Skip to main content

அகமும் புறமும்- வெண்ணிலாவின் கவிதை

நான் வேலை செய்த பழைய அலுவலகத்தில் தற்செயலாக ஒரு பெண்மணியின் அறிமுகம் கிடைத்தது. களையான முகம் அவருக்கு. எவ்வளவு சிக்கலான வேலையாக இருந்தாலும், அதன் சூட்சுமங்களை எளிதாகப் புரிந்துகொள்வார். விரைவாகவும் செயலாற்றுவார். தன் வேலையைமட்டுமல்ல, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் வேலைகளுக்கும் ஒத்தாசை செய்வார். பழகிய கணத்திலேயே ஒருவருடன் நட்பு பாராட்டத் தொடங்கிவிடுவார். மகிழ்ச்சியும் கலகலப்பும் இணைந்த அவருடைய நடவடிக்கைகளால் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வில் திளைத்திருப்பவராகவே அவரைப்பற்றி எண்ணத் தோன்றியது. அப்படித்தான் சில நாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் உண்மை அதுவல்ல என்பதையும் தீராத எண்ணற்ற துயரங்களால் நிறைந்த இல்வாழ்க்கையையே அவர் வாழ்ந்து வருகிறார் என்பதையும் வெகுவிரைவில் அறிந்தபோது வருத்தமாக இருந்தது. புன்னகையையும் கலகலப்பையும் சுறுசுறுப்பையும் கவசமாக்கி தன் துயரங்களைத் தாங்கிக்கொள்ளப் பழகியிருந்தார். அகக்கோலத்துக்கும் புறக்கோலத்துக்கும் உள்ள தொடர்பு எப்போதும் ஓர் எளிய சமன்பாடல்ல. சிக்கல் தன்மை உடையது. காட்சித் தோற்றத்தை வைத்து அதை எப்போதும் எடைபோட்டுவிட முடியாது.




வெண்ணிலாவின் கவிதையில் வெறுமை சூழ்ந்த ஒரு வீட்டின் புறச்சித்திரம் இடம்பெற்றிருக்கிறது. குப்பைகளும் தூசியும் தேங்கி சுத்தமில்லாத தாழ்வாரம். ஈரமற்ற கிணற்றங்கரை. யாராலும் பயன்படுத்தப்படாமல் ஓரமாக உருட்டிவிடப்பட்ட வாளி. துடைக்கப்படாமல் புழுதி படர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட கார். தாளிடப்பட்ட கதவு. தோட்டத்திலோ, கதவோரத்திலோ, சன்னலோரத்திலோ எங்குமே மனித நடமாட்டமே தென்படாத சூழல். எல்லா இடங்களிலும் ஒரு வெறுமை பற்றிப்படர்ந்திருக்கிறது. ஆனால் அந்த வெறுமையை ஈடுகட்டுகிற வகையில் விதவிதமான பூக்கள் எல்லா நாட்களிலும் வீட்டின் முன்வாசலில் பூத்துக்குலுங்குகின்றன.



வெறுமையை மறைக்க என்னும் சொல்லாட்சியைக் கவனிக்கவேண்டும். இது ஒரு நுட்பமான தகவலை நமக்கு வழங்குகிறது. அதாவது, அந்த வீடு நாம் நினைத்திருப்பதுபோல ஆளற்ற வீடோ அல்லது நடமாட்டமில்லாத வீடோ அல்ல. நடமாட்டம் உள்ள வீடுதான். வெறுமை படரும்வகையில் அவர்களுடைய வாழ்வில் ஏதாவது நிகழ்ந்திருக்கலாம். வெறுமையின் விளைவாக வீடு கவனிப்பாரில்லாமல் கிடக்கிறது. ஆனால், அந்த வெறுமையை மற்ற வீட்டார்கள் உணர்ந்துவிடாதபடி, பல நிறங்களில் வாசலில் பூப்பூத்துக் குலுங்கும்வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அகவெறுமையை புறத்தில் செடிவளர்த்து ஈடுகட்டிவிடலாம் என்பது மிகப்பெரிய தப்புக்கணக்கு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உலகவழக்கு. முகத்தில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, செயற்கையாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் அதிக நாட்கள் நம்பவைக்கமுடியாது.



கவிதையைப் படித்த பிறகு, ஒரு வீடு என்பது என்ன என்றொரு கேள்வி மனத்தில் மிதந்தெழுந்து வருகிறது. அது வெறும் கல்சுவர்களாலோ அல்லது தளங்களாலோ அல்லது வேலைப்பாடு மிக்க தூண்களாலோ கதவுகளாலோ உருவானதல்ல. ஒரு வேலியும் தோட்டமும் சுவர்களும் கூரையும் ஒருபோதும் வீடாகாது. அது ஒரு கட்டுமானம். அவ்வளவுதான். மனிதர்கள் ஒன்றாகக் கூடி, ஒருவருக்கொருவர் அன்பும் கருணையும் கொண்டு வாழக்கூடிய ஓரிடம்தான் வீடு. பரம்பரை பரம்பரையாக மனிதர்கள் பிறந்து வளர்ந்து சிரித்து விளையாடி இன்பமுடன் வாழ்ந்துவரும் இடமே வீடு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சுதந்திரமாக தம்மை உணர்ந்து மகிழ்கிற இடமே வீடு. இவற்றில் எது குறைந்தாலும் வீட்டின் அழகு குலைந்து வெறுமை படர்ந்துவிடும். வெறுமையை அகற்றுகிற நடவடிக்கை, வெறுமை பிறப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து நீக்குவதுதானே தவிர, வெறுமையின் தோற்றம் வெளிப்பட்டுவிடாதபடி அழகான பூச்செடிகள் வளர்ப்பதல்ல. அது கைப்புண்ணை கையுறைகொண்டு மறைப்பதற்கு நிகரானதாகும். வண்ணவண்ணப் பூச்செடிகளின் இருப்பு வாசலின் அழகைப் பலமடங்காகப் பெருக்கும் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் அழுக்கடர்ந்த வாசலில் அந்த அழகு பொருளிழந்துபோய்விடும்.



இப்போது கவிதைக்கு அப்பால் சென்று, இக்காட்சியை சற்றே படிமப்படுத்திப் பார்க்கலாம். அகஅழகு, புறஅழகு என இரண்டுவிதமான அழகுகளைப்பற்றி நம் இலக்கியங்கள் பேசுகின்றன. நம் மூத்தோர்களும் பேசியிருக்கிறார்கள். புறஅழகைவிட அகஅழகையே முக்கியத்துவம் வாய்ந்ததாக பலரும் சொல்லியிருக்கிறார்கள். அகஅழகே இல்லாத மனிதர்களுடைய புறஅழகுக்கு சமூகத்தில் எவ்விதமான மதிப்புமில்லை. வாய்மை ஓர் அகஅழகு. இன்சொல் ஓர் அகஅழகு. இரக்கம் ஓர் அகஅழகு. புன்னகையை ஒரு புறஅழகாக எடுத்துக்கொண்டோமேயானால், வாய்மைக்கும் இன்சொல்லுக்கும் இரக்கத்துக்கும் இணையானதாக புன்னகையை ஒருபோதும் வைக்கமுடியாது என்பதே அனுபவப்பாடம்.









*



வெண்ணிலாவின் கவிதை



பேருந்துப் பயணத்தில்

தினம் பார்க்கமுடிகிறது அந்த வீட்டை



சாலையோர தூசிகளைத் தாங்கி தாழ்வாரம்

ஈரமற்ற கிணற்றோரம்

காக்காயோ நாயோ

ஈரம் தேடி ஏமாந்து உருட்டிய வாளி

அதே நிலையிலேயே நின்றிருக்கும் கார்

நிரந்தரமாய் தாளிடப்பட்ட கதவு



ஒருநாள் கூட

மனித முகங்களையே வெளிக்காட்டாத

அந்த வீட்டில்-



வெறுமையை மறைக்க

விதம்விதமாய்

பூத்துக் குலுங்குகின்றன பூக்கள்

எல்லா நாட்களிலும்



*





எளிய வரிகளின் வழியாக எண்ணற்ற கேள்விகளை வாசகர்களின் மனத்தில் உருவாக்கும் கவிதைகளை எழுதுகிறவர் வெண்ணிலா. நீரிலலையும் முகம் இவருடைய முக்கியமான கவிதைத்தொகுதி.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த