Skip to main content
கடைசி மணியின் அவலச் சப்தம்


கோ.புண்ணியவான்



கடந்த ஆண்டு இலக்கியச்சுற்றுலாவை முடித்துக்கொண்டு, சென்னை புக்செண்டரிலிருந்து என் வாசிப்பிற்கான நூல்களோடு, என் பேத்திக்கும் சில நல்ல கதைப்புத்தகங்களையும் வாங்கி வந்தேன்.அவள் பள்ளிக்குப் போகுமுன்பே எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்திருந்தாள்.வாசிப்பதைத் துரிதமாக்கவும்,அவளின் சிந்தனை ஆற்றலைத் திறந்துவிட அந்தக் கதைப்புத்தகங்கள் சாவியாகப்பயன்படும் வண்ணம் தேடித்தேடி, மேலோட்டமாக வாசித்து வாசித்து நூல்களைத்தெரிவு செய்து வாங்கி வந்தேன். நூல்களில் பக்கத்துக்குப்பக்கம் வண்ண ஒவியங்கள் வரையப்பட்டிருந்தன.மிருகங்களின் படங்களும் பிராணியின் படங்களும் அவற்றுக்கான சூழலும் கிராபிக் முறையில் தீட்டப்பட்டிருந்தன. இந்தக்கவர்ச்சி என் பேத்தியை பெரிதளவில் ஈர்க்கும் என்ற நம்பிக்கை எனக்குள் இழை இழையான மகிழ்ச்சி நகர்ந்து என்னை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தது. இந்நூல்களை வாசித்தறியும் ஆற்றலை அப்போதைக்கு அவள் அடையவில்லை என்றாலும் நான் கையாளப்போகும் உத்தி அவளைக் கதைக்குள் இழுத்துக்கொள்ளும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது.

கதையின் முதல் கால்வாசிக்கதையை அவளுக்குப்புரியும்படி ஏற்ற இறக்கத்தோடும் உணர்ச்சிப்பொங்கவும் வாசித்துக்காட்டுவேன். அதில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களையும் அவளின் புரிதலை எளிமையாக்கத் துணையாகக்காட்டி, அவளின் கதை கேட்கும் ஆவலைத்தூண்டிவிடுவேன். வலைக்குள் சிக்கிக்கொண்ட மீன்போல அவள் என் கதை வலைக்குள் பிடிபட்டு விடுவாள். கதை சூடு பிடிக்கும் நேரத்திலும்,

அவளின் ஆவல் அதிகபட்சமாக கூடிவிட்ட நேரத்திலும் மீதிக்கதையை நீயே படித்துக்கொள் என்று சொல்லி நழுவிவிடுவேன்.என்னை தொடர்ந்து வாசிக்கச்சொல்லி என் பேத்தி என்னதான் கெஞ்சினாலும் அவளே வாசித்தறியும் சுய முயற்சியைக்கடைபிடிக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாய் இருந்துவிடுவேன். என் மாணவர்களுக்குக் கதை படிக்கும் பழக்கத்தை இந்த உத்தியைக்கையாண்டுதான் கற்பித்து வெற்றிகண்டிருக்கிறேன்.(கதை படிக்கும், படிப்பிக்கும் நிலை இன்றைய பாட அட்டவணை நெருக்கடியில் இடமில்லாமல் செய்திருப்பது நகைச்சுவைக்குரிய விஷயம்) என் பேத்தியிடமும் என் செக்கு செல்லும் என்ற மேலாண்மை என்னிடம் மேலோங்கியிருந்தது.



நான் கொண்டு சென்ற கதைப்புத்தகங்களை ஒருநாள் அவளிடம் ஒவ்வொன்றாகக்காட்டி, பூர்வாங்க முறையில் அவளின் அடைப்படை ஆர்வத்தைக்கிளற பிரயத்தனம் செய்துகொண்டிருந்தேன்.நான் விரித்த வலைக்குள் அவள் மெல்ல சிக்குவதுபோலப் பட்டது.

எனக்கு முன்பே என் மனைவி சில அடிப்படை தமிழ்ப்பயிற்சிப்புத்தகங்களை அவளிடம்கொடுத்து பயிற்சி செய்வித்து வந்திருக்கிறாள். இந்தக்கதைப் புத்தகங்களைப் பார்த்தவள் சிவ பூஜைக்குள் கரடி நுழைந்துவிட்டதாய் திடுக்கிட்டு இதனை அபகரித்து “பரீட்சையில அவள் நல்ல மார்க்கு வாங்கணும், மொத இதெல்லாம் செய்து முடிக்கட்டும் பின்னால கதையப்படிக்கலாம்,” என்று கறாராகவே தன் அபிப்பிராயத்தை என்னிடம் திணித்தாள். பள்ளியின் துவக்க நாளே சோதனைக்குத் தயார்படுத்துவது போன்ற அவளின் ஆர்ப்பாட்டம் என்னைத் துணுக்குறவைத்தது.



எத்தனை தாய்மார்கள் இதுபோன்ற மனோநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது கூர்ந்து நோக்குபவர்கள் அவதானிக்கலாம். மார்க்கட்டில் இருக்கும் எல்லா பயிற்சிப்புத்தகங்களைச்செய்து முடிப்பதென்பது முடியாத காரியம். அது அட்சய பாத்திரம் மாதிரி முடிவில்லாமல் வந்துகொண்டே இருக்கும். இந்நாட்டில் புனைகதைகள் நூல்கள் எழுதப்படுவதைவிட பாடப்பயிற்சிப்புத்தகங்கள்தான் எண்ணிக்கையில் அதிகம் எழுதப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகின்றன. அதன் வணிகத்தேவையை தூண்டிவிட்டது சோதனைகள்தாம்.

கதைப்புத்தகத்தின் வண்ண ஓவியங்களின் தன்னை மறந்து காந்தமென ஈர்க்கப்பட்டிருந்தவள் முகத்தில் ஏமாற்றம் எறும்புபோல ஊரத்துவங்கியது.

“கதையில் ஆர்வம் வந்தா, நெறைய வாசிக்க ஆரம்பிப்பா,மொழியில் புலமை ஏற்படும், அப்புறம் எல்லாப் பாடங்களிலும் நல்ல மார்க்கு வாங்குவா,”என்று நான் வாதிட்டேன்.

“பயிற்சி நெறைய செய்தாதான் நல்ல மார்க்கு வாங்கமுடியும், கதை படிச்சா புத்தி திரும்பத் திரும்ப கதைக்குத்தான் போகும்,” என்று எதிர்வாதம் செய்தாள்.(ஒரு முக்கிய அறிவிப்பு.....கதை சொல்லும் பாட்டிகள் சில அரிதாக காணப்பபடும் உயிரினங்கள் போல அருகிப்போய்க்கொண்டிருக்கிறார்கள்-extinction)

நான் எழுத்தாளானாய் இருப்பதில் அவளுக்குக் கோபம் இருந்திருக்கக்கூடும். வீட்டுக்காரியங்களைச் சரிவர கவனிக்காதது என் எழுத்து ஆர்வத்தினால் வந்தது என்ற எண்ணியிருக்கக்கூடும்.என்னுடைய நூல்கள் பல விற்கப்படாமல் வீட்டின் மூளையில் முடங்கியிருப்பதும் அவளின் ஆதங்கத்தைக்கிளறியிருக்கக்கூடும்.(ஏறத்தாழ குப்பை அந்தஸ்த்தை எட்டிவிட்டதை அகற்றாமல் வைத்திருந்தால், எந்த இல்லத்தரசிக்குத்தான் கடுப்பு வாராது) பலரின் நூல்கள் வெளியிடும்போது அதற்காக அலைந்ததும், முதல் நூல் வாங்க பிரமுகர் தேடுவதில் நான் பட்ட சிரமங்களையும் (அதில் சிறிதளவு அவமானங்களையும் என்று வாசகர் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம் –பாதகமில்லை) அவள் உன்னிப்பாக உள்வாங்கியிருந்திருப்பாள்.

“நான் தலைமை ஆசிரியராக இருந்தவன், முறையான ஆசிரியர் பயிற்சியை முடித்தவன். எனக்கு உளவியல், போதானாமுறை கசடற தெரியும்,” என்று என் தரப்பு வாதத்தை முன்வைத்தேன்.

“அத தூக்கி குப்பையில போடுங்க, புள்ள பயிற்சி செய்யட்டும்,” என்று அன்றைய விவாதத்தை ஹிட்லர் சர்வாதிகாரத்தனத்தோடு முடித்துவைத்தாள்.

இன்றைய பெற்றோர்களின் மனப்பான்மைக்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டாம்.சோதனையில் எல்லா பாடங்களிலும் தம் பிள்ளைகள் A பெறவேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருக்கிறார்கள்.அடுத்த வீட்டு பிள்ளைகளைவிடவும், உறவினர் பிள்ளைகளைவிடவும், சக மாணவர்களைவிடவும், தம் மக்கள் மேன்மையில் இருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள்.இன்றைய கல்விச்சூழல் அப்படி அமைக்கப்பட்டுவிட்டது.மக்கள் மனதிலும் அப்படிப்பட்ட ஆற்றாமை கரையான் புற்றென வளர்ந்துவிட்டிருக்கிறது.எல்லாப்பாடத்திலும் ஏ பெற்றால் வாழ்க்கையில் ஜெயித்துவிட்டதான பிம்பத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்,பாவம்!

யு.பி.எஸ்.ஆர் முடிவுகள் வெளியிடப்பட்டு பரபரப்பாக ‘ஆக்கப்பட்ட’ நேரத்தில் (ஆம் பரபரப்பாக ஆக்கப்பட்டதுதான்.பத்திரிகை,மின் ஊடகங்கள் செய்யும் கைங்கர்யம்)என் நண்பர் செபஸ்தியன் எழுதி, குறுந்தகவல் மூலம் எனக்கு அனுப்பிய கவிதை ஒன்றை வாசகர் பார்வைக்கும் கொண்டுவருகிறேன். (இந்த மனுஷனை நெறைய கவிதை எழுதுங்கையா, உங்களுக்கு கவிதை நல்லா வருது. அத வளத்துக்குங்கைய்யா என்று பலமுறை தலப்பாட அடிச்சுக்கிட்டேன்)அவர் எழுதிய கவிதை இதோ.

கணிதத்தில் A

மலாயில் A

அறிவியலில் A

ஆங்கிலத்திலும் A

தமிழிலும் A

ஆனால் வாழ்க்கையில மட்டும்

முடியலைA ! என்று தன் அங்கதப்பார்வையைச் சுருக்கெனத்தைத்திருந்தார்.



பல முறை தமிழ்ப்பள்ளிகளில் நடக்கும் கூட்டங்களுக்குப்போகும்போது அங்குள்ள நூல்நிலையங்கள் இயங்குவதைப்பார்த்திருக்கிறேன். ஒரு பழைய மர அலமாரியில் புத்தகங்கள் அடுக்கி, இரும்பு பூட்டு போட்டு பூட்டி வைத்திருப்பார்கள்.சாவியும் அநேகமாக தொலைந்து போயிருக்கும்.அவசியமான நேரத்தில் திறக்கவேண்டிய நிர்ப்பந்தம் நேரும் வேளையில் சாவிக்காக நூல் நிலைய ஆசிரையரைகேட்டால் அது தலைமை ஆசிரியரிடம் இருக்கும் என்பார். தலைமை ஆசிரியரைக்கேட்டால் அது நூல் நிலைய ஆசிரியரிடம்தான் இருக்கும் என்பார். இதற்கிடையில் நூல் நிலைய ஆசிரியர்களாகப் பலர் மாறி மாறி செயல்பட்டிருக்கவும் கூடும். இவர்களுள் மாற்றலாகி சென்றவரும் இருப்பர். சாவியை யாரிடம் கேட்பது? கடைசியில் சாவி கிடைக்காது என்று ஆனதும் சுத்தியலுக்கு வேலை வந்துவிடும். அலமாரியின் துருவேறிய பூட்டை உடைக்கு நிலை வந்துவிடும்.



அலமாரியில் இருக்கும் நூல்கள் ஹைதர் காலத்து நூல்களாக இருக்கும்.இன்றைய வாசிப்புக்குத் தகுந்த நூல்களைப் பார்ப்பது கடினமான ஒன்றாகவும் இருக்கும்.அதிலும் மாணவர் வாசிப்புக்கான கதை நூல்கள் நைந்தும் கிழிந்தும் போயிருக்கும். இடையில் வாங்கப்பட்ட நூல்கள் களவாடப்பட்டிருக்கும். முறையாகத்திரும்ப பெறமுடியாத நிர்வாக முறை இடரை எட்டியிருக்கும். ஆசிரியர்களுக்கு வாசிப்பதில் ஆர்வம் இல்லாத காரணத்தால் இந்தப்பிரச்னைகள் வளர்ந்துவிடுவது உண்டு.வாசிப்பதில் ஆர்வம் இல்லையென்றால் புத்தகங்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கமுடியாது அல்லவா! அவர்களைச்சொல்லி என்ன செய்ய? இன்றைய கல்விநிலை அப்படிப்பட்டது.சோதனையை முன்னிலைப்படுத்தி நகர்த்தப்படும் கல்விநிலை. இல்லையென்றால் பன்னிரெண்டு வயது பாலகனிடம் எனக்கு ஏழு A வேண்டும் என்ற அராஜகத்தைச் செலுத்துவோமா? எல்லாருக்குமே ஏழு A வேண்டும் என்ற மிட்டாய் பிடிவாதம் வள்ர்ந்துவிட்ட சமூகத்திடம் படைப்பாக்கம், புனைவு ஆற்றல் பற்றிய கருத்தாக்கம் செல்லுபடியாகுமா என்ன? (ஆசிரியர் வர்க்கத்திலிருந்து உருவாகும் படைப்பாளர்களை எண்ணிப்பாருங்கள்) இந்த Aக்கள் முகாமையாக்கப்பட்டதால் மாணவர் உலகமாக இருக்கவேண்டிய பள்ளிக்கூடங்கள், அத்து மீறிய சமூக, அரசியல் போன்ற பொது அமைப்புக்கள் பங்கு போட்டுக்கொள்ளும் இடமாக மாற்றங்கண்டு வருகிறது. கிடைக்கும் ஏக்களை அவர்களும் கூறு போட்டுக்கொள்ளலாமல்லவா! இந்த லட்சணத்தில் இலக்கியச்சிந்தனை வேர்விடவேண்டிய இடம்., தூர் வாரவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டிருப்பது அவலம்.



பள்ளிகளில் கதை சொல்வது, கதைகேட்பது போன்ற மனதை குஷிப்படுத்தும் கேளிக்கை அம்சங்கள் குறைந்துவிட்டன. சோதனையில் இப்படித்ததான் எழுதவேண்டும், இதுதான் இந்தக்கேள்விக்கான பதில் என்ற இயந்திரத்தன்மை சீரிய அளவில் கையாளப்படுகிறது. இதனால் மாணவர்களின் சுய சிந்தனை வளர்ச்சிக்கு குந்தகம் உண்டாக்குகிறோம்.அதற்குமேல் மாணவர்கள் கூடுதல் சிந்தனையை வளர்க்கவிடாமல் முட்டுக்கட்டை விதிக்கிறோம்.படைப்பாக்க மனம் மாணவர்களிடமிருந்து சப்தமில்லாமல் அபகரிக்கப்படுகிறது. (கட்டுரை எழுதக்கோரும் வினாக்களை கவனியுங்கள்-80 சொற்களிலிருந்து 100 சொற்களுக்குள் கட்டுரை அமையவேண்டும் என்ற கட்டாய வரையறையானது, அதற்குமேல் சிந்திக்கக்கூடாது என்ற சர்வாதிகாரத்தைத்திணிக்கிறது.

அதனால் தான் இன்றைய கல்விச்சாலையை மாணவர்கள் விரும்புவதில்லை. இது கசப்பான உண்மை! பள்ளியின் கடைசி மணி அடிக்கும்போதும், விடுமுறை விடப்படும் பள்ளியின் இறுதி நாளிலும், மாணவர்கள் பள்ளி வளாகத்தைவிட்டு சொல்ல முடியாத மகிழ்ச்சியோடு, கூச்சலிட்டுக்கொண்டு வெளியே ஓடுவதைப்பார்க்கும்போதும் ‘கல்விச்சாலையை மாணவர்கள் விரும்புவதில்லை’ என்று நான் கூறுவதற்கான கட்டியமாகப் புரியும்.....!

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின