Skip to main content

வீண் விவாதங்கள் நம் அறிவீனத்தின் புகலிடமோ?

             

                            வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் நிழல் போல நம்முடன் நடந்து வருபவை. நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது முன்னர் எப்போதோ பதிந்து கிடந்த சம்பவங்களை, மூளை சட்டென இழுத்து வந்து நினைவுப்பட்டியலின் வரிசையில் முதல் ஆளாக நிற்க வைத்துவிடும். குறிப்பாக நண்பர்களுடனான உரையாடலில்போது நமக்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு ஈடான பேச்சு எழுந்தால் இதுபோன்ற அதிசயங்கள் நடந்துவிடும். நாம் படித்து சேமித்து வைத்ததை விடவும், அனுபவித்தவைதான் அதிக அளவில் பதிவாகி வைத்திருக்கும் மூளை. எழுத்துக்களைவிட மனித பிம்பங்களும், அவர்கள் ஏற்படுத்தித்தந்த அனுவங்களும் தாமாகவே மச்சங்கள்போல் அழுத்தமான இடத்தைப்பிடித்து வைத்துக்கொள்கின்றன மூலையின் எங்கோ ஒரு மூலையில். பின்னர் சந்தர்ப்பம் பார்த்து வெளியாகின்றன போலும்.



நான் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் நடந்த சம்பவம் இது.

மாணவர்கள் பள்ளியில் அதிகம் விரும்பும் நேரம் ஓய்வு நேரம். ஏழு எட்டு மணிநேர தொடர் பாட வேளையில் அவர்களுக்குக்கிடைக்கும் ஓய்வு நேரம் சொற்பமான 20 நிமிடங்கள் மட்டுமே. பாடங்களைவிடவும், பிரம்போடும் வன்மமான முகத்தோடும், சமரசமற்ற வார்த்தைகளோடும், எட்டு மணி நேரமும் மாணவர்கள் சந்திக்கும் ஆசியர்களோடு ஒப்பிடும்போது ஓய்வு நேரம் அவர்களுக்குத்தாய்மை சுகம் தரக்கூடியவை. அதனையும் சோதனையின் முடிவுகளை நோக்கிப்போய்க்கொண்டிருக்கும் கல்வியுலகம் சிலசமயம் மாணவர்களிடமிருந்து கொஞ்சமும் கரிசனமின்றிப் பிடுங்கிக்கொள்கிறது.

ஓய்வு நேரத்தில் நடந்த சம்பவத்தைப்பற்றி சொல்லவரும்போது ஏதேதோ குறுக்கே வருகிறது.

எட்டு மணி நேரக்களைப்பை 20 நிமிடத்தில் தீர்த்துவிட மாணவர்கள் வியர்க்க வியர்க்க விளையாடுவதைப்பார்க்கமுடியும். அப்படி விளையாடும்போது ஒரு மாணவன் கீழே விழுந்து பயங்கர வலியோடு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டான். கையில் சிராய்ப்போ காயமோ இல்லை ஆனால் அடிபட்ட இடம் வீட்டுக்குள் வெள்ளம் ஏறுவதுபோல மெதுவாக வீங்க ஆரம்பித்திருந்தது. எலும்பு முறிந்திருந்தால் மட்டுமே வீக்கத்தின் வேகம் அதிகரிக்கும். உடனே கடமை ஆசியரைக்கூப்பிட்டு மாணவனை மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லும்படி கூறினேன். மலேசியப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அதிகமான பதவி உயர்வு உண்டாக்கும்பொருட்டு துணத்தலைமை ஆசிரியர்களே நாலைந்து பேர் இருப்பார்கள்.அப்படிப்பட்டவர்களுள் மாணவ நலத் துணைத்தலைமை ஆசிரியர் ஒருவர் இருப்பார். பையனை அவரிடம் கொண்டு சென்றார் ஆசிரியர். துணத்தலைமை ஆசிரியர் பையனை என்னிடம் மீண்டும் அழைத்து வந்து, “சார் மருத்துவ மனைக்கு வேண்டாம், அங்கே போனால் பையனின் எலும்பு முறிவாக இருந்தால், கையை அசைக்க முடியாத அளவுக்கு பிலாஸ்டர்சின் கட்டு போட்டுவிடுவார்கள் . 3 மாசம் 4 மாசம் நாள் கடந்திடும். அறிப்பு தாங்க முடியாது. போமோவிடம் (மலாய்க்காரகளிடையே கிராமத்துக்கு முப்பது போமோக்கள் (மந்திரவாதி)இருப்பார்கள்.) அழைத்துச்சென்றால் ஒரே நாளில் உருவி சரியாக்கிவிடுவார்கள்,” என்றார்.

“இது சாதாரண வீக்கம்போல் தெரியவில்லை முறிவு ஏற்பட்டிருக்கலாம்,” என்று சொன்னேன். “ தாமதிக்காமல் கொண்டு போங்கள்,” என்று வலியுறுத்தினேன். பையன் வலியால் துடித்துக்கொண்டிருந்தான்.

“சார் வேண்டாம் சார் எனக்குத்தெரியும், இது வெறும் சதை பிசகல்தான் போமோ சரியாக்கி விடுவார்,” என்றார் மீண்டும். என்னிடம் விவாதித்துக்கொண்டிருந்தவர் செம்ம்பிறைச்சங்கத்தில் முக்கிய பதவி வகிப்பவர். முதலுதவி தெரிந்தவர். அவர் அப்படி வாதிடுவது எனக்கு வியப்பாக இருந்தது.

“ ரிஸ்க்கெல்லாம் எடுக்க வேண்டாம் நீங்கள் மருத்துவ மனைக்குக்கொண்டு போங்கள்,” என வலியுறுத்தினேன்

“இப்படி நெறைய கேஸ பாத்திருக்கேன் போமோதான் சீக்கிரம் சரியாக்குவார்,” என்றார் மீண்டும் . பையன் அழ ஆரம்பித்திருந்தான்.

“வேண்டாம் நான் சொல்வதைக்கேளுங்கள் ஏதாவது எசகு பெசகாயிட்டா நாந்தான் பொறுப்பேற்கணும், நீங்க நான் சொல்றபடி செய்யுங்க,” என்றேன் சற்று கறாறான தொனியில்.

“ வேண்டா வெறுப்பாய் பையனைக் கொண்டு போனார்கள்.

ஒரு 30 நிமிடத்துக்குள் மீண்டும் அவர்களின் கார் பள்ளி வாளாகத்துக்குள் நுழைந்தது. மருத்துமனைக்குச்சென்றிருந்தால் இவ்வளவு விரைவில் திரும்பியிருக்கமுடியாது. எக்ஸிரே எடுத்து பிலஸ்டர்சின் போட நேரமெடுத்திருக்கும். அவனுக்கு எலும்பு முறிந்திருக்காதோ! என அனுமானம் பிழையோ என சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் காரை விட்டு இறங்கி வந்ததும்தான் பார்த்தேன், அது மருத்துவ மனைகட்டு மாதிரி தெரியவில்லை. பழைய கைலி ஒன்றைக் கிழித்துக் கட்டியிருந்ததால் நான் சொல்வதைக் கேட்காமல் போமோவிடமே அழைத்துப்போனதை யூகித்துக்கொண்டேன்.

“ஒன்னுமில்ல சார், பிரக்ச்சர்ல்லாம் கெடையாது சார் வெறும் சதைப் பிசகியிருக்குன்னிட்டான் போமோ,” என்றார்.

பயனைப்பார்த்தேன் கொஞ்சம் தெளிவாயிருந்ததுபோல இருந்தான். மருத்துவம் நடந்துவிட்டது. பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே எனக்குச் சரியாகிவிடும் என்ற திருப்தி அவன் மனதில் ஓடியிருக்ககூடும்.

“இதற்குமேல் பேசுவதற்கு ஏதுமில்லை.பிரச்னை வந்தால் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.” என்றேன். எனக்கென்னவோ மனசு சரியில்லை. எனக்கென்னவோ நேரப்போகிறது என்று உள் மனம் உறுத்திக்கொண்டிருந்தது.

“ சரிங்க சார் நான் பாத்துக்கிறேன்,” என்றார்.

பள்ளியில் நல்லது கெட்டது நடந்தால் எல்லாவற்றுக்கும் தலைமை ஆசிரியர்தான் பொறுப்பு. மாணவர் பென்சில் இல்லாமல் வந்தாலும், ஆசிரியர் மாணவரைதண்டித்திருந்தாலும், தேர்ச்சி விகிதம் குறைந்திருந்தாலும், பள்ளிவிட்டு மாணவர் வீட்டுக்குச்செல்லும் வேலையில் விபத்தில் சிக்கினாலும் தலைமை ஆசிரியர்தான் பதில் சொல்லவேண்டும்.



மறுநாள் பையனைப் போமோவிடம் அழைத்துச்சென்றதற்கான பொறுப்பின்மையையும் நானே பொறுப்பேற்கவேண்டிய நிர்பந்தம் வலிய தேடி வந்துகொண்டிருந்ததை என்னால் யூகிக்கமுடிந்தது. இரு பெண்மணிகளுடன் அந்தப்பையனும் என் அலுவலகம் நெருங்கிவிட்டார்கள். அன்றைக்கு நான் விடுமுறை எடுத்திருக்க வேண்டும்! தெரியாமல் பள்ளிக்கு வந்துவிட்டேன்.

“இங்கே யார் தலைமை ஆசிரியர்?,” என்று என்னிடமே ஆங்கிலத்தில் கேட்டார் அவர்களில் ஒருவர்.

“நாந்தான் ..... பிலீஸ் உட்காருங்கள்,” என்றேன்.

“ நான் உக்காரெல்லாம் வரல, இவன ஏன் போமோகிட்ட கொண்டு போனிங்க, பள்ளி சடட்திட்டத்துல போமோக்கிட்ட அழச்சிட்டுப்போனும்னு ஏதும் இருக்கா?” என்றார் தடாலடியாய். “பிரக்ச்சருக்கு உடனே மருத்துவ மனைக்கு அனுப்பனும்னு தெரியாதா ஒரு தலைமை ஆசிரியருக்கு?”

ஒரு முட்டாளைப்போல நான் விழிபிதுங்க ஆரம்பித்தேன். என்ன பதில் சொல்வது என்று வாத்தைகளைத் தேடிக்கொண்டிருந்தேன். வார்த்தைகள் இருந்தால்தானே கிடைக்க!

“ நான் உங்க மேல நெக்லிஜன்சுக்காக கேஸ் போடப்போறேன்” என்றார். எனக்கு வெளவெளக்க ஆரம்பித்தது.

“ நான் ஒரு ஸ்டாப் நெர்ஸ், எம்பிள்ளையவே போமோக்கிட்ட அனுப்பினான். மத்த பிள்ளைங்க கதி என்னாவரது? என்று பொரிந்து தள்ளிக்கொண்டிருந்தார். இப்படியா மாட்டுவேன்.

‘எனக்கொரு உம்ம தெரிஞ்சாகணும்’ பிடிவாதத்தில் பேசிக்கொண்டே இருந்தார் அவர்.

என்னால் அதற்குமேல் உட்கார்ந்திருக்க முடியவில்லை. உடல் சூடு நாற்காலிக்கும் பரவிக்கொண்டிருந்தது. “excuse me” கேட்டுவிட்டு அலுவலகத்தைவிட்டு வெளியேறி, அந்தத்துணைத்தலைமை ஆசிரியரை அழைத்துக்கொண்டு வந்து,” பதில் சொல்லுங்கள்,” என்றேன்.

என்னிடம் கேட்டதையே அவரிடமும் ஒப்புவித்தார் அந்தப்பெண்மணி. வசவுகளையெல்லாம் இருவரும் பாராபட்சமின்றி சரிபாதியாய் பகிர்ந்துகொண்டோம்.

துணைத்தலைமை ஆசிரியர் தேமே என்று விழித்ததுதான் மிச்சம். நான் வாய்மூடி அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி மனதுக்குள் உலாவிக்கொண்டிருந்தது. சொன்னா கேக்கனும்!

பிறகு அதற்காக மன்னிப்பெல்லாம் கேட்டு அம்மையாரைச்சாந்தப்படுத்தி ஒருவழியாய் அனுப்பிவைத்தாயிற்று என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இப்படிப்பட்ட நிறைய சம்பவங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாமோ?

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின