Skip to main content
பாயாஸ்கோப்பில் படம் தெளிவாகவே கிடைத்திருக்கிறது.



சை.பீர் முகம்மதுவின் பாயாஸ்கோப் காரனும் வான்கோழிகளும் சிறுகதை மிகச்சரளமாக சொல்லப்பட்ட அவரின் சமீபத்துக் கதைகளில் ஒன்று. கதை தொடக்கத்திலிருந்து கடைசிப் புள்ளிவரை தேக்கமில்லாமல் செல்கிறது. அரை நூற்றாண்டுக்கு முன்னால் இருந்த தோட்டத்திருவிழா கோலத்தையும் அன்றைய மக்களின் கேளிக்கை மனோபாவத்தையும், முன்னெடுத்துச்செல்கிறது கதை. கையில் பணப்புழக்கமில்லாத தோட்டப்பாட்டாளிகள் திருவிழா நேரத்தில் கவலையை மறந்து வாழக்கையை ரசித்து அனுபவித்து மகிழ்ந்தத்தை நினைக்கும்போது இப்போது பொறாமையை உண்டாக்குக்கிறது. இப்போது கையில் காசிருந்து என்ன செய்ய? மெகாசீரியல் கதைகள் வாழ்க்கையயை சீரியஸ் ஆக்கி காலையிலிருந்து பின்னிரவுவரை கண்ணீர்மழையில் நனைய வைத்து விடுகிறது. அதுவும் விலை கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்கிற சோகம். வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டும் இருந்தால் சீராக இருக்காது இல்லையா! அதனால் வானவில் புண்ணியத்தில் துக்கமும் ஊடுருவி சமன் செய்துவிடுகிறது.

நம்ம நாட்டில் பாயாஸ் கோப்பு ஏது என்று என் மனைவி கேட்டாள். தோட்டத்தில் வாழ்ந்த அனுபவம் இல்லாதவளுக்கு இந்த பயாஸ்கோப் விஷயம் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை. அந்த தூங்கு மூஞ்சி மரம், தசரத ரஜ குமார,சைக்கிலின் கானில் காதல் மனைவியை இருகைகளின் அணைப்பிலிருந்தபடி சவாரி செய்வது, சைக்கிலை மிதித்துக்கொண்டே உச்சஸ்தாயியில் பாடும் தியாக ராஜ பாகவதரின் பாடல், அந்த வெற்றிலைப்பாக்குப்பை, கேரியரில் பாயாச்கோப் பெட்டி எனக்காட்சிப்படுத்துதல் செவ்வனே நடந்தேறியிருக்கிறது. தோட்டத்து அன்றாட நிகழ்வுகளில் அவர் குறிப்பிடும் சிலவற்றை நான் சந்தித்த நினைவு இல்லை. ஆனால் அன்றைய தோடப்புறச் சூழலை பின்னோக்கிப்பார்க்கும்போது அந்தச்சம்பவச்சரடுகள் நடந்திருக்கக்கூடும்.

சுருக்குப்பையில் பணம் சேர்க்கும் செல்லாம்மாவின் மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கும் ஆசை நிறைவேறுமா என்ற சந்தேகம் வசகனுக்கு உண்டாவது இயல்புதான். சைக்கிலில் ஊர் ஊராகச்சென்று பாயாஸ்கோப் பிஸ்னஸில் அப்படி என்ன சம்பாதிதுவிட முடியும்?அது என்ன கணினி மென்பொருள் கண்டுபிடிப்புமாதிரியா என்ன? தோட்டப்புற மக்கள் கையில் பணம் கொட்டியா கிடக்கிறது? கொஞ்சம் கொஞ்சமா சேர்த்த பணம். புள்ளக்குட்டி இல்லாத தம்பதி என்று சொல்லி இக்குறையை நேர் செய்கிறார் கதைசொல்லி. அதனால் மன்னித்துவிடலாம். பாவம் ரஜூலாவில் பயணம் செய்யட்டும் என்று தம்பதிகளின்பால் நமக்கு கழிவிரக்கம் உண்டாகிறது. ‘ஊரை நாடை”ப்போய்ப்பார்த்து வருவது அந்தக்கால மனிதர்களின் அபிலாசையாக இருந்திருக்கிறது. அப்போதைய தலைமுறைக்கு ஒட்டுறவு இருந்திருக்கிறது. இப்போது என்னைக்கேட்டால் எனக்கு எந்த ஊர் என் ஊர் என்று சொல்லத்தெரியவில்லை. அறுந்துவிட்டது. எனக்குத்தெரியவில்லையே என்று யாராவது கேலி செய்யும் பட்சத்தில், ஆரூடம் சொல்வது போல எந்த ஊரின் பெயரையாவது அள்ளி விட்டு சமாளித்துக்கொள்ளலாம்..



தமது நாடக சகாவான கோபாலை கதையின் முகாந்திரமான தளத்தில் நிறுவ முனையும் கதைசொல்லியின் முயற்சி சிக்கலில்லாமல் நிகழ்கிறது. இது வாழவனுபவத்திலிருந்து உருவி எடுக்கப்பட்ட நிதர்சனத்தை கட்டியம் கூறுகிறது. கோபால் கதைக்குள் நுழைந்தவுடன் கதையின் கேளிக்கை போக்கு இடம்பெயர்ந்து சற்று காத்திரமாக மாறுகிறது. நாடகம் நடித்த காலத்திலிருந்து மாரியின் தீவிர ரசிகனாக இருந்து பழுது படாத நட்பைப்புலபடுத்தும் ஓரிரு காட்சிப்படிமங்கள் கோபாலின் பாத்திரத்தன்மையை கட்டமைத்து முன்னிறுத்தும் அவரின் முயற்சி சோர்வடையவில்லை. பால்யகால் நண்பனைவிட நல்ல நிலையில் இருந்தாலும் பழைய நட்பை பாரட்டும் கோபாலின் மாறாத பண்பைக் கதைப்போக்கில் சொல்லிச்செல்வது கதையின் கனத்தைக் தீர்மானிக்கிறது.



சீனனிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பித்தருவதில் கோபால் திக்குமுக்காடும் காட்சியில் காடு மேடெல்லாம் சைக்கில் மிதித்து சம்பாதித்த பணத்தைக் கோபாலுக்குத்தெரியாமலேயே செலுத்தி நேர் செய்வது, கோபால் தன்னிடம் காட்டிய நட்புக்கும் கரிசனத்துக்குமான நன்றிக்கடனென வாசகனை உருக வைப்பது இயல்பாக நிகழ்கிறது.

உனக்கு மதுரை மீனாட்சியம்மனைப் பார்க்க முடியலன்னு வருத்தமா என்று செல்லம்மாவை கேட்கும் இடமும் அதற்கான செல்லம்மாவின் பதிலும் கோபாலின் கடனை அடைக்கும்போது வாசகனுக்கு உண்டான கழிவிரக்கத்தை மேலும் ஈரமாக்குகிறது. கடனை அடைத்தது கோபாலுக்குச் சொல்லாமல் இருந்ததும், பின்னர் கோபாலுக்குத்தெரிய வரும்போது நிகழப்போகும் நெகிழ்வும் வாசகமனம் கதை முடிந்த பின்னர் அனுபவிக்கப்போகும் இடத்தை காலியாக விட்டுச்சென்றிருப்பது கதையின் முடிந்தும் முடியாத வெற்றிடத்தை இட்டு நிரப்புகிறது.

சமீபத்தில் அவர் தொகுத்து வெளியிட்ட ‘பயாஸ் கோப்காரனும் வான்கோழிகளும்” என்ற சிறுகதைத்தொகுதியில் மிகச்சிறந்த கதையாகப்படுகிறது எனக்கு.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த