாற்றி கொஞ்ச காலத்தில் சிவனுக்குப்பக்கத்தில் அமர்த்தி பெரிய தெய்வமாக்கிவிடுங்கள். யார் வேண்டாமென்று சொல்வார்.

என்னை எழதத் தூண்டிய இன்னொரு விஷயத்துக்கு வருவோம்.

கலைஞர் தொலைக் காட்சியில் சினிமா இசை சார்ந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை ஒலி பரப்பினார்கள். பாடகர்கள், இசைக்கலைஞர்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என்ற இசை சார்ந்த கலைஞர்களுக்கு தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய விருது வழங்கும் நிகழ்வு அது.

அதில் ஒரு அங்கமாகப் பாடலாசியருக்கான விருது. பரிசைத்தட்டிச்சென்றவர் அடுக்குத்தமிழில் நெற்றிமுடியைச் சிலுப்பிச் சிலுப்பி 2 கிலோமீட்டர் நீள நீளமான வசனத்தைப்பேசி நடித்த டி. ராஜேந்திரனின் லிட்டர் சுப்பர் ஸ்டார் சிம்பு. ஆம் சாத் சாத் அவரேதான் தூய தித்திக்கும் தமிழில் பாடலெழுதிப் பரிசத்தட்டிச்சென்றவர். சங்கால இலக்கியமெல்லாம் புறந்தள்ளும் தஙக்காலத்தமிழ்ப்பாட்டு அது. அதனையும் தேர்ந்த்தெடுத்த நடுவர்களைப்பற்றி எப்படிப் பிரஸ்தாபிக்க?என்ன பாடல்னு கேக்கறீங்க.

Where is the party

எங்கம்மா வீட்ல party

அப்படித்தான் போகும் அந்த சாங்கு (song). தமிழுக்கு சங்கு ஊத வந்த சாங்கு.

ஆங்கில மோகம் எந்த அளவுக்கு நீண்டுவிட்டது பார்த்தீர்களா? எங்கேயாவது கோயிலில் போய் முட்டிக்கொள்ளலாம்னா, எங்க ஊர்ல உள்ள கோயில ஒன்னு ஒன்னா இடிச்சுப்புடுரானுங்க. முட்டிக்கிறதுக்குன்னே ஒரு கோயில கட்டணும் போல இருக்கு.

விருது கொடுக்க ஒரு தமிழ் பாடல் கிடைக்கவில்லையா?

சினிமாவுக்கு தமிழில் பெயர் வைத்தால் ஒரு லட்ச ரூபாய் தருகிறது தமிழக அரசு.

தமிழில் பேசினால் தங்கக்காசு தருகிறது மக்கள் தொலைகாட்சி.

இதெல்லாம் ஆப்பிரிக்காவில் ஆப்பிரிக்கர்களுக்குத் தரவில்லை தமிழ் நாட்டில் தமிழருகுத்தான் தருகிறது.

தன் பேரன் sun tv நடத்துகிறாரே அவருக்கு எவ்வளவு பணம் தந்து தமிழுக்குப் பெயரை மாற்றப்போகிறார் கலைஞர்?

தமிழில் பாட வட நாட்டுப்பாடகர்களையும், தமிழில் நடிக்க வட நாட்டு நடிகைகளையும், கொண்டு வந்தவர்கள் தமிழ் படத்துக்குப்பாட்டெழுத ஆங்கிலக்கவிஞர்களைக் கொண்டு வந்து விடுவார்கள் வெகு சீக்கிரத்திலேயே!



Ko.punniavan@gmail.com

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின