Skip to main content

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான்.



அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன்றோர் ஆரம்பத்தில் அடியெடுத்துக்கொடுத்த முன்னோடி தலைமுறையினரோடு கைகோர்க்கத்துவங்கினர். அதன் பின்னர் புதுக்கவிதை மேலும் பரிணமிக்கத்துவங்கியது.



மலேசியாவில் முதல் புதுக்கவிதை நூல் எம். ஏ. இளஞ்செல்வனின் நெருப்புபூக்கள், மே மாதம் 1979 வெளிவந்து மற்ற புதுக்கவிதை நூல்கள் வெளி வருவதற்கான நம்பிக்கையையும்,களத்தையும் ஏற்படுத்திக்கொடுக்கிறது.அதே ஆண்டில் டத்தோ சிரி சாமிவேலு பொன்விழா இலக்கியபோட்டியில் பிற இலக்கிய வடிவத்தோடு சேர்த்து, புதுக்கவிதையிக்கும் இடமளித்ததானது அதற்கான மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

மலேசியாவின் முதல் புதுக்கவிதைக் கருத்தரங்கை 1979ல் சீ.முத்துசாமி,நிலாவண்ணன் எம்.ஏ.இளஞ்செல்வன் ஆகியோர் சுங்கைப்பட்டாணியில் நடத்தினர். எழுத்துத்துறையில் ஏற்கனவெ முத்திரை பதித்த டாக்டர் ரெ.கார்த்திகேசு,பைரோஜி நாராயணன் போன்றோரின் பக்க பலம் இதற்கு மிகப்பெரிய ஆதரவாக அமைந்தது.



முதல் தலைமுறையினர் போட்டுத்தந்த பாதையில் துணிச்சலோடு களம் காண்கிறார்கள் இரண்டாவது தலைமுறை எழுத்தாளர்கள். சிரி ரஜினி, கனலன்.சு.கமலா,ஏ.எஸ் பிரான்சிஸ், மனஹரன்,நாகராஜன்,ப.ராமு,கு.கோபாலன்,கோ.புண்ணியவான்,த.விஜயநாதன்,க.உதயகுமார் போன்றவர்கள் படையெடுப்பு புதுக்கவிதைக்கான அழுத்தமான அங்கீகாரத்தைப் பதிவு செய்கிறார்கள்.

இவர்கள் காலக்கட்டத்தில் புதுக்கவிதைத்துறை புதுவேகமும் புத்தெழுச்சியும் உண்டானது. சீர்கேடுகளை மிகக்காத்திரமான பார்வையோடும், தார்மீக்கோபத்தோடும்,அங்கத நோக்கோடும், கண்டிக்கும் தோரணையோடும் பல தரமான கவிதைகள் புனையப்பட்டன.

இன்றைக்கு மலேசியா அனுபவிக்கும் பொருளாதார மேம்பாட்டுக்குத் தொழில் துறை வளர்ச்சி பெரிதும் உதவியது. இந்தத் தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது ரப்பர் மரங்கள்தான்.இந்தச்செழிப்புக்கு மிக முக்கிய காரணியாக அமைந்தது சஞ்சிக்கூலிகளாக தர்ம ஆர்டரில் வந்த தமிழர்கள்தாம்.நாடு முன்னகர்ந்துவிட்டது.ஆனால் அதற்காக ரத்தம் சிந்தியவர்கள் பின்தள்ளப்பட்ட நிலையை சித்தரிக்கும் கவிதையைப்பாருங்கள்.



தமிழன்

இவன் நட்ட மரங்கள்

நிமிர்ந்து விட்டன

இவன் நடும்போது

குனிந்தவந்தான்

இன்னும் நிமிரவே இல்லை.

(கோ.புண்ணியவான்)



சயாமிலும் மலேசியாவிலும் ரயில் தண்டவாளங்களை அமைப்பதற்கு உடல் உழைப்புத்தொழிலுக்கு மிக உகந்தவனாக தமிழன் அடையாளம் காணப்பட்டான். குறிப்பாகச் சயாமில் ரயில் தண்டவாளங்கள் போடப்பட்ட சரித்திரம் தமிழனின் நரகவேதனை அனுபவித்ததைப் பறைச சாற்றும் ஒன்று. இந்தக்கவிதை இந்த அல்லலைச் சொல்லால் குத்துகிறது.



இணைக்கோடுகளாய்

ஓடும் தண்டவாளங்கள்

இரும்புத்துண்டுகளா ?

இல்லை....

எங்கள் எலும்புதுண்டுகள்.! (காசிதாசன்)



மலேசியா பிரிட்டிசாரிடமிருந்து சுதந்திரம் பெற, மலாய் சீன இந்திய சமூகங்களின் ஒற்றுமை தேவைப்பட்டது.சுதந்திரத்திற்குப்பிறகு குறிப்பாக மே 13 இனக்கலவரத்திற்குப்பிறகு மலாய் இனத்தவரை முன்னேற்றுவதற்கான புதிய சட்டங்கள் அமுல் செய்யப்பட்டன. ஆனால் இந்த நாட்டின் முழு குடிமகனாக அங்கீகரிக்கபடுவதற்கும்,அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்கும் நீல வண்ண அடையாளக்கார்டை உடையவராக இருக்கவேண்டும்.இந்தியாவில் பிறந்தவருக்கும்,அவர்களுக்குப்பிறந்த பிள்ளைகளுக்கும் சிவப்பு அடையாளக்கார்டு கொடுக்கப்பட்டு வந்தது.சிவப்பு முழுக்குடியுரிமைக்கான அடையாளம் அல்ல.அதனை நீளமாக மாற்றுவதற்கான வழிவகைகள் இடர்பாடுகள் கொண்டது.இருப்பினும் தன்னை இந்த நாட்டின் குடிமகனாகவே கருதி நாட்டின் நலனுக்காக உழைத்தவனை இந்தக்கவிதை எள்ளல் செய்கிறது.

‘மெர்டேக்கா’

என்று அடித் தொண்டையில் கத்தி

குனிந்து

தேசியக்கொடியைத்

தூக்கிப்பிடித்தேன்

ஜோப்பிலிருந்து

சிவப்பு அடையாளக்கார்டு

கீழே விழுந்து

கெக்கென்று சிரித்தது. ( இரா.ஜெக வீர பாண்டியன் )







மெர்டேக்கா: விடுதலை

ஜோப்பி : சட்டைப்பை .................தொடரும்

Comments

மலரும் நினைவுகளுடன் கூடிய நல்ல பகிர்வு ஐயா!

பதிவுலகில் தாங்கள் எழுதுவது மகிழ்வைத் தருகிறது!
ko.punniavan said…
உங்கள் பதிவுக்கு நன்றி. உங்கள் பகிர்வு உற்சாகத்தை அளிக்கிறது.நாம் தொடர்ந்து சந்த்திப்போம்.
ko.punniavan said…
உங்கள் பதிவுக்கு நன்றி. உங்கள் பகிர்வு உற்சாகத்தை அளிக்கிறது.நாம் தொடர்ந்து சந்த்திப்போம்.
Anonymous said…
“உழைப்பதற்கு அஞ்சிடாத தமிழினத்தின்
உயர்வுக்கு வாய்ப்புதவி செய்யவில்லை
ஆவலாக எழுகின்ற முயற்சியினை
அநியாய வாய்ப்புகளே தடுத்திடுது….” ஐயா, கவிஞர் ம.அ சந்திரனின் இந்த கவிதை வரிகளுக்கு ஏற்றவாறு ஏதாவது ஒப்புநோக்கும் புதுக்கவிதை உண்டா?

Popular posts from this blog

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின